Friday, July 31, 2015

உண்மையான உறவு

ஒரு அரிய நெல்லிக் கனி கிடைத்திருக்கிறது. அது ஆயுட்காலத்தை நீடிக்கும். அதை உனக்கு வேண்டப்பட்டவனுக்கு கொடுத்து பயன்படுத்திக் கொள் என்று சொல்லி விட்டு குரு அரசனிடம் கொடுத்து போய் விடுகிறார்.

உஜ்ஜயினைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த ராஜா பர்த்துஹரி இரண்டு நாள் யோசித்துவிட்டு தன்னுடைய இளைய ராணிக்கு அதை அளிக்கிறான்.

அவளிடம் அவனுக்கு பிரேமை ஜாஸ்தி. இளைய ராணியைக் கண்டால் பர்த்துஹரியின் தம்பி, விககிரமாதித்ததுனுக்குப் பிடிக்காது, அவளுக்கோ சேனாபதி மேல் ஒரு கண். இப்படியாக சேனாபதியை நெல்லிக்கனி அடைந்தது. சேனாபதிக்கு ஒரு காதலி. சொல்லவும் வேண்டுமோ.நெல்லிக் கனி காதலியின் வசமாயிற்று.

அந்த காதலியோ எளிய பிரஜை. மன்னன் சிறப்பாக இல்லாத நாட்டில் குடிமக்கள் சிறப்பாக வாழ்வது அரியது என்னும் மனப்பாங்கில் மன்னனே சிறப்புற்று நெடுநாள் வாழத் தகுதி உடையவன் என்று மன்னனுக்கு அதை பரிசாக அளிக்கிறாள்.

ராஜா பர்த்துஹரி திகைத்து நிற்கிறான். சுற்றி வளைத்து அவனிடமே வந்து விட்டது நெல்லிக்கனி. விசாரித்ததில் தெரிகிறது, உறவுகள் யாவுமே தந்நலத்தைச் சார்ந்ததே. யாரும் எவருக்கும் உறவு அன்று.

நீர் குமிழி போன்ற உலகில் சிறிது சேர்ந்திருப்பதையே பெரிய உறவாக தந்தை தாய், தமயன்,தங்கை,மனைவி,மகன் என்று கல்பிதம் செய்து கொண்டு பெரிதாகப் பேசப்படுகிறது.

உண்மையான உறவு யார் ? 
சரியான சிஷ்யனைத் தேடும் குருவே உண்மையான உறவு ஆகும்.

ஏனெனில் அவர் தேடல் நெடுங்காலமாக அவனைத தொடர்ந்து வந்து இருக்கிறது.

அது நேற்று இன்றல்ல, பல ஜன்மங்களாகத் தொடரும் உறவு.
என்றிருந்தாலும் சிஷ்யனின் ஏற்றத்திற்காகவே இருக்கும், நிச்சயம் உலக
உறவுகள் போல் குழியில் தள்ளாது.

இந்த விழிப்புணர்வு வந்ததும் தனது ராஜ்ஜியத்தை தம்பியிடம் ஒப்புவித்து
சன்னியாசம் பூண்டு கங்கை கரையில் சன்னியாசிகளுடன் சென்று சேர்ந்து விட்டாரென்று சொல்லப்படுவதுண்டு. 

ராஜா பர்த்துஹரி எழுதிய 100 வடமொழி கவிதைகள் ”வைராக்கிய சதகம்” என்று போற்றபடுவதுண்டு. இதை சுவாமி.மாதவானந்தா ( அத்வைத ஆஸிரமம், கோல்கத்தா-1976)  பதவுரை பொழிப்புரையுடன் வெளியிட்டுள்ளார்.

ஒரு சில பாடல்களின் ஒலி நயத்திற்காக மொழி பெயர்க்கப் பட்டிருக்கிறது
சள சளவென்னும் கங்கையின் உத்வேகம்’
ஹர ஹர வென்னும் கோவில் மணிநாதம்
குளு குளு வென்னும் முழுநிலவின் காற்றும்
பட படக்கென காற்றிலாடும் அரைத்துணியும்
பிரம்மானந்தத்தில் சொரியும் திவலைகள் இரண்டு
அத்திவலைகளை பருக வரும்  பயமில்லாப்  பறவைகள்
பகைவனே இல்லாப் பெரும் ராஜ்ஜியமாய்
யமபயம் அற்ற இவ்வாழ்வு 
அரிது அரிது அரண்மனை வாழ்விலும் அரிதே

தமிழில் சமண இலக்கியங்களில் நிலையாமைப் பற்றி வெகுவாகப் பேசப்பட்டாலும் அது எழுதப்பட்டக் காலம், சூழ்நிலை இவை இறவா புகழைத் தரவல்லவை.
ராஜாவின் அனுபவத்தை கபீரின் பாடல்களில் காணலாம்

स्वारथ का सबको सगा, सारा ही जग जान ।
बिन स्वारथ आदर करै, सो नर चतुर सुजान ॥
சுயநலத்துடனே சுழலுது  உலகம்,  சுயநலமே எல்லாமாம்
சுயநலமற்றா ரவர் தகைமை சுட்டும் அவரே சான்றோராம்

निज स्वारथ के कारनै, सेव करै संसार ।
बिन स्वार्थ भक्ति करै,  सो भावै करतार ॥

தந்நலமில்லா சேவை இல்லை,யாவுமே காரணத்தில் ஒளிந்திருக்கும்.
தந்நலமற்ற  பக்தி உள்ள இடத்தில் பக்தி செய்பவன் பகவானே ஆகும்.


தந்நலமிலா பக்தி என்பது எவ்வித உள் கணக்குகளும் இல்லாதது. அது எப்போதும் கொடுத்த்துக் கொண்டே இருக்க விரும்புவது. தனக்கென எதுவும் வேண்டாதது.  அந்த சுயநலமற்ற இடத்தில் தானே இறைவன் குடிகொள்கிறான் என்கிற எளிய சித்தாந்த்தைக் கொண்டது

------------------------------------------------------------------------

அக்கமகாதேவி,ஆவுடையக்காளுக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, வீரசைவ குலத்தில் பிறந்து ஸ்ரீசைலம் சென்ன மல்லிகார்ஜுனனக்கு தன்னை அர்பணித்து  தீவிர தவப்பணி மேற்கொண்டவள்.

பஸவேஸ்வரர், அல்லமபிரபு காலத்தைச் சேர்ந்த இவரது பாடல்கள் கர்நாடகத்தில் ’வசன சாகித்யா”  என்றழைக்கபடுகினறன.

அவருடைய பாடல் ஒன்று:  குரு சிஷ்யனைஎப்படி கண்டு கொள்வார் என்பது, இந்த பாடல் புரிந்தாலே போதும்,  சிஷ்யன் ஒரு போதும் குருவின் முன் தனனை எடை போட்டுக்கொள்ள முடியாது.


வானில் வட்டமிடும் வல்லூறு அறியுமோ
வான் மதிக்கு தெரிந்த விசும்பின் உயரம்?

கரையோரம் வளரும் களைச்செடி அறியுமோ
கமலத்திற்கு தெரிந்த நீரின் ஆழம் ?

தவ்வித் திரியும் ஈயும் அறியுமோ
தேனீக்கள் அறிந்த மலர்களின் வாசம்?

ஓ சென்ன மல்லிகார்ஜுனா!.

எருமை முதுகமர் கொசு போல் இவரும்
அறிவரோ  உந்தன்   மெய்யடியாரை ?

அறிபவன் நீ ஒருவனே அல்லவோ.


குரு பூர்ணிமை பிறருக்கு உதவி செய்வதாலேயே குருவருளை கிட்டச்செய்யும். அன்றாவது குருவை நினைத்துக் கொள்ளலாமல்லவா என்ற நினைப்பில் செய்யும் காரியம் இது.

10 comments:

  1. //தந்நலமில்லா சேவை இல்லை,யாவுமே காரணத்தில் ஒளிந்திருக்கும்.
    தந்நலமற்ற பக்தி உள்ள இடத்தில் பக்தி செய்பவன் பகவானே ஆகும்.//

    இரத்தின வரிகள்.

    தன்னலம் கலந்து விட்டால் அது சேவை இல்லை என்று தெரிகிறது.
    தன்னலம் பக்தியில் கலக்காமலிருப்பது பெரும் பாக்கியமான பகவானின் நிழலேயாகிறது.

    தன்னலமே எல்லாமும் என்று ஆகிவிட்ட காலத்தில் மறக்காமல் மனத்தில் கொள்ள வேண்டிய உறுதியாகத் தெரிகிறது.

    மன ஆரோக்கியத்திற்கு வழிகாட்டும் உங்கள் பதிவுகள் என்றைக்குமே மனசில் நின்று விடுகின்றன. இது தான் மக்கள் சேவை என்றும் தெரிகிறது.

    வாசிக்கும் அனுபவத்தைத் தந்ததற்கு மிக்க நன்றி, கபீரன்ப!..

    ReplyDelete
  2. I will come later once I have tamil tyiping

    ReplyDelete
  3. நல்வரவு ஜீவி சார்
    தந்நலம் இல்லாத சேவை என்று ஒன்று கிடையாது என்பதை வெகு நாசுக்காக சுட்டி காட்டி விட்டது பர்துஹரி வரலாறு
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  4. குரு பூர்ணிமாவுக்கான அரிய இடுகை! அருமையான ஒப்பீடுகளுடன் கூடிய பதிவு. இன்னொரு நல்முத்து! தன்னலம் இல்லா சேவை எங்கே கிடைக்கும்? சேவை செய்வதில் கிடைக்கும் ஆனந்தமும் ஒரு தன்னலம் தானே!

    ReplyDelete
  5. நல்வரவு கீதா மேடம்
    ///சேவை செய்வதில் கிடைக்கும் ஆனந்தமும் ஒரு தன்னலம் தானே!///
    Happiness and Ananda what is the difference? என்ற கேள்விக்கு விடையாக முதலாவதில் தன்னலம் கலந்திருப்பதால் தான் sad என்ற எதிர்பதம் உள்ளது.ஆனால் ஆனந்தத்திற்கு அப்படி ஒரு எதிர்பதம் இல்லை என்பதே அது தன்னலம் இல்லாதது என சொல்லப்பட்டது
    இது எவ்வளவு உண்மை என்று புரிந்து கொள்ளும் சிரத்தை விவரம் இல்லாமல் காலம் போய்கொண்டிருக்கிறது என்பதே உண்மை
    நன்றி

    ReplyDelete
  6. நமஸ்தே ஜி. நலமா?

    ReplyDelete
  7. தந்நலமிலா பக்தி என்பது எவ்வித உள் கணக்குகளும் இல்லாதது. அது எப்போதும் கொடுத்த்துக் கொண்டே இருக்க விரும்புவது. தனக்கென எதுவும் வேண்டாதது. அந்த சுயநலமற்ற இடத்தில் தானே இறைவன் குடிகொள்கிறான் என்கிற எளிய சித்தாந்த்தைக் கொண்டது//

    அருமையான கருத்து.

    பாடல்கள் மிக அருமையாக இருக்கிறது.

    ReplyDelete
  8. நன்றி அஷ்வின்ஜி
    தங்களுடைய பின்னூட்டத்தை எப்படி கவனிக்காமல் விட்டேன் என்று புரியவில்லை. நான் என்பக்கங்களை புரட்டுவதே அரியதாகிக் கொண்டு வருகிறது என்பது தெரிகிறது. அடிக்கடி எழுத முயற்சிக்கிறேன்.
    நான் நலம். வருகைக்கும் விசாரிப்புக்கும் நன்றி

    ReplyDelete
  9. நல்வரவு கோமதி மேடம். பாராட்டுகளுக்கு நன்றி

    ReplyDelete
  10. Great . புதிய தகவல்கள்.....

    ReplyDelete

பின்னூட்டத்திற்கு நன்றி