Sunday, July 25, 2010
மூப்பெனும் நாய், காலனாம் வேடன்
”இசை வேண்டின் யாழில் அதி இறுக்கமானக் கம்பிகளும் கூடாது, இறுக்கமில்லாக் கம்பிகளும் உதவாது. அளவோடு இறுக்கிய கம்பிகளே நயமான இசைத் தரும் கருவியாகும்”
அது மனித உடலுக்கும் பொருந்துவதாகக் கருதி தன் வழிமுறைகளை மாற்றி கொண்டாராம். அரச வாழ்க்கை அவருக்கு இறுக்கமில்லா கம்பியின் நிலை. அது ஞானத்திற்கு இசைவாகாது. பின்னர் உக்கிரமான உடலை வருத்திக் கொள்ளும் தவம். இதுவும் ஞானத் தேடலில் உதவாது. திருமூலர் சொல்வது போல் உபாயமாக உடலைப் பேண வேண்டும். உண்பது உறங்குவது பேசுவது போன்றவற்றில் மிதமானப் போக்கை கைகொண்டால் உடல் நல்ல வழியில் இருக்கும்.
உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த்தேனே (திருமந்திரம்)
கபீர் இதே கருத்தை ஒரு இசை சாதனத்தை உவமையாக வைத்துச் சொல்கிறார். உடல் தான் கருவி. ஆன்மா அதை இசைப்பவன். கருவியின் நரம்புகள் சரியான முறையில் பராமரிக்கப் படாவிட்டால் கருவியின் பயன் என்ன ? அதை இசைப்பவனாகிய ஆன்மா அதை விட்டு போய்விட்டால் பாவம் அந்த உடலால் பிறருக்கு பயன் தான் என்ன ?
कबीर जंत्र न बाजई, टूट गये सब तार ।
जंत्र बिचारा क्या करै, चला बजावन हार ॥
கருவியும் இசைக்காது கபீரா, அறுந்துள நரம்புகள் யாவுமே
கருவியும் பாவம் என்செயும், இசைப்பவன் போன பின்னே
அருணகிரியாரும் அந்த பயனற்ற நிலைக்கானக் காரணத்தை விரிவாகவே விளக்குகிறார்.
இரத்த முஞ்சியு மூளையெ லும்புட்
டசைப்ப சுங்குடல் நாடிபு னைந்திட்
டிருக்கு மண்சல வீடுபு குந்திட் ...... டதில்மேவி
[ரத்தமும் சீழும், மூளை, எலும்பு, உள்ளே இருக்கும் மாமிசம், பசிய
குடல், நரம்புகள், இவைகளைக் கொண்டு ஆக்கப்பட்டு
அழுத்தமாகக் கட்டப்பட்டு மண்ணாலும், நீராலும் ஆன
வீடாகிய உடலில் நுழைவு பெற்று, ]
இதத்து டன்புகல் சூதுமி குந்திட்
டகைத்தி டும்பொரு ளாசையெ னும்புட்
டெருட்ட வுந்தெளி யாதுப றந்திட் ... டிடமாயா
[அதில் இருந்துகொண்டு இன்பகரமாகப் பேசும்
சூதான மொழிகள் அதிகமாகி கிளைத்து எழுகின்ற
பொருளாசை என்கின்ற பறவை பிறர் தெளிவாக எடுத்துச்
சொன்னாலும் தெளியாமல் மேலும் மேலும் பறப்பதாயிருக்க],
பிரத்தம் வந்தடு வாதசு ரம்பித்
துளைப்பு டன்பல வாயுவு மிஞ்சிப்
பெலத்தை யுஞ்சில நாளுளொ டுங்கித் ...... தடிமேலாய்ப்
[உலக மாயை மிகுந்து, உண்டாகின்ற வாதம், சுரம், பித்தம் இவைகளின்
வேதனைகளோடு பல வகையான வாயுக்களும் அதிகரித்து,இருக்கின்ற
உடல்வலிமையும் சில தினங்களுக்குள் ஒடுங்கி, தடி மேல் ]
பிடித்தி டும்பல நாள்கொடு மந்திக்
குலத்தெ னும்படி கூனிய டங்கிப்
பிசக்கு வந்திடு போதுபி னஞ்சிச் ....சடமாமோ
[கை ஊன்றுவதாகி, பல நாட்கள் செல்ல குரங்குக்
கூட்டத்தவன் என்று சொல்லும் படியாக உடல் கூனி, சத்துக்கள்
அடங்கி, மரணம் வந்திடும் சமயத்தில் பயப்படுவதான
இந்த உடலால்ஏதேனும் பயன் உண்டோ? ]
{விளக்கவுரை நன்றி kaumaram.org }
பிறந்த கணத்திலிருந்து நம்மை மரணம் துரத்திக் கொண்டிருக்கிறது. காலன் என்னும் வேடனுக்கு நம்மை பலமிழக்கச் செய்யும் தந்திரம் மிக நன்றாகவேத் தெரியும். வேடனொருவன் தன்னுடைய நாயை ஏவிவிட்டு முயலை பலமிழக்க செய்வது போல் இரவு பகல் எனும் நாய்கள் நம்மைத் துரத்திக் கொண்டே இருக்கின்றன. வேடன் பிடியில் எப்போது வேண்டுமானாலும் சிக்கிக் கொள்ளலாம். அவன் நாய்கள் துரத்துவதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு நிற்கவும் நிற்கலாம். சோர்ந்து போய் கடைசியில் அவன் காலடியிலே தானே விழவேண்டும் !! அப்படி ஒரு உதாரணத்தை கபீர் நமக்கு சொல்லிக்காட்டுகிறார்.
முதுமை விரட்டுது நாயைப் போலே, இளமையாம் முயலோடுது நித்தமே
எமனெனும் வேடனும் எதிரே, இடையில் நீ நாடும் சுகமும் மித்தையே
அந்த வேடத்தினிடத்தில் ஒரு நல்ல குணம் உண்டு. இடைவிடாது இறைவனை எண்ணிக்கொண்டு ஓடினால் அவனே நாய்களின் பிடியிலிருந்து நம்மைக் காப்பாற்றிவிடுவான். இரவு பகலற்ற ஒரு வெளியில் கொண்டுபோய் சேர்த்துவிடுவான். அங்கே நாய்களின் பயம் கிடையாது. கணக்கணமும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓட வேண்டிய அவசியமும் இல்லை. அது மார்க்கண்டேயர் காலத்தில் அவனுக்கு இடப்பட்டக் கட்டளை.
பதத்தெழு மந்திர(ம்) அஞ்செழுத்(து) ஓதிப் பரிவினொடும்
இதத்தெழு மாணித னின்னுயி(ர்) உண்ண, வெகுண்(டு)அடர்த்த
கதத்தெழு காலனைக் கண்குரு திப்புன லாறொழுக
உதைத்தெழு சேவடி யான்கட வூருறை யுத்தமனே
பஞ்சாட்சர மந்திரத்தை மிகுந்த விருப்பத்தோடு செபிக்கின்ற பெருமையுடைய சிறுவனின் இன்னுயிரைக் காப்பதற்காக மிகுந்த சினத்தோடு எழுந்து, கண்களினின்று இரத்தம் சொரியும் வகையில் எமனை உதைத்துத் தள்ளியப் பெருமை உடையவன். திருக்கடவூரில் உறைபவன். அந்த உத்தமன் திருக்கழலை தொழுவோம் என நாவுக்கரசர் போற்றுகிறார்.
நிலையாமையை நினைவில் நிறுத்தி மரணபயம் வெல்வதற்கு மணிகண்டன் தாளே கதி.
Monday, July 12, 2010
உள்ளவர் சிவாலயம் செய்வர்
மனம் உடைந்த மந்திரியார் 'கூடல சங்கம தேவா' நீயேத் துணை யென்று சிவனடியார்களோடு இணைந்து தன் கடைசி காலத்தை கழித்தார்.
கிருஷ்ணா நதியுடன் மலப்பிரபா நதி கூடுமிடம் கூடல சங்கமம்.
அந்த புரட்சிகரமான மந்திரியின் பெயர் கிராந்தி பஸவேசுவரா ! கி.பி.1132- 1196 (கிராந்தி என்றால் புரட்சி என்று பொருள்)
12 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் கர்நாடக மாநிலத்தில் சாளுக்கியர்கள் ஆட்சியில் பிஜாலா என்பது ஒரு குறுநில அரசு. அதன் தலைநகர் கல்யாண். அந்த சமஸ்தானத்தில் ஒரு மிகப்பெரும் ஆன்மீக ரீதியான சமூகப் புரட்சியை உண்டு பண்ணியவர் பஸவேசுவரர். மேற்குலத்தில் பிறந்திருப்பினும் தன் மனதுக்கு ஒவ்வாமல் போன வழி முறைகளைத் துறந்து பதினாறு வயதிலேயே சிவனடியார்கள் குழுமத்தில் சேர்ந்து குரு சங்கமேசுவரரின் உபதேசம் பெற்றவர். கூடல சங்கமத்தில் பலவருடங்கள் அவர்களுடனே இருந்து ஆன்மீக சாதனை செய்தவர். சிவனே எல்லாமுமாய்க் கண்டவர்.
அரச வாழ்வைத் துறந்து எவ்வகை நிதியமும் இல்லா சிவனடியாருடன் வாழ்வைக் கழித்த பஸவேசுவரர், கபீர்தாஸரின் ஒரு ஈரடியை நினைவூட்டுகிறார்.“உன் ’நோட்’டை குப்பையில போட்டுக் கொளுத்து”
சில ஆசிரியர்கள் வெளித்தோற்றத்திற்கு கண்டிப்பு மிக்கவர்களாகத் தோன்றினாலும் உள்ளே அன்பு தோய்ந்தவர்களாக இருப்பார்கள்.
உண்மையை எவ்வளவு எடுத்துக் கூறினும் புரிந்து கொள்ளாத மனிதர் போக்கை கண்ட மன உளைச்சலில் கபீர்தாஸ் ’பொன் மாளிகையானாலும் எரித்து விடு’ என்று சொல்லியிருப்பதாக கொள்ளலாம். அன்புக்குக் குறைவில்லை, உளைச்சலின் வெளிப்பாடு. குருவின் தொடர்பு அல்லது அருள் இல்லாத இடம் பொன்மாளிகையாக இருந்தாலென்ன கோவிலாக இருந்தாலென்ன, அது பயனற்றதே. இதே கருத்தை திருநாவுக்கரசரும் அழுத்தமாக குறிப்பிடுகிறார்.நின்றவூர்ப் பூசல் அன்பன் நெடிதுநாள் நினைந்து செய்த
நன்றுநீ டால யத்து நாளைநாம் புகுவோம் ;நீயிங்கு
ஒன்றிய செயலை நாளை ஒழிந்துபின் கொள்வாய்
என்று கொன்றைவார் சடையார்
தொண்டர் கோயில் கொண்டருளப் போந்தார்
ஆம் பூசாலார் தம் உள்ளுக்குள்ளே சிவாலயம் செய்தார். உள்-அவரு சிவாலயவ மாடிதரு.(செய்தார்)என்று பசவேசுவரர் பாடலை சற்று மாற்றிப்பாடினாலும் வெகு பொருத்தமே.
கடவுளின் பக்தியில் தோய்ந்த மகான்கள் சொல்லும் யாவும் சத்தியமாய் நின்றுவிடுகின்றன.
பசவேசுவரைப் பற்றி மேலே தெரிந்து கொள்ள இங்கே சுட்டவும்.