Wednesday, October 05, 2016

குழலுடைந்தால் எழுமோ நாதம்?

முதலில் ஒரு சின்னக் கவிதை, பின்னர் கதை.  ஒன்றல்ல இரண்டு.

ராபர்ட் கிரேவ்  என்பவரின்  ஆங்கில கவிதை, ஒரு பெண்ணைப் போற்றுவதற்காக எழுதப்பட்டிருந்தாலும், ஒரு நல்ல தத்துவத்தை போதிப்பதாக  எனக்குப்பட்டது. அந்த பகுதியை மட்டும் சுமாராக மொழிபெயர்த்த வரிகள் :

பனித்துளி ஒன்று தன்னுள் அடக்கியது
மலையும் வனமும், விசும்பும் கடலும்
பருவம் ஒட்டி பல்விதமாய் காட்டியது
ஆனால்
விலையிலா வைரத்தில்  அவை யாவும்
சிதர்ந்ததே எத்திக்கும்  மின் மினி ஒளியாய்
ஒருங்கி ணைத்து காண்பவர் இலர்
இயற்கையின் அழகை எல்லாம்.

’வழியிருந்தால் கடுகுள்ளே மலையை காணலாம்’ என்பது நிஜமோ இல்லையோ பனித்துளியின் பிரதிபலிப்பில் மலையையும் வானத்தையும் காண்பது என்னவோ நிஜம். ஆனால் வைரமோ ஒளிக்கூறுகளை சிதைத்து ஜொலிக்குமே அன்றி ஒரு முழு மையான பிரதிபலிப்பைக் கொடுக்காது.
இப்போது அதே பனித்துளியையும் வைரத்தையும்  மையமாகக் கொண்ட ஒரு கதை

புல் தரையில் அதிகாலை வேளை மெல்ல ஊர்ந்து வந்தது ஒரு புள்ளி வண்டுயாரோ தவற விட்டிருந்த ஒரு கண்ணைப் பறிக்கும் வைரக்கல்லைப் பார்த்ததுமே அது பெரிய இடத்தை சேர்ந்த சம்பந்தம் என்பதைப் புரிந்து கொண்டு ஒரு வணக்கம் போட்டது.



( கபீர் வலைப்பூவுக்கென  பிரத்யேகமாக ஃபோட்டோஷாப்-பில்  தயாரிக்கப்பட்ட படம்)

அதுவும் அதை ஒரு நமட்டு சிரிப்புடன் அதை ஏற்று கொண்டதுசற்று மேலே ஒரு செடியின் கிளை நுனியில் பனித்துளிகள்  சூரிய ஒளியை  அழகாக  வெளிக்காட்டின.  “ அவரும் தங்களுக்கு உறவோ? “ என்று வினவியது வண்டு.  “அது வெறும் நீர். இன்னும் சிறிது நேரத்தில் காற்றில் ஆவியாகி விடும்.”  என்று ஏளனமாக பதிலளித்தது வைரம். ஏனெனில் பெரிய மனிதர்கள் அதைப் போற்றி பொக்கிஷமாக காத்து நிற்பராதலால்  தவற விட்டிருப்பவர்கள் சற்று நேரத்தில் தன்னைத் தேடி வருவர் என்பது அதற்குத் தெரியும். அப்போது தனக்குக் கிடைக்கப் போகும் மரியாதையும் எண்ணி செருக்குக் கொண்டிருந்தது.

பனித்துளி அமைதியுடன் இருந்ததுஅப்போது எங்கிருந்தோ பறந்து வந்த வானம்பாடி பறவை  அந்த வைரத்தை ஒரு கொத்து கொத்தி துப்பியது. “ இது வெறும் கல் என் தாகம் தீர்க்கப் பயன்படாதுஎன்று சொல்லிக் கொண்டே தத்தித்  தத்தி, கழுத்தை இப்படியும் அப்படியும் திருப்பிப் பார்த்தது.
நண்பனே என்னால் உன் தாகம் தீருமெனில் என்னை ஏற்றுக் கொள்என்றது பனித்துளிவானம்பாடியும் தாகம் தீர்ந்து சந்தோஷமாய் பறந்தது

சிறிது நேரத்தில் அங்கு வந்த கால்நடைகளின் காலில் மிதிபட்டு மண்ணுக்குள் அழுந்தி  யார் கண்ணிலும் படாமலே ஒரு பயனுமில்லாமலே புதையுண்டு போனது அந்த வைரக்கல்.

இது இறுமாப்பின் இறுதி நிலைமனிதநிலைக்கும் இறை நிலைக்கும் இடையே உள்ள திரை இது தான். இது நம்முள் தோற்றமெடுப்பதற்கு காரணம் வேண்டியதில்லைநாரதர் போன்ற தேவர்களே கூட தன்னிலும் சிறந்த பக்தரில்லைஎன்ற மயக்கத்திற்கு ஆளாவதுண்டு என்று பரமஹம்சரின் கதைகள் கூறுகின்றன.

இராவணன் போன்ற சிறந்த சிவபக்தன் இல்லை. அவனுக்கும் அந்த இறுமாப்பு வந்தபோது   கயிலாய மலையையே பெயர்த்தெடுக்க முற்பட்டான். அதை தன் சுண்டு விரலால் அடக்கினார் சிவனார் என்பது நாயன்மார்களால் பெரிதும் போற்றப் படுகிறது.  ஞானசம்பந்தர் பெருமான் திருவையாற்று தியாகராஜரைப் போற்றும் போது
வரை ஒன்று அது எடுத்த அரக்கன்
சிரம் மங்க நெரித்தவர் சேர்வு ஆம்.
என்று பாடுகிறார்.

மதியிலா அரக்கன் ஓடி மாமலை எடுக்க நோக்கி
நெதியன் தோள் நெரிய ஊன்றி நீடிரும் பொழில்கள் சூழ்ந்த

என்று நாவுக்கரசர் தில்லை சிவனை போற்றும் போது குறிப்பிடுகிறார்.
இப்படி  சைவ இலக்கியம் முழுவதும்  இந்நிகழ்ச்சிபலவேறு  பாடல்களில், இறுமாப்பினால் வரும் இடரை உணர்த்த எடுத்துக்காட்ட வருகிறது.

இதனை கபீரும் எளிமையாகச் சொல்கிறார். எவ்வளவு எளிமையான வரிகள்.


तिमिर गया रवि देखते ,कुमति गई गुरु ज्ञान  ।
सुमति गई अति लोभ ते ,भक्ति गई अभिमान ।। 

கதிரவன் கண்டு காரிருள் விலகும் , கெடுமதி ஓடும் குரு ஞானம் கண்டு மதி,நெறி தவறும் பேராசை கொண்டு, பக்திநெறி போகும் பெருமிதம் கண்டு

மாற்று:-

1.       இருளும் போச்சு இரவியைக் கண்டே  மருளும் போச்சு குருஞானம் கண்டே
பெருநெறியும் போச்சு பேராசை கொண்டே, பக்தியும் போச்சு இறுமாப்பு  கொண்டே

 [ குமதி- சுமதி ( कुमति- सुमति) அஞ்ஞானி மற்றும் நல்வழி அறிந்தவர் என்று கொள்ள வேண்டும்]

சத்குரு என்பவர் எல்லாவற்றையும் தன்னுள்ளே அடக்கியவர். பனித்துளிகள் சூரியனின் வரவைக் காத்திருப்பது போல அவரும் இறைக்காட்சிக்காக காத்து கிடப்பவர். இடையிலே அருள் தாகம் கொண்டு வரும் ஆன்மீக அடியார்களின்  தாகத்தையும் தீர்க்க வல்லவர்.  உலகிற்காக தன்னையும் தியாகம் செய்யத் தயாராயிருப்பவர்அடக்கம் உள்ள இடத்தில் தான் ஞானம் வரும்.

ஆனால்  மனிதரை ஏதேனும் ஆசை பீடிக்கும் பொழுது  சத்குரு சொல்லும் நன்னெறிகள் மறைந்து போய் இறுமாப்பு குடி கொள்ளும்.  அதனால் நமது ஒவ்வொரு செயலிலும் எண்ணத்திலும் மிக்க கவனம் கொள்ள வேண்டும்

அடக்கம் இருக்கும் போது மட்டுமே குருவை கண்டால்  இருக்கும் கொஞ்ச நஞ்சம் குறைகளும் விலகிடும்இல்லாவிட்டால் குரு அருகிலேயே இருந்தாலும்  ஞானம் வராது அதைப்பற்றியும் கபீர் சொல்வதை  கடைசியில் பார்ப்போம்.

கபீர் குறிப்பிடும் பேராசை  என்பது தன் தகுதிக்கு மீறிய  ஆசை. அப்படி ஆசையின் வலையில் வீழ்ந்தவன் பற்றிய ஒரு கதை

தேவதத்தன் பகவான் புத்தரின் நெருங்கிய உறவினன். அவரை அடைக்கலம் புகுந்து அவரது சீடன் ஆனவன். மன்னன் பிம்பசாரனின்  மகன் அஜாதசத்ருவின் அசையா நம்பிக்கை பெற்று அவனுக்கு குரு போல விளங்கியவன்புத்தரிடத்தில் பிம்பசாரனுக்கு  இருந்த அபார மதிப்பும் கௌரவமும்  கண்டு அவன் மனதில்  தானும் ராஜ குரு ஆகவேண்டும்  என்கிற பேராசையை உருவாக்கியது.

புத்தரை அணுகி தன்னை தலைவனாக்கும்படி கேட்டுக் கொண்டான். புத்தரோஅது ஒருவர்  இன்னொருவருக்கு கொடுத்து வருவதல்ல.  உழைப்பினாலும் முயற்சியினாலும் தகுதி வரும் பொழுது தானே வருவதுஎன்றுரைத்த நல்லுபதேசம் அவன் புத்தியில் ஏறவில்லை

அஜாத சத்ருவை தன் கைப்பாவையாக்கிக் கொண்டு பிம்பசாரனை சிறையில் அடைக்கச் செய்கிறான்.   மூன்று முறை  கௌதமபுத்தரை, தன்னுடைய குருவையே, கொலை செய்ய முயற்சிக்கிறான். ஒவ்வொரு முறையும் தோல்வியை சந்திக்கிறான்

பிற பிக்ஷுக்கள் புத்தரிடம் தம் கவலையை தெரிவித்த போதுஒருவருடைய உயிரை இன்னொருவர் பறிக்க முடியாது. அவரவர் வாழ்நாள் முடியும் வரையில் பூமியில் இருக்கத்தான் வேண்டும். ஆகையால் இதைப் பற்றிய கவலையை விடுங்கள்”  என்று மரணத்தைப் பற்றிய கவலையின்றி வாழ்க்கையைத் தொடர்ந்தார்.

அன்பின் நெறியிலே  பிம்பசார மன்னனையும் அவன் ராஜ்ஜியத்தையும் திருப்பிய புத்தராலே கூட தன் நெருங்கிய சீடனை திருத்த முடியவில்லைஇப்போது குற்றம் எங்கே

இதை கபீர் இன்னொரு ஈரடியிலே  திருத்த முடியாத, முயற்சி இல்லாத சீடனுக்கு ஒப்பிடுகிறார்.

गुरु बिचारा क्या करे,  सिक्खहि माहिं चूक।

भावे त्यों परबोधिये , बास बजाये फूँक ॥

சீடனில்  உள்ளது தோசம், குருவும் என்செய்வார் பரிதாபம் 
பாடம் எப்படி சொல்லியும், குழலில் எழவில்லை சுகநாதம் 

தேவதத்தன் ஒரு  உடைந்த குழல்.   திருத்த முடியாத சீடன். ஏனெனில் பேராசையினால் நன்னெறி அவனை  விட்டு விலகியது

எப்பேர்பட்ட குருவுக்கு இப்படி ஒரு சீடனா என்று  நாம் வியக்கிறோம். ஆனால் நிழலில்லாமல் ஒளியின் அழகு தெரிவதில்லைஆகையால் இறைவன்  பெரியார்களின் பெருமையை உலகுக்கு புரிய வைக்க கூடவே தேவதத்தன் போன்றவர்களையும் அனுப்புகிறானோ என்னவோ

[  फूँक  என்பதற்கு ஊதுதல் அல்லது வாயால் ஒலி எழுப்புதல் என்று பொருள். இந்த ஈரடிக்கு பரவலாக உடைந்த குழலில் இசை வராது என்ற அடிப்படையில் விளக்கம் கொடுக்கப் பட்டிருக்கிறது. ஆனால் குழலிசையை முயன்றவன் என்ற அடிப்படையில் எனக்குத் தோன்றுவது என்னவெனில்  மூச்சை முறையாக குழல் வழியே செலுத்தத் தெரியாதவனுக்கும் இசை வராது. வெறும் புஸ் புஸ் என்று காற்றுதான் வரும். அதை குருவானவர் சொல்லிக் கொடுத்தாலும் மாணவனின் சுயமுயற்சி யில்லாமல் முன்னேற முடியாது. கபீர் இந்த ஈரடியில் குழல் உடைந்தது என்ற வகையில் வார்த்தைகள் எதுவும் பயன்படுத்த வில்லை. ஆகவே குழலில் குற்றமில்லை, குருவில் குற்றமில்லை மாணாக்கனின் முயற்சி இல்லாமைதான் குற்றம் என்ற வகையில் மொழி பெயர்க்கப் பட்டிருக்கிறது ] 

Robert Grave's original lines
..........
The dew-drop carries in its eye
Mountain and forest, sea and sky,
With every change of weather;
Contrariwise, a diamond splits
The prospect into idle bits
That none can piece together. 

Sunday, July 17, 2016

விளக்கில் விளங்கும் விளக்கவர்


மந்திரங்களில் சிறந்தது காயத்ரி. ஆண் பெண் வேற்றுமையின்றி எல்லோராலும் எக்காலத்தும் சொல்லப்படலாம். குழந்தைகளுக்கு சிறு வயது முதலே பழக்கப்படுத்தினால் அவர்கள் பண்பட்டவர்களாகவும் புத்தி கூர்மையுடனும்  திகழ்வார்கள் என்றெல்லாம் போற்றாத ஆன்மீகக் குருக்களோ, சமயத் தலைவர்களோ கிடையாது எனலாம். அதன் அர்த்தம் புரிந்து கொண்டு மனம் ஒன்றி சொல்லும் போது அதன் பலன் பலமடங்கு பெருகிடும் என்றும் சொல்கின்றனர். புரிந்து கொள்ள அர்த்தம் என்று பார்த்தால் 

ஓம். யார் நம் அறிவைத் தூண்டுகிறாரோ அந்த சுடர்க் கடவுளின் மேலான ஒளியைத் தியானிப்போமாக 
என்பதாக வெகு எளிதாகவே இருக்கிறது.

ஆனால் பிரச்சனை என்னவென்றால் ‘மனம் ஒன்றி’ நம்மால் சொல்ல முடியாமல் போவது தான். இதனால்தான் ஒருவேளை அதன் மகிமை புலப்படாமல் போகிறதோ என்னவோ என்று தோன்றுகிறது. 

பெரிய மஹான்களும், சத்தியம் அறிந்த பெரியோர்களால் போற்றப்படும் ஒன்றின் பெருமை நமக்கு புரிபடாமல் போகும்போது குறை நம்மிடம் தானே !
பல வருடங்களாக மனதை நெருடிக் கொண்டிருக்கும் இந்த விஷயத்தை புரிந்து கொள்ள முடியாமல் மனதை எப்படி ஒன்ற வைப்பது?

இப்படி இருக்கும் போது LIGHT MEDITATION பற்றிக் கேள்விப்பட்டு அதை கை கொள்ளலாம் என்று விவாதிப்போது ‘காலங்காலமா சொல்ற காயத்ரிய விட்டுட்டு  லைட் மெடிடேஷனாம். அதுக்கு மந்திரம் வேண்டாமாம். காயத்ரியில வர்ற ஒவ்வொரு சப்தத்துக்கும் ஒரு வைப்ரேஷன் இருக்கு. நம்முடைய உடம்புல இருக்கிற அத்தனை நாடிகளையும் அது சுத்தப்படுத்துகிறது. அதை விட்டுவிடுவதா?” என்று ஒரு குட்டு. 

நம் தேடல்களுக்கு ஒரு விடை கிடைத்தாலும் கிடைக்கா விட்டாலும் காலம் உருண்டு கொண்டுதான் இருக்கிறது. ஆராய்ச்சி புத்தியுள்ளவனுக்கு ஆன்மீகம் கிட்டாது என்ற சொல் வழக்கு சரிதான் போலும். எனக்கு ஆன்மீகம் கைகூடவில்லை. எல்லாவற்றிற்கும் காரணம் தேடி அலைவதினாலோ என்னவோ.  

இந்நிலையில் ஞானதேவரின் ஞானேஸ்வரியின் ஆங்கில மொழி பெயர்ப்பை வாசிக்க நேர்ந்த்து. ஞானேஸ்வரி என்பது பகவத் கீதைக்கு மராட்டிய மொழியில் அவர் எழுதியுள்ள விளக்கம். 
அது எளிய பாடல்களாக பாமரர்களுக்கும் புரியும் வகையில் அன்றைய மொழி வழக்கில் சுமார் 600 ஆண்டுகளுக்கு முன் எழுதியது. பகவத்கீதையின் ஒரு சுலோகத்திற்கு பல சுலோகங்களில் விளக்கம் இருக்கும். அதில் பல எளிய உதாரணங்கள் இருக்கும். 
அவருடைய சகோதரர்கள் சகோதரியின் வாழ்க்கை சரிதம் மிக அற்புதமான பக்தி இலக்கியம் ஆகும்.

பகவத் கீதை அத்தியாயம் 18-ல் “பிரஹ்ம பூத:…” என்று ஆரம்பிக்கும் 54 ஆவது சுலோகத்தின் விளக்கமாக 39 செய்யுட்களில் விளக்கம் (1091-1129) தந்திருக்கிறார். அதில்  1116 வது செய்யுளின் பொருள்* என் தேடலுக்கு விடை கொடுப்பது போல்  தோன்றியது.

“ it is the light by which there is experience of the existence or non existence of the world, just as our pure being on which experiencing of dream state or the waking state takes place.”

[*Shri Dnyaneshwari by Diwakar Ghaisas : Published by Keshav Bhikaji Dhawale, Mumbai]

இதைத் தான் உள்ளே ஒளிரும் ஆத்மா என்று குறிப்பிடுகின்றனரோ ! 
அதற்கு உலகில் நடக்கும் எந்த விவகாரத்திலும் சம்பந்தம் கிடையாது. அதே சமயத்தில் அது இல்லாமல் போனால் விவகாரமே கிடையாது.

ஞானதேவர் இதை ஒரு விளக்கின் வெளிச்சத்துடன் தொடர்பு படுத்துகிறார். விளக்கின் ஒளி கொண்டு கூத்து நடக்கலாம். அல்லது திருடர்கள் தங்கள் பங்கை பிரித்துக் கொள்ளலாம். இதற்கெல்லாம் ஆதாரமாக இருப்பது விளக்கின் ஒளி. அவர்கள் நடவடிக்களால் அது பாதிக்கப்படுவதில்லை. அது இருக்கும் வரை பலவித நடப்புகள் நடந்து கொண்டுதான் இருக்கும். அது போய்விட்டால் யாவும் முற்றிலும் நின்று போய்விடும்.
இப்பொழுது காயத்ரி மந்திரத்தில் போற்றப்படும் அந்த சுடருக்கானத் தியானத்தின் பொருள் பிடிபட்டது போல் இருக்கிறது. 

எந்த சுடரால் மூவுலங்களும் இயங்குகின்றனவோ அதே சுடரால் இந்த உடலின் இயக்கமும் நடக்கிறது. அது எதனாலும் பாதிக்கப்படாத தன்மை உடையது. அந்த தன்மையை அடைவது தான் இந்த செபம் செய்வதின் நோக்கம்.
.
எவனொருவன் தன்னைச் சுற்றி நடக்கும் செயல்களால் நிலைகுலையாது சாட்சி பாவத்துடன் தடுமாற்றமில்லாமல் கடமைகளை செய்ய முடிகிறதோ அவனே சிறந்த சாதகன். அதை சாதிக்கக் கூடிய வழி காயத்ரி மந்திரத்தின் இந்த ”விளக்கின் சாட்சி” தாத்பர்யத்தில் மனம் ஒன்றினால் சுலபமாகி விடும்.

தத்தளிப்பவன் கையிற்கு பிடித்துக் கொள்ள கட்டை கிடைத்தது போலாயிற்று. இப்போது தினசரி எண்ணங்கள் எது வேண்டுமானலும் செபத்தின் போது வரட்டுமே. அதை வெளிச்சத்தில் வேடிக்கை பார் என்று மனதிற்கு சொல்ல முடிகிறது. ஏனெனில் அவ்வெளிச்சம் இல்லையென்றால் நாமே இல்லையே! அந்த எண்ணங்கள் நம்மை அடித்துக் கொண்டு போகாமல், நாம் அமர்ந்திருப்பதே செபத்திற்காக என்று அதை இழுத்து வர முடிகிறது. இதைத் தொடர்து பயிற்சி செய்தால் செய்வோரின் முயற்சியின் ஆழம் பொருத்து முன்னேற்றம் வரும் என்ற நம்பிக்கை வந்து விட்டது. .

இப்போது பகவத்கீதையின் மூல சுலோகத்திற்குப் போவோம். (18-54)
“When he becomes one with brahman, he is very peaceful in his consciousness: he does not feel sorry about anything nor desires to get anything; he has equanimity towards all Beings and thus he attains the supreme devotion for me”.

அதே தான் இது.  

மிக அழகாக எளிமையாகச் சொல்லிவிட்டாரே ஞானதேவர்  என்று தோன்றியது. அந்த சுடரை தியானம் செய்யச் செய்ய வெளியிலே இருக்கும் இறைவன் உள்ளே சுத்த சித்துருவமாய் எம்பெருமானாய் ஒளிர்விடத்  தொடங்குகிறான். அப்போது அவனுக்கு தேவைகள் இல்லை. வள்ளலார் சொல்வது போல் எவ்வுயிரும் தம் உயிராய் எண்ணும் பக்குவம் வந்துவிடுகிறது. அதனால் தான் அவரும் அந்த பரஞ்சோதியை அருட் பெருஞ்சோதியாய் போற்றியிருக்கிறார்.
  
இதே உண்மை ஸ்ரீ ராமகிருஷ்ணரின் கதைகளினாலோ ஆதிசங்கர் மற்றும் எண்ணற்ற ஆசார்யர்களின் விவரணைகளாலோ ஏன் பிடிபடாமல் போயிற்று? ஏனென்றால் கேள்விகள் இல்லாமல் விடைகள் மனதில் ஒட்டுவதில்லை. அவை மறந்து போகக் கூடிய வெறும் விஷயங்களாகத் தான் இருக்கும்.

பசித்தவனுக்குத்தான் உணவு ருசிக்கும். பசி எடுக்கையில் உணவு படைக்க அன்னையோ மனைவியோ வருவது போல ஞானப் பசியைத் தீர்க்கவும் ஒரு குரு அவசியம்.  அந்த குருவின் அவசியத்தை கபீர் கூறுகிறார்:

पीछे लागा जाई था,  लोक वेद के साथी ।
आगैं थैं सतगुरु मिल्या, दीपक दिया साथि ॥

பின்பற்றிச் சென்றேன் உலகோரை, வேதங்கள் சொல்லும் வழியிலே
என்பற்றித் தந்தார் குருவும், பயனுண்டு விளக்குக்கு வழியிலே

கபீர் சொல்வது ஞானவிளக்கு. குரு கொடுக்கும் ஞான விளக்கு கைக்கு வந்த பின்னே எந்த பாதையில் சென்றாலும் வழி தவறாது குறி போய் சேரலாம்.  அந்த ஞான விளக்கு இல்லாமல் ஆன்மீகப் பயணம் முடியாது.

வேறொருவர் சொல்கிறார் என்பதாலோ அல்லது வேதங்கள் அல்லது கிரந்தம் இப்படி சொல்லியிருக்கிறதே என்றோ பிடிவாதம் பிடிக்கும் மனதுக்கு வழியில் முன்னேற்றம் இருப்பதில்லை. ஏதேதோ அல்ப காரணங்களால் தடைபட்டு போகிறது. அந்த தடைகளை களைந்து நமக்கு வழி காட்டுபவர் குரு. இதை திருமூலர் வரிகளிலும் காணலாம்.

விளக்கினை  யேற்றி வெளியை அறிமின்
விளக்கினின் முன்னே வேதனை மாறும்
விளக்கை விளக்கும் விளக்குடையார்கள்
விளக்கில் விளங்கும் விளக்கவர் தாமே ( திருமந்திரம்1818)

ஞானம் என்னும் விளக்கை ஏற்றினால் அருவமான இறைவனைப் (வெளியைப்) பற்றி அறியலாம். அப்படிப்பட்ட ஞானம் வந்த பின் பல பிறவிகளாக தொடர்ந்து வருகின்ற கர்மவினையால் வரும் வேதனைகள் மறையும். அதற்குத் தேவை அதே ஞானம் உடைய ஒரு வழிகாட்டி. அவர்கள் அந்த ஞானத்தைப் படைத்திருப்பதனாலேயே சுயம் பிரகாசிகள் –விளக்கில் விளங்கும் விளக்கு அவர் தாமே !!

காயத்ரி மந்திரத்தை செபிப்பதால் நாடி சுத்தி ஏற்படும் என்பதை விளக்கினின் முன்னே வேதனை மாறும் என்று திருமூலரும் உறுதி செய்கின்றாரோ !

இந்த பதிவை எழுதிக் கொண்டிருக்கும் போது குரு ரவிசங்கர் சொன்ன விளக்கம் ஒன்று whatsapp-ல் வந்தது. நிர்குண ஜோதி தியானத்தின் ஆராய்ச்சிகளின் நடுவே  சகுண உபாசனையும் அதே உண்மைக்கு இட்டுச் செல்கிறது என்று புரிந்தது.

பாண்டு என்பது பஞ்ச பூதங்களைக் குறிக்கும். ரங்கா என்பது அரங்கம் அல்லது மேடை. எனவே பாண்டுரங்கா என்பது பஞ்சபூதங்களினால் அமைக்கப்பட்ட இவ்வுலக மேடை. அடல் அல்லது விட்டல் என்றால் அசையாதிருப்பது, எல்லாவற்றையும் ஆட்டிவைப்பவன். இயக்குனர் ஆனால் அவன் அதில் இல்லை. அவனே விட்டலன்.  
எனவே பாண்டுரங்க விட்டலன் என்னும் போதும் அதே பரம்பொருள் சகுணமாக் சுட்டிக்காட்டப்படுகிறது

ஜுலை 19 அன்று குரு பூர்ணிமையில், இந்நாட்டின் பெரும் குருமார்களின் தாள் வணங்கி அவர்கள் அருள் என்றும் இவ்வுலகிற்கு வழி காட்டுவதாக என்று வேண்டிக் கொள்கிறேன்.

பின் குறிப்பு : சுப்பு தாத்தா ஏற்கனவே மேற்கண்ட கபீர் ஈரடியை, ஜீவி ஐயாவின் அகல் விளக்கு அற்புதம் என்ற பதிவில் பின்னூட்டமாக குறிப்பிட்டு இருக்கிறார். அவருக்கு நன்றிகள்.

எண்ணிக்கையில் 9 என்பது Divine Number என்று போற்றப்படுகிறது. இந்த பதிவின் போது எடுத்துக்காட்டானஅனைத்து குறிப்புகளின் இலக்கங்களின் கூட்டு 9 –ல் முடிவு பெற்றுள்ளது மிகவும் ஆச்சரியமாக உள்ளது. முதலில் கீதை 18 ஆம் அத்தியாயம். அடுத்து 54 வது சுலோகம். ஞானேஸ்வரியில் 1116 ஆவது சுலோகம் கடைசியில் திருமூலரின் செய்யுள் 1818

எங்கிருந்தோ அவர்கள் ஆட்டுவிக்கிறார்கள் என்பது மட்டும் புரிகிறது J