பழைய திரைப்படங்களில் கிராமத்திலிருந்து முதன்முதலாக நகரத்திற்கு வரும் அப்பாவி கதாபாத்திரங்கள் முதலில் சந்திப்பதே இந்த ஏமாற்றுகாரர்களைத்தான். ஏதாவது ஒரு காரணத்தால் தம் உடமையெல்லாம் அவர்களிடம் இழந்து துன்பத்தில் சிக்கிக் கொள்வதாக கதை நகரும்.
ஏமாற்றப்படுவதில்தான் எத்தனை முறைகள் !
வீதியிலே நாட்டியமாடும் சிலர் தம் ஆட்டத்தாலும் பேச்சாலும் பார்வையாளர்கள் கவனத்தைத் திருப்பி வைக்கும் போது அவர்களுடைய கும்பலை சேர்ந்த ஒருவன் அசந்திருப்பவர்களின் பைகளையும் பிற உடமைகளையும் பின்பக்கத்திலிருந்து சுருட்டிக் கொண்டு ஓடிவிடுவான். பின்னர் லபோ திபோ என்று கூட்டத்தினர் ஆளுக்கொரு பக்கம் திருடனைத் தேடிக் கொண்டு ஓடுவார்கள்.
இதே வேடிக்கையைத்தான் மாயா மோகினியும் செய்து வருகிறாள். அவள் மோகினியாம், கபீர் சொல்கிறார். நம்முடைய கவனத்தையெல்லாம் உலகின் பல்வேறு கவர்ச்சிகள் பக்கம் திருப்பி உண்மையில் நம் உள்ளே உறைகின்ற இறைசக்தியை அறிவதற்கான ஆர்வத்தை கவர்ந்து விடுகிறாள். நமது ஆயுளெல்லாம் ஒவ்வொரு பிறவியிலும் இப்படியே போய்க் கொண்டிருந்தால் அவளை விட பெரிய சாகசக்காரி யார் இருக்க முடியும்?
कबीर माया मोहिनी, भई अंधियारी लोय ।
जो सोये सो मुसि गये, रहे वस्तु को रोय ॥
இருளதும் கவ்வுதே கபீரா, மாயா மோகினி் சாலம் பார்
இருளில் உறங்கி இழப்பார், அருநிதி போனதாய் அழுவார்
(இருள் =அஞ்ஞானம் ; இருளில் உறங்கி = அஞ்ஞானத்தில் மயங்கி)
மாற்று :
மருளாய் பிடிக்குது கபீரா, மாயா மோகினியவள் ஆட்டம்
பெருநிதி போச்சுது தியங்கி, என்னே அவர்தம் திண்டாட்டம்
மாயையின் கவர்ச்சியில் மனம் வசப்பட்டு ஆத்மனின் உண்மை நிலையை மறந்து நிற்பதும் ஒரு வித உறக்கமே!
எப்போதாவது பெரும் சான்றோர்கள் நமக்கு காலம் விரயமாகிக் கொண்டிருக்கிறது என்ற உண்மையை சொல்லும் போது, அந்த நிஜத்தை நம் செய்கைகளின் பின்ணணியில் பார்த்து எவ்வளவு சத்தியம் அது என்று புரிந்து கொள்ளும் போது மனம் அதை நினைத்து வருத்தப்படுகிறது. ஆத்மாவைத் தொலைக்கமுடியாது. ஏனெனில் நம் ஓட்டத்திற்கே அதுதானே ஆதாரம். அப்போது அந்த பெருநிதி என்ன?
குருஅருளால் கிடைக்கக் கூடிய சச்சிதானந்த அனுபவமாகத் தானே இருக்கமுடியும்?
அந்த பெருநிதியை அகண்டரஸம் என்று ஆவுடையக்காள் குறிப்பிடுகிறார். அதனோடு மாயையின் சாகச நாட்டியத்தைப் பற்றியும் ஆவுடையக்காள் ஒரு அழகான கீர்த்தனையாகப் பாடியிருக்கிறார்.
( ஆவுடையக்காள் பற்றிய முதல் பகுதிக்கு இங்கே சுட்டவும் )
ராகம் :ஸஹானா
பல்லவி
அதிக சாமர்த்தியம் மாயை உந்தன்
வெகு வித நாட்டியம்
அனுபல்லவி
அகில பிரபஞ்சமாய் ஆனதும் போராமல் அகண்ட ரஸம் தன்னை மறைத்தாய் தெரிய வொட்டாமல்
சரணம்
ஸ்படிக மண்டபத்தில் சுவானம் தன்னைத் தவிர
கண்ட விடத்தில் சாடி ஓடிக் கொண்டு கூடிக் குலைக்கும் போல்
நானா விகல்பித நாய் போல் அலைய வைத்தாய் (அதிக)
சுவரில்லா சித்திரம் போல் உந்தன் ஸ்வரூபம்
அஸத்தியம்
ஜரையில்லை நரையில்லை
ஜனன மரணமில்லை
கரையில்லை
உன்னுடைய காரிய விசித்திரங்கள் (அதிக)
ஸஹஸ்ரத்தில் ஒருத்தன் உன்னையும் பார்க்க
ஸாமர்த்திய கர்த்தன்
ஸர்வமும் பிரம்மமாய்
தான் தானே ஸர்வமாய்
ஸ்வாமி வெங்கடேசுவரர் குரு கிருபையினாலே (அதிக)
(அகண்ட ரஸம் மறைத்தல் = ஆத்மானுபவத்தை அறிய விடாமல் செய்வது)
நமக்கு மூப்பு உண்டு, நரையுண்டு ஜனன மரணமுண்டு. ஆனால் அந்த மாயக்காரிக்கு இவையெதுவும் கிடையாது. அவளுடைய விசித்திரமான போக்குக்கு எல்லையும் கிடையாது.
அதற்கு அவர் சொல்லும் உதாரணமும் வெகு பொருத்தம்.
கண்ணாடி மண்டபத்தில் புகுந்த நாயைப் போன்றதாம் நம் நிலைமை. தன்னைச் சுற்றிலும் காணப்படும் நாய்களெல்லாம் தன் பிரதிபிம்பம் என்று அறியாது மதி மயங்கி பல வேறு நாய்கள் என்றெண்ணி சுற்றிச் சுற்றி குலைக்கும் நாயைப் போலவே மாயை நம்மை அலைகழிக்கிறது.
பரமாத்மத்தில் ஒன்றுபட்டிருக்கும் நாம் மாயையினால் பிரதி பிம்பங்களாகக் கண்டு நமக்குள் வேற்றுமை பாராட்டுகிறோம். சண்டை போட்டுக் கொள்கிறோம், நிம்மதியை இழக்கிறோம்.
என்ன ஒரு அழகான உதாரணம்!
ஆத்மனை அறிந்து கொண்ட பிறகு சர்வமும் பிரம்மமே. காணப்படும் யாவையும் அதன் பிம்பங்களே. அது பிடிபடாமல் போவதால்தான் உதாரணத்தில் குறிப்பிடப்பட்ட நாயைப் போலவே அலைகிறோம்.
ஒருமுறை ரமணரிடம் சாப்பிடும் போது சுப்புலக்ஷ்மியம்மாள் “ காரமானவற்றைத்தான் பகவான் எதுவும் போட்டுக் கொள்வதில்லை.கூட்டு உரப்பில்லாமல் இருக்கிறதே! இன்னும் கொஞ்சம் போட்டுக் கொள்ளலாமே” என்று மெதுவாகச் சொன்னார்.
அதைக் கேட்ட பகவான் “அதான் போட்டிருக்கிறாயே! போதுமே! இந்த ஒரு வாயால் சாப்பிட்டால்தான் சாப்பிட்டதாகுமா? இத்தனை வாயால் சாப்பிடுகிறேனே! அது திருப்தியாகாதா? “ என்று சகஜமாகக் கேட்டார்.
அவர் எப்போதும் இலையில் பரிமாறப்பட்ட உணவு வகைகளைத் தனித்தனியாக ருசிக்காமல் எல்லாவற்றையும் ஒன்றாகக் கூட்டி பிசைந்து உண்பதே வழக்கமாகக் கொண்டிருந்தார். அதனால் தனிப்பட்ட வகை பற்றிய ருசி அறியமாட்டார். யாராவது குறிப்பிட்டுக் கேட்ட போது
“....எனக்கு ஒன்றிலே தான் ருசி. இவர்களுக்கு பின்னத்தில்தான் ருசி. என்ன செய்வது? அவரவர்கள் ருசிக்குத் தகுந்த மாதிரி தானே சாப்பாடு அமையும் “ என்று பெரிய தத்துவத்தை மிக எளிய முறையில் அன்பர்களுக்கு உணர்த்தி விட்டார்.
இதிலிருந்து பகவான் ரமணர் ஏகாத்ம சொரூபானுபவத்திலேயே திளைத்திருந்தார் என்பது புலனாகிறது. ஆத்மாவை தன்னில் உணர்ந்த பின்னர் தன்னைச் சுற்றி அமர்ந்து உணவு உண்ணும் ஒவ்வொருவரும் அதே ஆத்மாவின் பிம்பங்களே என்ற உண்மை அவருள் மிளிர்ந்ததால் அவர் பளிங்கு மண்டபத்தின் மாயைக்கு அப்பாற்பட்டவராய் ஆகிவிட்டிருந்தார்.
அக்காள் தம் குரு ஸ்ரீதர வெங்கடேசுவரரை மேற்கண்ட பாடலில் புகழ்வது போலவே, ரமணரும் ‘ஸஹஸ்ரத்தில் ஒருத்தர், சாமர்த்திய கர்த்தர்; ஸர்வமும் பிரம்மமாய் தானே ஸர்வமாய்” திகழ்ந்த ஞானி.
அக்காளைப் போலவே கபீரும் இம்மாதிரி சாமர்த்தியசாலிகள் போற்றப் படவேண்டியவர்கள் என்று இன்னொரு ஈரடியில் சொல்கிறார்.
माया तो ठगनी भई, ठगत फिरै सब देस ।
जा ठग ने ठगनी ठगी, ता ठग को आदेस ॥
ஏய்ப்பதே தொழிலாம் மாயைக்கு, ஏய்த்துத் திரிவாள் சகமெலாம்
ஏய்ப்பவளை ஏய்ப்பவர் வந்தால், ஏய்ப்பவரை ஏற்றிப் போற்றலாம்
அந்த சாமர்த்தியசாலியை உறுதியாகப் பற்றிக் கொண்டால் அவன் நம்மையும் உடனழைத்து செல்லுவான்.
हम तो बचिगे साहब दया से, शब्द डोर गहि उतरे पार ।
कहत कबीर सुनो भाई साधो, इस ठगनी से रहो हुसियार ।
”குருவின் உபதேச மந்திரத்தைப் பிடித்துக் கொண்டு நாங்கள் பிழைத்துக் கொண்டோம்; கபீர் சொல்கிறான், சாதுக்களே! கவனமாயிருங்கள் அந்த கள்ளியிடம்“ என்று கபீர் இன்னொரு பாடலிலும் மாயையைப் பற்றி எச்சரிக்கிறார்.
மாயையின் பிடியிலிருந்து தப்பிப் பிழைக்க வேண்டுமானால் குருவின் அருள் நாடி அவரை கெட்டியாகப் பற்றிக் கொள்ள வேண்டும் என்பதை ஒரு கிளிக்கண்ணியாக ஆவுடையக்காளும் பாடுகிறார்.
எத்தனையோ கோடி ஜென்மம் எடுத்தேன்
கணக்கில்லாமல்
போதமிழந்து விட்டேன் கிளியே,
புத்தி மயக்கத்தினால
போதம் தெளிவேனோடி
போக்குவரத்தை விட்டுத்
தேறித் தெளிவேனோடி கிளியே
பரப்பிரம்ம வஸ்துவன்றோ பரமகுரு
கிருபையால்
பற்றிப் பிடிப்போமடி கிளியே
இப்பவமும் துலையுமடி
எட்டாத கொப்பு அடியோ
என்னால் முடியுமோடி
தட்டிப் பறிக்க என்றால் கிளியே
ஸாதுக்கள் வேணுமடி
ஆதி அந்தமற்ற ஆசாரியார்
கிருபையினாலே
எட்டிப் பறிப்போமடி கிளியே,
எல்லோரும் புஜிப்போமடி
பற்றிப் பறிப்போமடி கிளியே
பிரம்ம ரஸத்தை
எல்லோரும் புஜிப்போமடி கிளியே,
எல்லோரும் புஜிப்போமடி
( போதம் = ஞானம்; போக்குவரத்தை விட்டு = பிறப்பு இறப்பு இல்லாமல்; எட்டாத கொப்பு= உயரமான மரக்கிளை; இப்பவம் துலையுமடி = பிறவிப்பிணியை தொலைத்தல் )
’வாருங்கள் யாவரும் இங்கே பெருநிதியாம் பிரம்மரஸம் நாமெல்லாம் புசிக்கவென்றே காத்திருக்கிறது’ என்று கபீரும் அக்காளும் எவ்வளவு கூவிய போதும் நம் காதுகளில் விழுவதே இல்லையே !! மாயையின் இருளில் உறங்கிக் கிடக்கும் நமக்கு விழிப்பே வராதா :(
(குறிப்பு : நீளம் கருதி ஆவுடையக்காளின் பாடல்களில்- பொருள் சிதையா வண்ணம் -சில பகுதிகளையே சுட்டிக் காட்டி இருக்கிறேன். முழுப்பாடல்கள் கொடுக்கப்படவில்லை. இவைகள் ஞானானந்த நிகேதன், தபோவனம் அவர்களால் பிரசுரிக்கப்பட்ட ‘செங்கோட்டை ஸ்ரீ ஆவுடை அக்காள் -பாடல் திரட்டு’ என்ற புத்தகத்திலிருந்து எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. ( www.srignanananda-niketan.org)