Monday, December 28, 2009

புலத்தைத் தின்னும் புள்ளினம்

கடந்த வாரம் இந்தியன் எக்ஸ்பிரஸ்-ல் வெளியான ஞாயிறு மலரில் கல்லறைத் தொழிலாளர்களின் வாழ்க்கைப் பற்றி ஒரு கட்டுரை வெளியாகியிருந்தது.அதில் ஒவ்வொரு மதத்திலும் இறுதி சடங்குகளின் முறைகள் அவற்றின் உட்பொருள், அத்தொழிலில் அவர்களது வருமானம், மனநிலை போன்றவற்றை ஓரளவு தெரிந்து கொள்ள முடிந்தது.

இசுலாமியர்களின் கல்லறைப் பெட்டியில் அடிப்பக்கம் இருக்காது என்பது எனக்கு ஒரு புது தகவலாக இருந்தது. அதற்கு சொல்லப்படும் காரணம் மண்ணிலிருந்து வந்தவர்கள் மண்ணுடனே போக வேண்டும் என்பதாகும்.



[படத்தை சொடுக்கினால் முழுக் கட்டுரையையும் படிக்கலாம்.]

ஒருவேளை இதனால்தான் ”மாட்டீ கஹே கும்பார்-கோ” என்று கபீர் மண் பேசுவது போல் குறிப்பிட்டிருந்தாரோ!

குயவன் கைமண் கூறும், பிசைமின் பிசைமின் இன்று
கூடிய விரைவில் உம்மை,பிசைவேன் பிசைவேன் என்று


[இது ஏற்கனவே விளக்கப்பட்ட ஈரடி. அதைப் படிக்க இங்கே சுட்டவும்]

படைப்புத் தொழிலை குயவனுக்கு உதாரணமாக்கி சொல்லாத மொழிகளோ சமயமோ இருக்காது என்றே கூறலாம். ஏனெனில் மண்ணிலிருந்தே மனிதனுடைய தொழில் திறனும் கலைத்திறனும் வெளிப்படத் துவங்கியது.

நாம் யாவரும் அறிந்த கடுவெளிச் சித்தரின் பாடல் வரிகள்-

நந்தவனத்தில் ஓர் ஆண்டி
அவன் நாலாறு மாதமாய்
குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி
அதைக் கூத்தாடி கூத்தாடி
போட்டுடைத்தாண்டி (நந்தவனத்தில்)


இறைவன் படைப்பின் பல்வகை விசித்திரங்களும் நந்தவனத்திற்கு ஒப்பிடப்படுகிறது. அங்கே ஒரு சீவாத்மா தனக்கென ஒரு உடல் வேண்டி பத்து மாதங்கள் கர்ப்பவாசமிருந்து உடலை பெற்று உலகில் வந்து சேர்கிறது. வந்த பின்போ வந்த வேலையை மறந்து புலனின்பங்களில் காலத்தைக் கழிக்கிறது. இறக்கும் தருவாயில் தவம் செய்து உய்யாமல் போனேனே என்ற வருத்ததுடன் உயிர் பிரிவதை ’போட்டுடைத்தாண்டி’ என்ற நையாண்டி செய்கிறார் சித்தர்.

இதையே கபீர்தாஸரும் சொல்கிறார்

आछें दिन पाछे गये, गुरु सों किया न हेत ।
अब पछितावा क्या करै, चिडियां चुग गई खेत ॥


கழிந்தன களியாட்டத் தினங்கள், குருவடி கண்டு கனிந்திலரே
கழிவிரக் கத்தால் பயனுமேது, புலத்தைப் புள்ளினம் தின்றனவே

(புள்ளினம் -பறவைகள்)

வேலையாள் ஒருவனை வயலில் காவல் காப்பதற்காக நிலத்தின் சொந்தக்காரன் அனுப்பி வைக்கிறான். அவனோ சீட்டாடுவதும், தின்பதும் பின்னர் ஒரு தூக்கமும் போடுவதாகக் காலத்தை கழித்தால் வயலில் விளைந்த தினையை பறவைகள் தின்று தீர்ப்பதில் ஆச்சரியம் ஏது?

நம் முற்பிறப்பின் நல்வினைகள் பொருட்டு மீண்டும் அவற்றை பாதுகாத்து பெருக்கிக் கொள்வதற்காக இறைவன் உடலைக் கொடுத்து அனுப்பி வைக்கிறான். வந்த பின்போ செல்வம், புகழ், பதவி போன்றவற்றை தேடும் கூத்தாட்டத்தில் வாழ்க்கையை கழித்தால் அது நம் பொறுப்பற்ற தன்மையைத் தானேக் குறிக்கும்.

இறைவனை நினைந்து உருகும் ஒரே கடமைதான் தலையாயது. அதை அருணகிரிநாதர் கந்தரலங்காரத்தில் உபதேசிக்கிறார்.

வினையோட விடும் கதிர்வேல் மறவேன்
மனையோடு தியங்கி மயங்கிடவோ
சுனையோடு அருவித் துறையோடு பசும்
தினையோடு இதணோடு திரிந்தவனே

(இதண் =பரண் )

சுனைகளிடத்தும் அருவித் துறைகளிடத்தும், பசுமையான தினைப் புனத்திலும், பரணிடத்திலும் வள்ளிக்கு அருள் செய்யும் பொருட்டு திரிபவனே ! மனைவி மக்கள் என்று இல்லற வாழ்க்கையில் மயங்கிக் கிடப்பது தகுமோ ? (எமது) வினைகள் ஓடும் படி விரட்டும் வேலாயுதத்தை ஒரு போதும் மறக்க மாட்டேன்.

’குருவாய் வரும் குகன்’ தினைப்புலம் காத்த வள்ளியை அவள் தீராத பக்தியைக் கண்டு ஆட்கொண்டதன் உட்பொருளை நம்முடைய ’வினைப்புலம்’ காக்கச் சொல்வதன் மூலம் கபீர்தாஸரும் நமக்கு நினைவூட்டுகிறார்.

பிரார்த்தனைகள் மூலம் நம்முள் விளையும் ஆன்மீகப் பயிரை உலகவாழ்க்கை ஒட்டிய எண்ணங்களாம் பறவைகள் தின்று விடாமல் இருக்க குருவடியை கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும் என்பதையும் கபீர் அறிவுறுத்துகிறார்.

தெரிவையுறும் பக்குவத்தின் சீராட்டு எல்லாமறிந்து
குருவை அறிந்தே நினைத்துக் கும்பிடுவது எக்காலம் ?

- பத்திரகிரியார் ஞானப் புலம்பல்

இறைவன் நாமாவளியை, இரு கைகளையும் தட்டிக் கொண்டு, உரத்து பாடும் போது உலகாதாய எண்ணங்கள் எல்லாம் கிட்டே வராமல், சத்தம் கேட்டு ஓடும் பறவைகள் போல ஓடி விடுமாம்.

சிலர் ஹரி ஹரி என்றும் சிலர் ராம் ராம் என்றும், துர்கா, காளி, சாயி, அல்லா, நானக்,புத்த மஹாவீர் என்று எந்த பேரைச் சொல்லி பாடினாலும் புள்ளினம் ஓடிடும், இறை இன்பம் தேடி வரும்.

Koyi Bole.mp3

( நன்றி: ஸ்ரீநிவாஸ் குழுவினரின் பஜன் )

அன்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு -2010- வாழ்த்துகள்

Saturday, December 05, 2009

இன்சொலான் ஆகும் கிளமை

காலை எட்டு மணியிலிருந்து சுமார் பதினொரு மணிவரை, நடைபெற்றுக் கொண்டிருந்த கட்டுமானப் பணிகளை மேற்பார்வையிட்டு , அரை கிமீ தூரத்திலிருந்த மெயின் ரோடு அலுவலகத்தை நடந்தே அடைந்தேன். வெயில் அசாத்தியமாக இருந்தது.

வாயிலில் வேட்டி கட்டிய கிராமத்து இளைஞன் காத்து நின்றிருந்தான். ஒடிசலான தேகம், வற்றிய கன்னங்கள். “யாரு வேணும்?” என்று கேட்டுக்கொண்டே பூட்டைத் திறந்து உள் நுழைந்தேன். ”உங்களத் தான் பார்க்கணும்னு வந்தேன்” என்ற அவன் உள்ளே வரவில்லை. கிராமத்துப் பக்க மக்களுக்கு உள்ள அடக்கம் தெரிந்தது. ”வாப்பா, உள்ளே வா” என்றழைத்தேன். நடுங்கிய கரங்களில் ஒரு உறையை நீட்டினான். வேலைக் கேட்டு வந்த விண்ணப்பம், ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது.

" ... I shall discharge all my duties to the fullest satisfaction of your esteemed office.."

”என்ன படிச்சிருக்கே ?”
பத்தாவது ஃபெயில், சார்.
ஒரு புன்முறுவலோடு ”யாரு எழுதி கொடுத்தா இந்த லெட்டரெ?” என்று கேட்டேன்.
”எங்க மாமா; ........ ஸ்கூலு வாத்தியாரா இருக்காரு”.

பொதுவாக வேலைக்கான விண்ணப்பம் என்றாலே ஆங்கிலத்தில் தான் எழுதப்படவேண்டுமென்ற நினைப்பு பலருக்கு உண்டு.

அவனுக்கு நிறுவனத்தின் அன்றைய நிலைமையை விளக்கி, விரைவிலேயே உற்பத்தி துவங்கப்படும் பொழுது அவனுடைய விண்ணப்பம் பரிசீலிக்கப்படும் என்று சொன்னேன்.

“சார், குடும்பம் ரொம்ப கஷ்டத்துல இருக்கு சார்....பார்த்து செய்யுங்க”

அவனுடைய குடும்பத்தில் யார் யார் என்னென்ன செய்கிறார்கள் விவரங்களை கேட்டுக் கொண்டேன். வசதியற்ற குடும்ப பின்ணணி என்பது புரிந்தது.

‘சரிப்பா ! எல்லாத்துக்கும் ஒரு நேரம் வரணும் இல்லையா. நாம நெனச்ச உடனே எதுவும் நடக்கிறதில்லையே! கூடிய சீக்கிரம் பாக்கலாம்!” என்று சொல்லி அனுப்பி வைத்தேன்.

இம்மாதிரி சிலர் வருவதும் விண்ணப்பங்கள் கொடுப்பதும் அந்த காலகட்டத்தில் வாடிக்கைதான். அதனால் அதை பெரிதாக நினைத்து பார்க்கவில்லை. ஆனால் இரண்டு அல்லது மூன்று நாட்களில் அவனிடமிருந்து ஒரு அஞ்சல் அட்டை வந்தது. அவனுக்கு முகம் கொடுத்து நம்பிக்கை அளிக்கும் வகையில் பேசியதற்கு தமிழில் நன்றி தெரிவித்திருந்தான். அதில் முகஸ்துதி இருக்கவில்லை. அது அவன் உள்ளத்திலிருந்து வந்தது என்பது புரிந்தது. ஒருவேளை வேறு பல இடங்களில் அவன் அனுபவம் கசப்பாக இருந்ததோ என்னவோ !

முதன்முறையாக, ஒரு உரையாடல் இனிமையாக இருக்க வேண்டியதன் அவசியத்தை எனக்குப் புரிய வைத்த நிகழ்ச்சி அது. நான் சாதாரணமாக பேசிய வார்த்தைகள் எவ்வளவு தூரம் அவனுடைய வாடிய உள்ளத்திற்கு தெம்பு அளித்திருக்கிறது என்பதை அவனுடைய வரிகளில் படித்த போது ஆச்சரியமாக இருந்தது.

முகத்தான் அமர்ந்துஇனிது நோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே அறம்.


முகம் மலர நோக்கி, அகம் மலர இனிய சொற்களைக் கூறுவதெ அறவழியில் அமைந்த பண்பாகும்.


பள்ளிக்கூடத்தில் வள்ளுவர் கூறியதை படித்திருந்தாலும் மனதில் வேர்விடாத கருத்து இந்த ஒரு அஞ்சல் அட்டை மூலமாக மறக்க முடியாத பாடமாகி விட்டது.

’அகத்தானாம் இன்சொலின்’ என்னும் போது இனிமையான சொற்கள் உள்ளத்திலிருந்து உண்மையாய் வரவேண்டியவை என்று புரிகிறது. அது எப்போது உண்மையாகும் என்பதை கபீர்தாஸ் சற்று விரிவாகக் கூறுகிறார்.

ऐसी वाणी बोलिए, मन का आपा खोये
अपना तन शीतल करे, औरन को सुख होए


நவில்வீர் நயமுடனே தானடங்கி தனுவடக்கி
தம்மன்பர் தம் உள்ளங் குளிரும் உரைகளே

(தான் அடங்கி= மனதில் ஆணவமற்று ; தனு அடக்கி = உடல் அவையவ கட்டுபாடுடன் )

மாற்று :
தானெனு முணர்வு களைந்து, தனுவதால் குற்றம் தவிர்த்து
அன்பர் தம் அகம் குளிர்வித்து, நவில்வீர் நும்முரை தேர்ந்து

( நும்முரை = உமது உரை)

Body language என்பதை இன்றைய நிர்வாக இயலில் கூர்ந்து கவனிக்கின்றனர்.

ஒருவர் இருக்கையில் அமரும் விதம், உரையாடலின் போது கைகளின் பிரயோகம், முகத்தில் காட்டப்படும் பாவனைகள் (கண் விரித்தல், நெற்றி சுருக்குதல், உதடு சுழித்தல், கொட்டாவி ), சத்தம் போட்டு சிரிப்பது, நையாண்டியாக கைகால்களை ஆட்டுவது, சோம்பல் முறித்தல் போன்றவை உடலால் ஏற்படக்கூடிய குற்றங்கள் ஆகும். இவற்றைக் கொண்டு, ஒருவர் எவ்வளவுதான் இனிமையாகப் பேசினாலும் அவருடைய பேச்சு எவ்வளவு தூரம் உண்மை அல்லது போலி என்பது புரிந்து விடும். ’அப்னா தன் ஷீதல் கரே’ என்பதன் மூலம் கபீர் பேசுபவரின் உடற்மொழி கட்டுக்குள் அமைதியாக இருக்க வேண்டியதன் அவசியத்தை உரைக்கிறார்.

அடுத்து மனதை பற்றி நிற்கும் குறை. இது அகங்காரத்தைச் சார்ந்தது. பேச்சின் தொனியிலேயே இது தெரிந்து விடும். தொனியின் மாறுபாட்டால் சொல்லவரும் கருத்தின் பொருள் மாறி போக வகையுண்டு.

பாண்டவர்களை ஒழித்து விடுவதாக சபதமிட்டு அஸ்வத்தாமன் அவர்களை துரத்திக் கொண்டு வந்தான். கண்ணனின் யோசனை ஏற்று அவர்களை ஒரு குழியினுள் பதுங்கச் செய்து அதை மூடி அதன் மேல் துர்வாசர் அமர்ந்து கொண்டார். பல இடங்களில் தேடியும் கிடைக்காமல் துர்வாசரை அணுகி அவர்களைப் பற்றி விசாரிக்கிறான் அஸ்வத்தாமன். ”ஆமாம் நான் அவர்களை எனக்கு அடியில்தான் ஒளித்து வைத்திருக்கிறேனாக்கும்” என்று மிகவும் கோபம் கொண்டவர் போல் கூறினார். கோபத்தில் நக்கலாக பேசுகிறார் என்று நினைத்து அவர் கோபத்துக்கு அஞ்சி அஸ்வத்தாமன் அங்கிருந்து விலகிப் போய்விட்டான்.

இப்படி நம் குரலில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள் (modulation) எப்படி கேட்பவர் உள்ளத்தில் பலவிதமான பாவனைகளை ஏற்படுத்தும் என்பதை ஒரு நிர்வாகயியல் பயிற்சி அரங்கில் சிறிய உதாரணத்துடன் விளக்கினர்.

பயிற்சியாளர் கரும்பலகையில் கீழ்கண்டவாறு எழுதினார்.

மணி பார்வதியை அடித்தான் என்று நான் சொல்லவில்லை

இந்த சொற்றொடரில் முதலில் ‘நான் சொல்லவில்லை’ என்பதை அழுத்தம் கொடுத்து சொல்லிப் பாருங்கள். கேட்பவர்களுக்கு ‘ வேறு யாரோ சொல்லியிருக்கவேண்டும் ‘ என்ற பாவனைத் தோன்றும்.

அதையே மணி என்ற வார்த்தைக்கு மாத்திரம் அழுத்தம் கொடுங்கள். இப்போது அடித்தவர் மணி அல்ல வேறு எவரோ என்ற பாவனை தரும். பார்வதி அடி வாங்கியது உண்மை. ஆனால் அதில் மணிக்கு சம்பந்தம் இல்லை .

அடுத்ததாக ’பார்வதியை ’ என்பதில் அழுத்தம் கொடுத்து சொல்லுங்கள். மணி அடித்தது உண்மை. ஆனால் பார்வதியை அல்ல.


இவ்வாறு நமது அன்றாட பேச்சில் நாம் சொற்களை கையாளும் விதம் பல விதமான பாவனைகளை கேட்பவர் மனதில் உண்டாக்கும்.

ஆகவே பேச்சு என்பது வெறும் எண்ணங்கள், நிகழ்வுகள் மட்டுமல்லாமல் உணர்வுகளும் கலந்து வெளிப்படுவது.

ஒருவன் தவறு செய்திருக்கலாம் என்பது நமது ஊகம். ஆனால் அவனைப் பற்றிய முந்தைய நிகழ்வுகள் அவன் தான் குற்றவாளி என்ற முடிவுக்கே இட்டு சென்று நமது வார்த்தைகளிலும் அதற்கான தொனி வெளிப்பட்டு விடும். அதை ஆங்கிலத்தில் prejudice என்பர். நமது கருத்துகளே சரி என்கிற அகங்காரத்தினால் வருவது. எனவேதான் மன அமைதியில்லாமல் எது பேசினாலும் அங்கே பொருட் குற்றம் வரக்கூடும்

அதனையே ”மன்கா ஆபா கோயே” என்று கபீர் சொல்கிறார்.

பல நேரங்களில் ஏதும் பேசாமலே மௌனம் காப்பது உத்தமம். ஞானிகள் பெரும்பாலும் கைகொள்வது இந்த அணுகுமுறைதான். தம் குறைகளை காது கொடுத்து ஒருவர் கேட்டாலே சொன்னவருக்கு பாதி மனப்பாரம் குறைந்து விடும். அதுவே நாம் அவர்களுக்கு செய்யும் சேவை.

மனிதப் பிறவி என்பதே அந்த இறைவனின் சொரூபம் என்றும் நமது இயல்பான குணமே ஆனந்தம் என்று ஞானிகள் சொல்கிறார்கள். ஆனந்தமாயுள்ளவனிடம் கோபமிருக்காது, அகங்காரமிருக்காது. அப்போது வெளிவரும் சொற்கள் யாவுமே இன்பம் தருபவையாகவே இருக்கும்.

அதனால்தான் குழந்தைகளின் பேச்சு யாவரையும் கவருகிறது.

சிறுபஞ்சமூலம் இந்த உண்மையை “இயல்புக்கு மாறான வன்சொற்களால் பகைமை வரும்” என்று சொல்கிறது. ஆமாம் வன்சொற்கள் மனித இயல்புக்கு மாறானவை. அவனது இயல்பு ஆனந்தம். அதனால் அவன் சொற்கள் இன்சொல்லாகவே இருக்க வேண்டும் என்று பெரியவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

இன்சொலான் ஆகும் கிளமை; இயல்பு இல்லா
வன்சொல்லில்ன் ஆகும் பகைமைமன்-மென்சொல்லித்
ஓய்வு இல்லா ஆரருளாம் அவ்வருள் நன்மனத்தான்
வீவு இல்லா வீடாய் விடும்.


(கிளமை= உறவு ; வீவு இல்லா = அழிவு இல்லாத ; வீடு =மோட்சம்)

[இனிய மொழிகளால் உறவு ஏற்படும்; இயல்புக்கு மாறான கொடிய சொற்களால் பகைமை வரும் ;மென்மையான சொற்களால் தொடர்ந்து பெருமையும் அருளும் பெருகும்; கருணையுள்ள நெஞ்சத்தால் கேடில்லா வீடு பேற்றை பெறலாம். ]

புல்லாங்குழலில் இனிய நாதம் வருவதற்கு தேர்ந்தெடுக்கப்படும் மூங்கிலில் நேரான அடைப்புகளற்ற உட்கூடு இருக்கவேண்டும். வளைந்து இருக்கும் மூங்கிலில் மூச்சுக் காற்றின் பாதை சீராக இருக்காது. அடைப்புகள் உள்ள குழலிலும் இசைக்கு வாய்ப்பில்லை. நம் மனம் அகங்காரம், தன்னலம் போன்ற கோணல்கள், அடைப்புகள் இல்லாமல் போகும் போது அழகான புல்லாங்குழல் போலாகிறது. அதை அவன் கை கருவியாக்கி செயல்பட்டால் நம் பேச்சு ஒவ்வொன்றும் இனிய நாதமாக இருக்கும். எப்போதும் பிறர்க்கு மகிழ்ச்சி ஊட்டுவதாக இருக்கும் என்பர் சான்றோர்கள்.

”அகத்தான் இன்சொலினிதே அறம்” என்று வள்ளுவர் சொல்வதும் “மன்கா ஆபா கோயே” என்று கபீர் சொல்வதும் ஆன்மீகப் பயணத்தில் இந்த முக்கியமான கட்டத்தை அடைவதற்காகத்தான். ஏனெனில் வீடு பேறு நோக்கிய பயணத்தில் அது ஒரு மைல்கல்.

Thursday, November 19, 2009

உடமையும் வறுமையும் ஒரு வழி நில்லா

சக்கிலியன் ஸைமன் குடிசையின் முன்னே பெரிய கோச் வண்டி வந்து நின்றது

மூன்று குதிரைகளால் இழுக்கப்பட்ட ஸ்லெட்ஜ்-கோச்சில் அந்த வட்டாரத்தின் மிகப் பெரும் சீமான் ஸைமனின் குடிசைக்கு முன்னே வந்து நின்ற போது ஸைமனுக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. குடிசையின் தாழ்வான கதவில் தலையை குனிந்து உள்ளே வந்த அவனைப் போன்ற ஒரு ஆகிருதி, தேககாந்தியை ஸைமைன் கண்டதில்லை. பின்னாலேயே அவன் வேலைக்காரனும் உடன் வந்து நின்றான்.

அவன் பேச்சும் போக்கும் ஆணையிடுவது போன்று இருந்தது. ஜெர்மனியிலிருந்து தருவிக்கப் பட்ட மிக விலையுயர்ந்த பதப்படுத்திய தோலைக் காட்டி ’இது போல் தோலைக் கண்டிருக்கிறாயா’ என்று கேட்டான். ஸைமன் இல்லையென்று தலையசைத்தான். ’இதன் விலை தெரியுமா உனக்கு?’ என்று மிரட்டுவது போலக் கேட்டான். ’இருபது ரூபிளாக்கும்’ என்றதும் ஸைமன் வாயடைத்து நின்றிருந்தான்.

நடக்கும் போது சுருக்கங்கள் விழாது, ஒரு வருடத்துக்கு உழைக்கக்கூடிய,
குதிகால் உயரம் உள்ள முழுக்காலணிகளை தயாரித்துக் கொடுக்க முடியுமா என்று சீமான் கேட்டான். ஸைமன் மைக்கேலைப் பார்த்தான். மைக்கேல் கனவானைப் பார்க்கவில்லை. அவன் பின்னாலிருந்த சுவர் மூலையை உற்று நோக்கி கொண்டிருந்தான். திடீரென்று அவன் முகத்தில் புன்முறுவல் பூத்தது. முகத்தில் ஒரு புதிய ஒளி தோன்றியது.

”என்ன தயார் செய்ய முடியுமா?” என்று சீமானின் குரல் அதிகாரத் தொனியில் வினவியது. ”கண்டிப்பாக செய்து தருகிறேன்” என்று மைக்கேலின் சம்மதம் இல்லாமலே சொன்னான் ஸைமன். “நினைவிருக்கட்டும், அதில் சுருக்கங்கள் வரக்கூடாது. சரியாகத் தைக்காமல் பின்னால் ஏதேனும் பிரச்சனை வந்தால் உங்களை போலீஸிடம் ஒப்படைத்து விடுவேன்” என்று சொல்லியவாறே தன் ஒரு காலை நீட்டினான். உடனே அவனது வேலைக்காரன் அவனது காலணியை விலக்கினான். சீமான் குளிருக்காக அணிந்த கால் உள்ளுறையும் மிக விலையுயர்ந்தது என்பது தெரிந்தது. ஸைமன் அவன் பாதங்களை ஒரு தாளில் வரைபடமாக பதிவெடுத்துக் கொண்டான்.

சீமானின் மிடுக்கான பேச்சும் தோற்றமும் ஸைமனுக்கும் அவன் மனைவிக்கும் மிரட்சியை உண்டு பண்ணியது. அவன் திரும்பி வெளியே செல்ல எத்தனித்த போது நிமிர்ந்த தலை குனிய மறந்ததால் வாயில் நிலையில் மோதிக் கொண்டது. தலையைத் தேய்த்தவாறு மீண்டும் போலீஸ் எச்சரிக்கை விடுத்துக் கொண்டே கோச் வண்டியில் ஏறி சென்றான் அந்த சீமான்.

மைக்கேல் ஸைமனிடம் வந்து சேர்ந்து சில வருடங்கள் ஓடி விட்டிருந்தன. அவன் வந்து சேர்ந்த விதமே விசித்திரம். மைக்கேல் அவசியமின்றி பேசுவதே இல்லை. எவ்வளவு தேவையோ அவ்வளவே பேசினான். அவன் முகத்தில் வருத்தமோ சந்தோஷமோ கண்டதில்லை. மூன்றே தினங்களில் பல வருட அனுபவமுள்ள ஒரு சக்கிலியன் ஒப்ப வேலையைக் கற்றுத் தேர்ந்தான். அவனுடைய திறமையில் முழு நம்பிக்கை உடையவனாய் இருந்தான் ஸைமன். சீமான் விட்டுச் சென்ற தோல் துண்டை எடுத்து மைக்கேல் வெட்ட ஆரம்பித்தான். ஆனால் மேற்கொண்டு அவன் அதை செருப்பாக தைத்துக் கொண்டிருந்தான். பாதங்களை மூடும் முழுக் காலணியாக வடிவமைக்கவில்லை.

ஒருபுறம் அவன் செயல் ஆச்சரியத்தைக் கொடுத்தாலும் ஸைமன் அவன் போக்கிற்கே விட்டு விட்டான். மைக்கேலின் எந்த முடிவும் தவறாக இருக்காது என்ற நம்பிக்கையே அதற்கு காரணம். அன்று மாலைக்குள்ளாகவே மீண்டும் அந்த குதிரை வண்டி வந்து நின்றது. அதிலிருந்து இறங்கி வந்த வேலைக்காரன் சீமான் கொடுத்த அந்த தோலை திருப்பி தரும்படி சீமாட்டி பணித்ததாகவும் அந்த தோலில் சீமானின் காலளவுக்கு ஒரு செருப்பு போதுமென்றும் கூறினான்.

ஸைமனின் ஆச்சரியம் எல்லை கடந்தது. ஏனிந்த மாற்றம் என்று வினவினான். போகும் வழியிலேயே சீமான் உயிர் துறந்ததாகவும் அவனுடைய பிணந்தான் வீடு சென்று இறங்கியதாகவும் சொல்லிய வேலைக்காரன் இப்போது தேவைப்படும் செருப்பு அவருடைய இறுதி யாத்திரைக்கு எனவும் தெரிவித்தான். தயாராக இருந்த செருப்பையும் மிச்சம் இருந்த தோல் பகுதிகளையும் சுருட்டிக் கொடுத்து அவனை அனுப்பி வைத்தான் ஸைமன்.


WHAT MEN LIVE BY ? [மனிதர் வாழ்வது எதனால் (நிர்ணயிக்கப்படுகிறது)? ] எனப்படும் லியோ டால்ஸ்டாயின் கதையிலிருந்து ஒரு பகுதியே மேலே படித்தது. இக்கதையில் மைக்கேல் ஒரு தேவதூதன். கடவுளின் ஆணை ஒன்றை மீறியதற்காக பூமியில் மூன்று கேள்விகளுக்கு விடையறிந்து வர அனுப்பப்பட்டவன். அந்த மூன்று கேள்விகள்:

1) What dwells in men ? -- மனிதருள் நிறைந்திருப்பது எது ?

2) What is not given to him ?- அவர்களுக்கு அளிக்கப்படாதது எது ?

3) What men Live by ? -மனி்தர் வாழ்வது எதனால் ?

இரண்டாவது கேள்விக்கான விடையை அந்த சீமானின் வருகை மூலம் அறிந்து கொண்டதாலே அவன் முறுவலித்தான்.

யாருக்கு எப்போது எது தேவை என்பதை கடவுள் மட்டுமே அறிவான். ”தன்னுடைய தேவைகள் எவையெவை என்பதை பூரணமாக அறியும் அறிவே மனிதனுக்கு அளிக்கப்படாதது”. அந்த சீமானின் வாழ்க்கை மூலம் மைக்கேல் தெரிந்து கொண்ட விடை இது.
{முதல் கேள்விக்கும் மூன்றாம் கேள்விக்கும் விடை ’அன்பு’ என்பது கதையோட்டத்தில் விளக்கப்படுகிறது.}
சில நிமிடங்களிலே உயிர் போகப் போகின்றத் தருணத்திலும் தனக்கு இன்னும் ஒரு வருடத்திற்கு உழைக்கக்கூடிய காலணிகளை கேட்க்கும் சீமானைப் போன்றவர்களே உலகத்தோர் என்பதை மிக அழகான கதை மூலம் விளக்கியுள்ளார் டால்ஸ்டாய் அவர்கள். இதுவே நிலையாமை.

’உலகத்திலேயே மிக ஆச்சரியம் தரும் விஷயம் யாது?’ என்கிற யக்ஷனுடைய கேள்விக்கு தருமபுத்திரர் கொடுத்த விடையும் நாம் யாவரும் அறிந்ததே. தினம் தினம் இறப்பவர்களை கண்முன்னே கண்டு கொண்டே இருப்பினும் நாம் மட்டும் சாஸ்வதம் என்கிற வகையில் செயல்படும் மனிதரை விட வேறு என்ன ஆச்சரியம் இருக்க முடியும்?

திருமூலர் இந்த நிலையாமையை நாடகப் பாணியில் கொண்டு செல்கிறார். ஒவ்வொரு வரியிலும் ஒரு காட்சியை கண்முன்னே நிறுத்துகிறார்.

அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார்
மடக் கொடியாரொடு மந்தணம் கொண்டார்
இடப்பக்கமே இறை நொந்தது என்றார்
கிடக்கப் படுத்தார் கிடந்தொழிந்தாரே


[அடப்பண்ணி= உணவை சமைத்து ; அடிசில் = சமைக்கப் பட்ட உணவு; மடக்கொடி =இளம் மனைவி ; இறை= சிறிது]

நாட்டுக்கு நாயகன் நம் ஊர் தலைவன்
காட்டுச் சிவிகை ஒன்று ஏறி கடைமுறை
நாட்டார்கள் பின்செல்ல முன்னே பறை கொட்ட
நாட்டுக்கு நம்பி நடக்கின்ற வாறே

[கடைமுறை =இறுதி முறையாக ; நம்பி= தலைவன்; நடக்கின்ற வாறே= நடந்து போகும் விதம்]

தில்லியில் ஒரு மிகப் பெரும் நிறுவனம், பத்து மாடி கட்டிடம் (Corporate Office) ஒன்றை, மூன்று வருட காலத்தில் கட்டியது. அதன் சேர்மனாக இருந்தவர் ஓய்வு பெறுவதாக அறிவித்து அவரது இளைய சகோதரர் புதிய கட்டிடத்தில் சேர்மனாகப் பதிவியேற்பார் என்ற அறிவிப்பு வெளியாகி தேதியும் குறிப்பிடப்பட்டு திறப்பு விழாவுக்கான அழைப்பிதழ்களும் அனுப்பப்பட்டுவிட்டன. சேர்மனுக்கான அலுவலகம் பலருடைய உழைப்பால் சிறப்பாக வடிவமைக்கப்பட்டது. ஆயின் இன்னும் ஒருவாரம் கூட இல்லாத நிலையில் பதவியேற்க வேண்டிய அந்த இளைய சகோதரர் மாரடைப்பால் திடீரென்று காலமானார். அப்போது நிறுவனத்தில் நிலவிய ஏமாற்றத்தை சொல்லி முடியாது.

அத்தகைய சோக நிகழ்ச்சிகளைக் காணும் போது கபீர் அவர்களின் கூற்றில் உள்ள உண்மை சுரீரென்று் உறைக்கிறது.

कबीरा गर्व न कीजीयॆ, ऊंचा दॆख आवास
काल परौ भुंई लॆटना, ऊपर जम्सी घास

செருக்கு வேண்டா கபீரா, வானளாவும் மாடம் என்று
எருக்கு விளையக் காண்பர் ஆ!, காலன் கிடத்தும் இடங் கண்டு


(புல் முளைக்கும் என பொருள்வரும் ’ஜம்ஸி காஸ்” என்று கபீர் சொல்லியிருப்பது எதுகை அமைப்புக்காக எருக்கு முளைப்பதாக மாறியுள்ளது )

காலம் தான் காலன். ஒவ்வொரு நொடியும் மரணத்தின் வாசலை நெருங்கிக் கொண்டிருக்கிறோம். இந்த உலகுக்கு வேண்டியவற்றை சேர்த்தாகி விட்டது. குடும்பத்தினருக்கும் இன்னொரு தலைமுறைக்கு வேண்டியது இருக்கிறது.

தேவைகளை சுருக்கிக் கொள்ளத் தெரிவதில்லை. ஒன்று தொட்டு ஒன்று, எதன் காரணமாகவோ அது வளர்ந்து கொண்டே போகிறது. எதையோ பற்றிக் கொண்டு எதையோ தேடி ஓடிக் கொண்டே இருக்கிறோம்.

கடைசியில் இவையெதும் உடன் வரப்போவதில்லை, தெரியும். உடன் வரக் கூடியதை சம்பாதிக்க மனம் ஈடுபடுவதில்லை. ’காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே’ என்பதன் பொருள் தெரிந்தும் மனதுள் இறங்குவதில்லை. அது தன் போக்கில் இழுத்துக் கொண்டே போகிறது. அப்போது அது சந்திக்கும் ஏற்றத் தாழ்வுகள்தான் எத்தனை எத்தனை! அதை அதிவீரராம பாண்டியர் வரிகளில் பார்ப்போம்.

உடமையும் வறுமையும் ஒரு வழிநில்லா

குடைநிழலிருந்து குஞ்சரமூர்ந்தோர்
நடைமலிந்து ஓரூர் நண்ணினும் நண்ணுவர்

சிறப்பும் செல்வமும் பெருமையும் உடையோர்
அறக்கூழ் சாலை அடையினும் அடைவர்

அறத்திடு பிச்சை கூவி இரப்போர்
அரசரோடு இருந்து அரசு ஆளினும் ஆளுவர்

குன்றத்தனைய இருநிதி படைத்தோர்
அன்றைப் பகலே அழியினும் அழிவர்

எழுநிலை மாடம் கால்சாய்ந்துக்குக்
கழுதை மேய் பாழாகினும் ஆகும்


[ நண்ணுதல் = சேர்தல்; அறக்கூழ் சாலை= தர்ம சத்திரம் ]

காலன் எவருக்கும் தனி மரியாதை கொடுப்பதில்லை. அரண்மனை வாசமிருக்கும் மன்னனும்,வெளியே திரியும் பிச்சைக்காரனும் அவன் புத்தகத்தில் ஒன்றே.

அதனால் இடையே ஏற்படும் பலவிதமான செருக்குகள் இறுதியில் அர்த்தமில்லாமல்போய்விடுகிறது . குலச் செருக்கு,செல்வச் செருக்கு, கல்விச் செருக்கு,அதிகாரச் செருக்கு இப்படி பலவாறாக நம்மை ஆட்டிப் படைக்கும் மாயை ஒரே கணத்தில் அவற்றை ஏதுமில்லாமலும் செய்து விடுகிறது.

இப்படி எத்தனைத் தினங்கள் (அல்லது பிறவிகள் )கழியப் போகின்றன. மனதிற்கு இவைகளிலுள்ள நிலையாமை ஏன் புரியாமல் போகிறது? இதை குறிப்பிடும் வகையிலும் கபீர் சொல்லும் இன்னொரு ஈரடி:

क्या करियॆ क्या जॊडिये, थॊडॆ जीवन काज
छाडि छाडि सब जात है, दॆह गॆह धन राज


அற்ப வாழ்வு அவனியிலே, அலைவ தென்ன அடைந்த தென்ன
சொற்ப தினமே போயின யாவும், தனம் திவரம் கிருகம் தேகம்

( திவரம்= தேசம், ராஜ்யம் )

இந்த மனம் இறைவன் பெயரில் இருக்கும் சுகத்தை அறியாததனால் தானே இப்படிக் கிடந்து உழலுகி்றது.

அவன் தான் இந்த சக்கரச் சுழலுக்கு அச்சு. வண்டிச் சக்கரத்தின் விளிம்பில் அமர்ந்திருக்கும் ஈ, பாதையின் மேடு பள்ளங்களுக்கு ஏற்ப குலுங்கிக் குலுங்கி பயணம் செய்யும். அது மெள்ள நகர்ந்து அச்சாணியை அணுகுமளவும் ஆட்டம் குறைந்து கொண்டே போகும். கடைசியில் அச்சாணியிலே அமர்ந்து விட்டால் பாதையின் மேடு பள்ளங்கள் அதை பாதிக்காது.

ஆகவே பரம சுகம் தரும் கடவுளின் நாமத்தைப் பிடித்துக்கொள். இறைவனுக்கு அருகே செல்வதற்கு அதுவே வழி. இல்லாவிட்டால் காலன் வாயிலில் மீண்டும் மீண்டும் புகுவதே வேலையாகிவிடும். இதற்கு விதிவிலக்கு என்பதே கிடையாது என்று எச்சரிக்கிறார் கபீர்.

कबीर सब सुख राम है, औरहि दुख की रासी ।
सुर नर मुनि अरु असुर सुर, पडे काल की फांसि ॥


இராம நாமமே பரமசுகம் கபீரா, மற்றன வெல்லாம் துன்பமயம்
தேவ முனிவரும் நராசுரரும், சேர்வரே கடையில் காலன்வயம்

( நராசுரர்= நரர்+அசுரர்)


புரந்தரதாஸருக்கும் அதே கருத்து. ராம ராமா என்னிரோ என்கிற அவருடைய பாடல் ஒன்றை சமீபத்தில் சிருங்கேரி சென்றிருந்த போது நண்பர் ஒருவருடைய மகள் இப்பாடலை பாடக் கேட்டு மனது உருகியது. அதன் ஒலிப்பதிவு இங்கே தரப்பட்டுள்ளது.
[Cam coder -ல் பதிவு செய்தபடியால் சில குறுக்கீட்டு உரையாடல்கள் இடையிடையே கேட்கும். மன்னிக்கவும். சில நல்ல விஷயங்களுக்காக சில அல்லல்களைப் பொறுத்துக் கொள்வதில் தவறில்லை என்று கருதுகிறேன்
:) ]

சிறுமியின் பெயர் ரம்யா. எளிதாக புரியும் வார்த்தைகள்தான், ஆயினும் மொழி பரிச்சயமில்லாதவர்கள் பாடலைத் தொடர அதன் பொருள் கீழே தரப்பட்டுள்ளது. ’என்னிரோ’ என்றால் சொல்லுங்கள் என்று பொருள் படும்.
sringeri.mp3


கட்டிய மனைவியும் கூட வர மாட்டார் ;ராம ராமா என்று சொல்லுங்கள்.
தன்னவர் என்று வளர்க்கப்பட்ட மக்களும் தன்னவர் ஆவதில்லை; ராம ராமா என்று சொல்லுங்கள்.
நிலம், கால்நடை தான்யம் தனம் யாவும் விட்டு செல்வனவே; ராம ராமா என்று சொல்லுங்கள்.
கெட்ட சம்ஸாரம் இது, சுகம் என்பது கிஞ்சித்தும் இல்லை ராம ராமா என்று சொல்லுங்கள்.
சிருஷ்டியில் முதல்வனான புரந்தர விட்டலனை மறவாது
ராம ராமா என்று சொல்லுங்கள்.
நரஜென்மம் என்பது ஸ்திரமில்லை, அந்த கோமளாங்கன் நாமம் அந்த (கடைசி)வேளைக்கு வராது. ராம ராமா என்று சொல்லுங்கள்.

இப்போதிலிருந்தே இறைவன் நாமத்தை செபித்து பழகாவிட்டால் கடைசி நேரத்தில் அது துணைக்கு வராது என்பதையும் புரந்தரதாஸர் குறிப்பிட்டு சொல்கிறார்.

நம் கல்நெஞ்சைக் கரைக்க இன்னும் எத்தனை கபீர்களும் புரந்தரரும், திருமூலரும் வரவேண்டுமோ தெரியவில்லை.

Thursday, November 05, 2009

பக்தித் துவாரம் குறுகியது

அந்த சிறுவனை ட்யூஷனுக்கு அழைத்து வந்திருந்தார் அவனுடைய தாய். கபடமற்ற கண்கள். அவன் நெற்றியில் சிறு திருநீற்றுக் கீற்று. பாலமுருகனையே கண்டது போல் இருந்தது. சாதுவான பையன் என்பதை சொல்லத் தேவையே இல்லை.
“ சார், இவனுக்கு எல்லார் கிட்டேயும் நல்ல பேர். டீச்சர்ஸ் கூட அவனைப் பத்தி ரொம்ப நல்ல மாதிரிதான் சொல்றாங்க. வீட்டுலேயும் அவனால யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. தன்பாட்டுக்கு நேரத்துக்கு எழுந்து, குளிச்சு சாப்பிட்டு ஸ்கூலுக்கு கெளம்பிடுவான். எந்த பிடிவாதமும் கிடையாது. சொன்ன பேச்சை கேட்பான். ஆனா எந்த ஸப்ஜெக்டிலேயும் மார்க் மாத்திரம் வர மாட்டேங்குது. கிட்டத்தட்ட எல்லா ஸப்ஜெக்ட்லேயும் ஃபெயில். எங்களுக்கு என்ன செய்றதுன்னே புரியவில்லை. ஏண்டா! டீச்சர் சொல்றது புரியலையான்னு கேட்டா பதிலே சொல்ல மாட்டான். ஸ்லோ லெர்னர். இவன் ஒரு மனுஷனா ஆவானா சார் ? என்று மிகுந்த கவலையுடன் விசாரித்தார்.

இப்படிப்பட்ட கவலைதான் ஞானிகளுக்கும் பல பக்தர்களை காணும் போது ஏற்படுகிறது. அந்த பக்தர்களின் வாழ்க்கை முறை எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருக்கிறது. சராசரி நித்ய கடமைகளை தவறாமல் செய்கின்றனர். ஆனால் அவற்றின் மூலம் கற்க வேண்டிய பாடத்தை மட்டும் கற்றுத் தெளிவதில்லை. இவர்கள் எப்போது தேறி ஞானத்தை அடையப் போகிறார்கள் என்ற ஆதங்கம் அவர்களை ஆட்கொள்கிறது. யோகி வேமனாவுக்கும் தன் தாயாரின் விஷயத்தில் அப்படி ஒரு கவலைத் தோன்றியது.

வேமனா ஆந்திராவின் மிகப் புகழ் பெற்ற யோகி. அனு வேம ரெட்டி என்ற அரசனின் தம்பி. இளம் வயதில் வழி தவறியவராய் இருப்பினும் சிவயோகி ஒருவரின் தொடர்பினால் ஞான வழிக்கு திரும்பினார். அவருடைய ஆயிரக்கணக்கானப் பாடல்கள் இன்றும் ஆந்திரத்தில் ஆன்மீக ஒளி பரப்பிக் கொண்டிருக்கிறது.

அவருடைய தாயார் தீர்த்த யாத்திரைக்குக் கிளம்பினார்.

’நீ திரும்பி வரும் பொழுது இந்த தாமிர தாயத்து தங்கமாய் மாறியிருக்குமா பார்ப்போம்’ என்று ஒரு ரட்சை அணிவித்து அனுப்பி வைத்தார். அம்மையாரும் புரீ காசீ கயா போன்ற பல புண்ணிய தலங்களில் நீராடி கோவில்களில் பூசைகள் செய்து பலமாதங்களுக்கு பின்னர் திரும்பினார். அவருக்கு வேமனா கூறியிருந்தது மறந்தே போயிருந்தது.

வேமனா அவரைக் கண்டதும் தாயத்து தங்கமாய் மாறியதா என்று தாயத்தைக் காட்டச் சொன்னார். செப்பு செப்பாகவே இருந்ததைக் கண்டு ’பக்தியும் சிரத்தையும் இல்லாமல் செய்யும் எந்த யாத்திரைக்கும் பலனிராது’ என்றார். தாயாருக்கும் பிறருக்கும் புரியவில்லை. அதெப்படி செப்பு தங்கமாக முடியும் என்று வினவினர்.

’முடியும்’ என்று சொல்லி அந்த தாயத்தை வாங்கி ஒரு கிண்ணத்தில் வைத்து அதன் மேல் சிறிது நீரை சொரிந்தார். யாவரும் வியக்கும் வண்ணம் செப்பு தாயத்து தங்கமாக மாறியது. அதை தாயாரின் கையில் வைத்து ‘உண்மையான பக்தி இருந்தால் நீ இருக்குமிடமே காசி. ஏனிந்த சிரமம்?’ என்று கூறினாராம்.

வேமனா குறிப்பிடும் தங்கம், மனிதர்கள் கோவில் குளம் என்று சுற்றுவதெல்லாம் இறைவனின் பெருமையை உன்னி உன்னி படைப்பில் சர்வமாக வியாபித்து இருக்கும் அவன் பால் அன்பு பெருகி வர வேண்டிய மன மாற்றத்தைக் குறிப்பதாகும். ஆனால் சாமானியர்களான நமக்கோ எப்போதும் நம்மைப் பற்றிய சிந்தனையிலேயே ஊறி இருப்பதால் உண்மையான பக்தி என்பது என்னவென்றே புரிவதில்லை. இது வகுப்பிலே அமர்ந்திருந்தாலும் பாடத்தில் கவனம் செலுத்தாத மாணவன் போன்றது.

புரியாததன் விளைவாக கடைசியில் பலனேதும் இல்லாமல் போகிறது. வேமனாவின் தாயாரைப் போலே, கிடைக்காத பலனைப் பற்றிய ஞானமும் குறைவே. ஞானிகள் இந்த நிலையை கண்டு பரிதாபம் கொள்கின்றனர். இதை கபீர் இலவு காத்தக் கிளிக்கு ஒப்பிடுகிறார்.

जप तप दीखै थोथरा, तीरथ व्रत विशवास ।
सूआ सेमल सेइया, यौं जग चला निरास ॥


செல்வார் யாத்திரை, நேர்வார் நோன்பு, செபதபத்திலு மாசை
இலவு கொத்தும் கிளி போலும், இறுதியில் நிற்பதோ நிராசை


புண்ணியம் வரும் பாவம் போய்விடும் என்று செய்யப்படும் பலவிதமான விரதங்கள், யாத்திரைகள், செப தபங்கள் எல்லாம் கடைசியில் அர்த்தமின்றி போய்விடுவதாக கூறுகிறாரே கபீர் என்ற சந்தேகம் எழலாம். உண்மையில் அவற்றிற்கான பலன் எப்போதும் உண்டு. ஆனால் அது பிறவிச் சுழலிலிருந்து விடுதலை தராது. ஞானிகள் எதிர்பார்ப்பது பிறவித் தளையிலிருந்து விடுதலையைத்தானே !

பையன் அடுத்த வகுப்பிற்கு போக வேண்டும். எத்தனை வருடங்கள் ஒரே வகுப்பில் பெஞ்சை தேய்க்க முடியும்? எனவே தான் கபீர் காலவிரயத்தை இலவு காத்த கிளிக்கு ஒப்பிடுகிறார்.

பரமஹம்ஸர் பக்தியின் நிலையை இரண்டாகப் பிரித்து சொல்கிறார். முதல் நிலை வைதீக பக்தி. இரண்டாம் நிலை பிரேம பக்தி. முதல் நிலையில் சாத்திரப்படி ஏதேனும் வழிபாட்டு முறையை மேற்கொண்டு சிரத்தையுடன் நடத்தி வருவது. அப்படி செய்வதே நாளடைவில் இரண்டாம் நிலைக்கு இட்டுச் சென்று தன்னுடையது என்று எதுவுமின்றி எல்லாம் இறைவனுக்காகவே, இறைவனாகவே காணும் மனப் பக்குவத்தை பக்தன் அடைவது.

நேரத்தில் எழுந்து குளித்து, சாப்பிட்டு பள்ளிக்கு போவது போன்றது வைதீக பக்தி. அங்கே சொல்லிக் கொடுக்கப்படும் பாடத்தை கேட்டுத் தெளிவது பிரேம பக்தி. சத்கர்மங்கங்களிலும் சத்சங்கங்களிலும் தீவிரமான நாட்டம் கொண்டு குரு உபதேசத்தை மனதில் நிறுத்தி கடைபிடிப்பது பிரேம பக்தி. புரிந்து கொண்ட பாடத்தின் இறுதி நிலை என்ன? திருமந்திரம் விடை சொல்கிறது.

பத்தன் கிரியை சரியை பயில்வுற்றுச்
சுத்த அருளால் துரிசு அற்ற யோகத்தில்
உய்த்த நெறி உற்று உணர்கின்ற ஞானத்தால்
சித்தம் குரு அருளால் சிவமாகுமே.

(பயில்வுற்று= பயின்று; துரிசு அற்று=குற்றம் இல்லாத)

உலகில் பெரும்பாலானவர் முதல் இரண்டு வகையில் அடக்கம். சரியை பல தலங்களுக்கும் சென்று பரம்பொருளை வழிபடுவது. கிரியை என்பது மாலை மலர் சாற்றி, அர்ச்சனை, நிவேதனம் செய்து உள்ளும் புறமும் வழிபடு்வது. யோக நெறியில் புகுவதற்கான அருளை பெறும் முன் சரியை கிரியையில் தேர்ச்சி பெற வேண்டும். அதாவது அடுத்த வகுப்புக்கு தேர்ச்சி அடைய இருக்கும் வகுப்பில் பாடங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

எப்படிப்பட்ட பக்தர்களுக்கு இறைவன் அருள் நிலைக்கிறது என்பதை மற்றொரு பாடலில் சொல்கிறார் திருமூலர்.

கானுறு கோடி கடிகமழ் சந்தனம்
வானுற மாமலரிட்டு வணங்கினும்
ஊனினை நீக்கி யுணர்பவர்க் கல்லது
தேனமர் பூங்குழல் சேர வொண்ணாதே

(ஊனினை நீக்கி= உடற்பற்றை நீக்கி )

கானகத்தில் கிடைக்கும் எல்லா மலர்களையும் மணம் கமழும் சந்தனத்தையும் பூசித்தாலும் உடற்பற்றை நீக்கி உணர்பவர்க்கல்லாமல் இறைவன் திருவடியை அடைய முடியாது.

இந்த ஊன் பற்றை விலக்குவதில் தான் பிரச்சனை. தன்னால் எல்லாம் நடக்கிறது என்ற எண்ணம் குறுக்கே வந்து முன்னேற்றத்தைத் தடுக்கிறது. இதை ஆணவமலம் என்பர் ஞானிகள். மனதில் ஆணவமலம் இருக்கும் வரை உடற் பற்றும் இருக்கும். அதை முழுவதுமாக மாய்ப்பது என்பது சாதாரண விஷயமல்ல. அதை இன்னொரு ஈரடி மூலம் கபீர் விளக்குகிறார்.

भक्ति दुवारा सांकरा, राई दशवें भाय ।
मन तो मैंगल होय रहा, कैसे आवै जाय ॥


பத்தித் துவாரம் குறுகியது, கடுகளவில் பத்தில் ஒன்று
மத்தம் பிடித்தக் களிறது, மனமும் உட்புகும் வழியெது ?


மனதைப் பிடித்திருக்கும் ஆணவ மலம் மதம் பிடித்த யானையைப் போன்றதாம். அதனை கடுகின் அளவில் பத்திலொரு பாகம் அளவே இருக்கும் பக்தி எனப்படும் துவாரத்தின் வழியே நுழையச் செய்வது எப்படி என்று வினவுகிறார் கபீர்தாஸ்.

நாக மஹாசயரைப் போல் அன்பே வடிவினராய் தொண்டராம் தொண்டருக்கு...தொழும்பனாய் மாறினால் முடியும்.

அன்பு முதிர்ந்தால் ஆணவம் உதிர்ந்து விடும். அப்போது இறைவன் அவன் நெஞ்சத்தை கோயிலாய் கொள்கிறான்.

அன்பின் முதிர்ச்சியை இன்னொருவர் வாழ்க்கையில் காண்போம். திருமூலர் சொல்லும் ஊன்பற்று நீங்கி எல்லா உயிர்களிலும் இறைவனையே கண்டவர். அவரும் ஒரு தல யாத்திரை மேற்கொண்டார். அவரு்டையது பெரிய யாத்திரை.

முதல் கட்டமாக கங்கையை அடைந்து அங்குள்ள புண்ணிய தலங்களை சேவித்தார். அடுத்த கட்டமாக அங்கிருந்து குடங்களில் கங்கையை நிரப்பி காவடியாக சுமந்து ராமேஸ்வரம் சென்று அங்கே ராமர் பூஜித்த சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து யாத்திரையை நிறைவு செய்ய வேண்டும். அவ்வாறே போய்க் கொண்டிருக்கும் பொழுது வழியிலே ஒரு கழுதை தாகத்தால் வாய் உலர்ந்து மரணத்தைத் தழுவும் நிலையை எட்டியிருந்தது. யாத்ரிகரது மனம் மிகவும் இளகியது. சுற்றும் முற்றும் நீர் கிடைப்பதற்கான வாய்ப்பு காணப்படவில்லை. தேடிக் கொண்டு வருவதற்குள் கழுதையின் உயிர் பிரிந்தாலும் பிரிந்து விடும் என்கிற நிலை.

கையில் இருப்பது சிவனுக்கென கொண்டு செல்லும் கங்கை நீர் மட்டுமே. ஒரு பிராணியின் தாகத்தைத் தீர்க்க போதுமானதா என்பதும் புரிய வில்லை. அந்த ஜீவனிலும் குடியிருப்பது சிவன் தானே. அதைக் காப்பாற்ற பயன்படாத நீர் எவ்வளவு புண்ணிய தீர்த்தமாய் இருந்தென்ன?

உத்தவனுக்கு கிருஷ்ணன் சொல்லவில்லையா ’எல்லாவற்றிலும் என்னையே காண்பாய். என்னை சோதிப்பதற்காக்வே தான் இப்படி ஒரு நிலைமையை காட்டியிருப்பான் போலும்’ என்றெல்லாம் அவர் எண்ணம் ஓடியது. ஒரு உயிரை காப்பாற்றுவதைக் காட்டிலும் பெரிய தர்மம் இருக்க முடியாது என்பதை ஆழமாக உணர்ந்தார். குடத்தில் இருந்த கங்கை நீரையெல்லாம் அந்த அப்பாவி ஜீவனை குடிக்கச் செய்தார். உடனிருந்தவர் ராமேஸ்வரத்திற்கு என்ன செய்வது என்று கேட்டனர். இதோ இதுவே தான் ராமேஸ்வரம் என்று பதில் சொன்னாராம். அவரைப் பொறுத்தவரை எந்த சிவனுக்காக நீரை கொண்டு சென்றாரோ அவனை அது அடைந்து விட்டது.

பக்தியென்பதை முழுமையாகப் புரிந்து கொண்டு வழிபாடு செய்த அந்த யாத்ரிகனே ஏகநாத் என்று மகாராஷ்டிரத்தில் போற்றப்படும் மகான். மகாராஷ்டிரத்தில் ஞானேஸ்வரரின் கீதையைப் போலவே ஒவ்வொரு வீட்டிலும் ஏகநாதருடைய பாகவதம் மிகவும் போற்றப்படும் ஒரு இலக்கிய படைப்பு ஆகும். காலத்தால் ஞானேஸ்வரருக்கு பிற்பட்டவர். முன்னூறு ஆண்டுகளுக்கு பிந்தையவர் ஆயினும் ஞானேஸ்வரரின் தரிசனம் கிடைத்து அவரது வேண்டுகோளுக்கு இணங்க அவரது ஞானேஸ்வரியை செப்பனிட்டு மீண்டும் வெளியிட்டவர் அவரே என்றும் சொல்வர்.

கபீரின் எந்த ஈரடியை யாருடைய பார்வையில் புரிந்து கொள்ள முற்பட்டாலும் சுற்றிச் சுற்றி ஒரே மையப்புள்ளிக்கு நம்மை இட்டுச் செல்கிறது. ஆம் அன்பு ஒன்றுதான் அச்சாணியாக உலகைத் தாங்கி நடத்திச் செல்கிறது.

Saturday, October 24, 2009

தண்மை பொழிவார் தொண்டர்

திரைப்படத்தின் முதல் காட்சி. மகிழ்ச்சியுடன் ஆடிப்பாடி கொண்டிருக்கும் ஒரு குடும்பம். அண்ணன், தம்பி (அல்லது தங்கை) பெற்றொர்களுடனும் உறவினர்களுடனும் பிறந்த நாளோ தீபாவளியோ கொண்டாடிக் கொண்டிருப்பார்கள்.

இரண்டாம் காட்சி: ஒரு கொலை வெறிக் கும்பல் திடீரென்று உள்ளே புகுந்து சிறுவர்கள் கண் முன்னாலேயே தாய் தந்தை சித்தப்பா, வேலைக்காரன் போன்ற அனைவரையும் சுட்டுவிட்டு தப்பி ஓடுகிறது.

கடைசி் காட்சி: சட்டம், காவல் துறை உதவி யின்றியே வளர்ந்து விட்ட சிறுவர்கள் கொள்ளையர் கும்பலை பழி தீர்த்துக் கொள்கிறார்கள். சுபம்.

இது ஃபார்முலா படம். மொழிகள் வேறாக இருக்கலாம், நடிகர்கள் வேறாக இருக்கலாம், களம் வேறாக இருக்கலாம்.
நீதி நிலை நாட்டப்படுகிறது என்ற பெயரில் சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு வன்முறைகளுக்கிடையே பழி உணர்ச்சியுடன் கூடிய நாயகன் உணர்வுகளை நியாயப் படுத்தி காட்டப்படும் சித்திரம்.

அடுத்தது சின்னத் திரை.

சேனல் ஒன்று : மருமகளைக் கொல்வதற்கு ’சுபாரி கில்லர்’களை ஏற்பாடு செய்யும் மாமியார்;

சேனல் இரண்டு :தொழிலதிபரான மாமனாரை தீர்த்துக் கட்ட ஸ்லோ பாய்ஸன் கொடுக்கும் மருமகன்;

சேனல் மூன்று : “அவர்கள் குடும்பத்தை உடைத்து நான் யார் என்பதைக் காட்டுகிறேனா இல்லையா பார்” என்று சவால் விடும் பெண்மணிகள்.

இத்யாதி..இத்யாதி
இங்கு பெரிய திரையை போல் கதை சுருக்கம், சுபம் எல்லாம் சொல்ல முடியாது. ஏனெனில் அந்த மெகா தொடர்களின் போக்கு மேற்கொண்டு எப்படிச் செல்லும் என்பது அந்தந்த கதை டிபார்ட்மெண்டுக்கே இன்னும் தெரிந்திருக்காது


எந்த சேனலைத் திருப்பினாலும் கோடிகளில்தான் உயிர்கள் விலை பேசப்படுகிறது. லட்சங்களுக்கு மதிப்பே இல்லாமல் போய்விட்டது ! பெரிய திரையில் உடல்ரீதியான வன்முறை என்றால் சின்னத்திரையில் மனோரீதியான வன்முறை வலம் வருகிறது.

தொழிலாளர் முதலாளி மோதல்களெல்லாம் அரத பழசு. இப்போதெல்லாம் சிறிய உரசல்களையெல்லாம் மகாபாரதம் போல் குடும்ப சண்டைகளாக்கி வெறுப்பை விதைத்து, வளர்த்து வியாபாரம் செய்வது தான் நவீன யுக்தி. அந்த மசாலாதான் ருசிக்கிறது. இந்தத் தொடர்களை உணவு தட்டைக் கையில் வைத்துக் கொண்டு கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டே தின்னா விட்டால் பலருக்கு சாப்பாடு உள்ளே இறங்காது.

இவ்வாறு பார்க்கும் இடம் எல்லாம் காழ்ப்புணர்ச்சியும் பழி தீர்த்தலும் தான் நியாயம் என்ற வகையில் கருத்துகளை தொடர்ந்து உள்வாங்கி வருவதால் குடும்ப விரிசல்கள் மேலும் விரிந்து உடைகிறது. முதியோர் இல்லங்கள் அதிகரிக்கின்றன. ஏன் புது புது யுக்திகளை தெரிந்து கொண்டு சமுதாயத்தில் குற்றங்களும் அதிகமாகின்றன.

எப்படி கபீர்தாஸ் இவைகளை எல்லாம் காணும் முன்பே இதற்கேற்றாற் போல் பொருத்தமான ஈரடிகளை சொல்லி வைத்திருக்கிறார் என்று ஆச்சரியம் ஏற்படுகிறது.

क्रोध अगनि घर घर बढी, जलै सकल संसार ।
दीन लीन निज भक्त जो, तिनके निकट उबार ॥


வெறுப்பின் சுவாலை சூழுதே, மனைமனையும் பற்றி எரியுதே
அறிவாய் உய்யும் வழியதே, அடியவர் அன்பில் திளைப்பதே


दसौं दिसा से क्रोध की, उठी अपरबल आग ।
सीतल संगत साध की, तहां उबरिये भाग ॥


பகைமை பரவுது பெருங்கனலாய், பத்துத் திசையும் வெகுபலமாய்
தண்மை பொழிவர் தொண்டர்தாம், தஞ்சம் புகுந்திடு அதிவிரைவாய்


இரண்டு ஈரடிகளிலும் கபீர் பரிந்துரைப்பது சான்றோர்களின் உதவியால் மனதில் வளரும் வெறுப்பு என்னும் நச்சுப்பொருளை தவிர்க்க முடியும். அதற்கு எப்பொழுதும் மேலோர் துணை அவசியம் என்பதாகும்.

பகைமையும் அன்பும் இருளும் ஒளியும் போல. Mutually exclusive. ஒன்றிருந்தால் இன்னொன்று இருக்க முடியாது.

ஆகையால் பிடிவாதமாக மனதில் எழும் அல்லது தூண்டப் பெறும் வெறுப்பு உணர்ச்சிகளைக்கூட வெறுத்து ஒதுக்க வேண்டும். நம் நல்லெண்ணங்களைப் புரிந்து கொள்ளாமல் நம் மீது வெறுப்பை கொட்டுபவர்களிடமிருந்து விலகி நிற்பதே நலம். குறைந்த பட்சம் நாம் வெறுப்பை விதைக்காமல் இருக்கலாம் அல்லவா!

கடித்துக் கரும்பினைக் கண்தகர நூறி
இடித்து நீர் கொள்ளினும் இன்சுவைத்தே யாகும்
வடுப்பட வைதிறந்தக் கண்ணுங் குடிப்பிறந்தார்
கூறார் தம் வாயிற் சிதைந்து


என்று பெரியோர் பெருமையை புகழ்கிறது நாலடியார். கரும்பினைக் கடித்து, கணு நொறுங்குமாறு இடித்து அதன் சாற்றை பிழிந்தாலும் பிழிந்தவர்க்கு அது இனிக்கவே செய்யும். அது போல மனம் புண்படும்படி சிறியவர் திட்டித் தீர்த்தாலும் பெரிய மனதுடைய சான்றோர்கள் அவர்களை திரும்பத் திட்ட மாட்டார்கள். அவர்களுடைய மேன்மையான நடத்தை இன்பம் தருவதாகவே இருக்கும்.

அதற்கு தேவையான மனப்பான்மையை அவர்கள் எப்படிப் பெறுகிறார்கள்? நிறைந்த அன்பினால் வரும் தன்னம்பிக்கை அது. தன்னம்பிக்கை உடையவனை குலைக்கமுடியாது. அவன் கொண்ட கொள்கையில் மாற்றம் இராது.

சிலம்பம், கராத்தே, குங்ஃபூ போன்ற தற்காப்பு முறைகளை கற்றவர்கள் வெகு எளிதில் கோபம் அடைவதில்லையாம். அதன் பின்ணணி அவர்களுக்கு இருக்கும் தன்னம்பிக்கையே. அவர்களுக்குத் தெரியும் எதிரியின் பலவீனமே அவர்களின் முன்கோபமும் வெறுப்புணர்ச்சியுந்தான் என்பது. அவர்கள் எதிரியை தலைமேல் அமரும் ஈயைப் போல தாங்குவர் என்கிறது இன்னொரு செய்யுள்

மதிதிறப் பாரும் இறக்க மதியா
மிதித்திறப்பாரும் இறக்க -மிதித்தேறி
ஈயும் தலைமேல் இருத்தலால் அஃதறிவார்
காயும் கதமின்மை நன்று

(கதம்= கோபம்; காய்தல்=வருத்துதல்)

மனதில் அன்பு பெருகும் போது பெரும் தியாகத்திற்கு கூட தயாராகி விடுகிறது நம் உள்ளம். அன்பில் சிறந்தவர் தமக்கு வெற்றி தரத் தக்க ஆற்றலையும் வலிமையையும் கூட விட்டுக் கொடுக்க தயங்க மாட்டார்கள் என்பதை ஏனாதிநாதர் நாயனாரின் தியாக வரலாற்றின் மூலம் அறிகிறோம்.

கும்பகோணத்திற்கு* தென்கிழக்கில் ஏனநல்லூர் என்ற ஊரில் வசித்தவர் ஏனாதிநாதர். அரச குடும்பத்தினருக்கு வாள் வித்தை பயிற்றுவிப்பது அவருடைய தொழில். வாள் வித்தையில் மிகச் சிறந்த அவ்வீரர் தொழிலின் மூலம் தமக்குக் கிடைத்த வருவாயை சிவனடியார்களின் சேவைக்கென பயன்படுத்தி சிவத் தொண்டிலும் சிறப்புற்றிருந்தார். அவர் புகழ் எல்லாத் திசைகளிலும் பெருகி வளர்ந்தது.
(* காஞ்சிபுரத்தருகே உள்ள ஏனநல்லூர் என்றும் சொல்வதுண்டு)

அதே காலத்தில் அதிசூரன் என்னும் இன்னொரு வாள் ஆசிரியனும் இருந்தான். தன்னை விட அதிகம் வாட்கலை கற்றவர் இல்லை என்ற செருக்குடன் திரிந்தான். அவனுடைய தற்பெருமையே அவனுடைய தொழில் மங்குவதற்கு காரணமாயிற்று. அதைப் புரிந்து கொள்ளாத மூடன் ஏனாதிநாதர் மேல் பொறாமை கொண்டான். அவரை வெற்றி கொண்டால் தன் புகழ் ஓங்கும் என்றெண்ணி அவரையும் அவரைச் சேர்ந்தவர்களையும் போருக்கு அழைத்தான்.

இருதரப்பிலும் உள்ளோர் மிகக் கடுமையான போரில் ஈடுபட்டனர். அதிசூரன் தோற்கும் நிலைக் கண்டதும் களத்தை விட்டோடினான். தனது தோல்வியை அவனால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. எனவே சூழ்ச்சியால் வெல்லும் எண்ணத்துடன் ஏனாதிநாதருக்கு தனிப் போர் செய்ய தூது விட்டான். நரிக்கு சிங்கம் பயப்படுமா? அதனையும் ஏற்று வாளும் கேடயமும் ஏந்தி போர்களம் புகுந்தார். கேடையத்தால் முகத்தை மறைத்தபடியே வாள் வீசி வந்த அதிசூரனுக்கு ஏனாதிநாதரின் தாக்குதலை தாங்க இயலாமல் போனபோது தம் முகத்தை மெள்ள அவர் காணுமாறு கேடயத்தை விலக்கினான். அப்போது அதிர்ச்சி ஏற்பட்டது ஏனாதிநாதருக்கு. அதை பெரிய புராணம் இப்படி உரைக்கிறது.

கண்ட பொழுதே ’கெட்டேன்! முன்பு இவர் மேற்காணாத
வெண் திருநீற்றின் பொலிவு மேற்கண்டேன் - வேறு இனி என்?
அண்டர்பிரான் சீர் அடியார் ஆயினர்
’ என்று மனம்
கொண்டு ’இங்கு இவர் தம் கொள்கைக் குறிவழி நிற்பேன்’ என்று (645)


கைவாளுடன் பலகை நீக்கக் கருதியது
செய்யார் ”நிராயுதரைக் கொன்றார் எனும் தீமை
எய்தாமை வேண்டும் இவர்க்கு”
என்று இரும் பலகை
நெய்வாளுடன் அடர்த்து நேர்வார் போல் நேர் நின்றார்
(646)

(அடர்த்து நேர்வார் போல்= சண்டையிடுபவர் போல)

அதுவரை போரில் வெற்றி பெற வேண்டும் என்றிருந்த குறிக்கோள் போய், மடை திறந்த வெள்ளம் போல் திருநீற்றைக் கண்ட உடனேயே சிவபெருமான் பால் அன்பு பெருக்கெடுத்தது. சிவனடி்யார் சித்தமே சிவன் சித்தம் என தன் உயிரையும் தர தயாராகி விட்டார் ஏனாதிநாதர். போதாதற்கு நிராயுத பாணியை கொன்றதாக அவப் பெயர் அவருக்கு வந்து விடக்கூடாது என்று சண்டையிடுபவர் போல் பாசாங்கு செய்து அதிசூரன் வாளினால் மரணத்தைத் தழுவினார்.

அதிசூரன் சிவனடியார்களுக்கு ஏனாதிநாதர் துன்பமிழைக்க மாட்டார் என்ற கொள்கையைப் பயன்படுத்தி சிவனடியார் வேடம் பூண்டு வஞ்சகமாக அவரைக் கொன்றான் என்பதை ”முன்பு இவர் மேற்காணாத வெண் திருநீற்றின் பொலிவு..” என்ற வாசகங்களால் அறிகிறோம்.

வஞ்சகத்தைப் புரிந்து கொள்ளாத மூட பக்தியிது என்று மனித குலம் நினைக்கலாம். ஆனால் அதற்கு சேக்கிழார் சொல்லும் பதில்;

மற்றினி நாம் போற்றுவது என் ? வானோர் பிரான் அருளைப்
பற்றலர் தம் கைவாளால் பாசம் அறுத்து அருளி
உற்றவரை என்றும் உடன் பிரியா அன்பு அருளிப்
பொற்கொடியாற் பாகனார் பொன்னம்பலம் அணைந்தார்
.
(பற்றலர் =பகைவன்)

பகைவனுடைய வாளாலேயே உலகப் பாசத்தை அறுத்து உடன்பிரியாமல் தன்னுடன் இணைத்துக் கொண்ட சிவபெருமானது பெருமையை போற்றுவது எங்ஙனம் ? என்று சொல்லி இறைவன் புகழுக்காக உயிரைக் கொடுப்பதே மேலான செயல் என்று வலியுறுத்துகிறார்.

அன்பெனும் ஊற்று வெளிப்படுவதற்கு ஊற்றுக் கண் ஒன்று வேண்டும். ஏனாதிநாதர் அதைச் சிவச்சின்னமாக பகைவனின் நெற்றியில் அணிந்த திருநீற்றில் கண்டார். இனி வேறு என்? அண்டர் பிரான் சீரடியார் ஆயினர் ,,இவர்தம் கொள்கை குறிவழி நிற்பேன் “ என்று தம்மவராக பாவித்து அவருடைய தேவையே பெரிது என்று முடிவு செய்கிறார்.

மொழி தெரியாத மாநிலத்தில் தமிழ் பேசுபவரைக் கண்டால் உடனே அன்பு பொங்குகிறது. கண்காணாத தேசத்தில் இந்தியர் என்றாலே ஒருமை பாராட்டி மகிழ்கிறது மனம்.

நல்ல சத்சங்கங்களிலே புத்தகங்களிலே மகான்களின் வாழ்க்கையிலே தினம் ஈடுபாடு கொள்ளும் போது பல வகைகளிலே அது திறந்து வெளிப்பட வாய்ப்புண்டு.
எல்லாமே அவனாகி நிற்கும் அடிப்படை, சத்சங்கங்களின் மூலம் புரிய வரும் போது யார் யாரிடம் எதற்காக வேற்றுமை பாராட்ட வேண்டும் என்ற எண்ணம் வளர்ந்து, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை வருகிறது.

மழையில் நனைந்த விறகு தீயினை ஏற்காது. அன்பில் நனைந்து விட்ட உள்ளமும் வெறுப்பினை ஏற்காது. அந்நிலையில் வெறுப்பை உமிழும் அன்பரிடமும் கூட வெறுப்பு கொள்ளாது அன்பையே பாராட்டும் குணம் மேலோங்குகிறது.

அதனால்தான் கபீர் ”அறிவாய் உய்யும் வழியதே; அடியவர் அன்பில் திளைப்பதே” என்றும் ”தண்மை பொழிவர் தொண்டர்தாம், தஞ்சம் புகுந்திடு அதிவிரைவாய் ” என்றும் அறிவுறுத்துகிறார்.

பகைமை உணர்ச்சிகளை வேரறுக்க அன்பே சிறந்த சாதனம். மனைமனையும் பற்றி எரியுது என்பது பொய்யாகி குடும்பங்களில் மகிழ்ச்சி திரும்ப அன்பே வழி. அன்பே சிவம்.

Monday, October 12, 2009

அவரவர் இறையவர் குறைவிலர்

தொழிற்சாலைகளில் பல இயந்திரங்களை இயக்கும் மின்சக்தி மோட்டர்கள் ஏராளமாக வொர்க் ஷாப்பில் கிடப்பில் கிடக்கும். பல வேலை செய்யாது;ஒரு சில ஸ்டாண்ட்‍‍ ‍பை என சொல்லப்படும் தயார் நிலையில் வைக்கப் பட்டிருக்கும். வேடிக்கை என்ன வென்றால் எதற்கான ஸ்டாண்ட் பையோ அதற்கான தேவை வராது. வேறு ஏதோ ஒரு மோட்டருக்கான அவசியம் வந்துவிடும். அந்நிலையில் வொர்க் ஷாப்பில் தேடல் துவங்கும்.

சார், இங்கே NGEF-5 H.P. மோட்டர் இருக்குது சார். பொகஞ்சு போனதும் அஞ்சு ஹெச்.பி. தான சார் ?

அது கிர்லோஸ்கர் மோட்டர். என்ன ஸ்பீட் போட்டிருக்கான் பாரு"

ஆவாது சார், இது 2800 . நமக்கு 1440 இல்ல வேணும்.

அதோ அந்த க்ராம்டன் மோட்டர பாருப்பா. அது கூட 5 h.p. தான் நெனக்கிறேன்.

அது பேஸ் ஃபிரேம் (base frame) செட் ஆவாது சார். போறாததுக்கு போனவாட்டி ரீவைண்ட் பண்ணி வந்ததிலேந்து சுகமில்ல சார். அடிக்கடி ட்ரிப் ஆவுது.

அரைமணி முக்கால் மணி தேடிய பிறகு உதவியாளருக்கு ஒரு ஐடியா. "சார், ஒரு கூலிங் டவர் சும்மா தான இருக்கு. அதுல இருக்கிற மோட்டரும் 5, 1440 தான். பேஸ் ஃப்ரேம் கூட செட் ஆயிடும். ஆனா கப்ளர் ஷாப்ட் மட்டும் கடைஞ்சி போட வேண்டியிருக்கும். லேத் க்கு ஆள அனுப்பினா மதியத்துக்குள்ள தயார் பண்ணிடலாம். அப்புறமா ரெண்டு நாள்ல கூலிங் டவருக்கு வேற ஒண்ணு செட் பண்ணிடலாம்"

கொஞ்சம் யோசித்து, “அப்படியா சொல்ற. அதுல கைவைக்க வுடுவாங்களாய்யா? சரி மேனஜர் சார் கிட்ட பேசிப் பாக்குறேன். நீ ஒடனே லேத்துக்கு போன் பண்ணு.”


இது தினசரி வாடிக்கை. பார்ப்பதற்கு இந்த மோட்டர்களெல்லாம் ஒன்று போலவே இருக்கும். ஆனால் அவற்றிற்கு இடையே உள்ள வித்தியாசங்களை நுணுக்கம் அறிந்தவர்கள் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.

ஆன்மீகப் பாதையில் யாவரும் சாதகர்களே. ஆனால் அவர்களிடையே பெரும் வித்தியாசம் இருக்கும். அதை முறையாக அறிபவர் உயரிய ஆன்மீக நிலை அடைந்த குரு மட்டுமே. மோட்டார்களின் திறன் உள்ளே இருக்கும் கம்பிச் சுற்றுகளின் தரம், எண்ணிக்கை, சுற்றப்பட்ட விதம் போன்ற பல காரணங்களால் வேறு பட்டிருக்கும். ஆனால் வெளிக்கூடு ஏறக்குறைய ஒரே மாதிரி காட்சியளிக்கக்கூடும். அது போல சாதகர்களும் அவர்களது பழவினைச் சுற்றுகளுக்கும் வாசனைகளுக்கும் ஏற்ப தத்தம் திறமைகளில் வேறுபட்டிருப்பர்.

சுவாமி விவேகானந்தர் சிவோஹம் சிவோஹம் என்று சொல்லிக் கொண்டே உள்ளே வந்தமர்ந்தார். "அதெப்படி மானுட வடிவில் இருந்து கொண்டு தன்னை சிவனாக பாவிக்கலாம்?" என்று நாகமகாஷயர் கேள்வி எழுப்பினார். "அவனுக்கு அவன் பாதை சரி. உனக்கு உன்பாதை சரி" என்று ராமகிருஷ்ணர் பதிலளித்தாராம். குரு சொன்னால் சரியாகவே இருக்கும் என்ற நாகமஹாஷயர் "அப்படியானால் சரி" வினயத்துடன் ஏற்றுக்கொண்டாராம்.

மற்றொரு சமயம் நரேந்திரன் இரவு நேர தியானத்தில் உயர்ந்த சமாதி நிலையை எட்டிய நிலையில் அருகிலிருந்த சாரதாநந்தரிடம் 'என்னைத் தொடு 'என்று பரவசத்துடன் அவருக்கும் தன் அனுபவத்தை தெரிவிக்க விழைந்தார். அவரை தொட்டதும் சாரதாநந்தரின் உடலுக்கு அந்த சக்தியின் தாக்கத்தை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இல்லாமல் மிகுந்த தேக‌சிரமத்திற்கும் மன சிரமத்திற்கும் உள்ளானார். அதே சமயத்தில் எங்கோ அமர்ந்திருந்திருந்த ராமகிருஷ்ணர் "இந்த நரேன் ஏனிப்படி புத்தியில்லா காரியத்தை செய்கிறான் "என்று அருகிலிருந்தவரிடம் கடிந்து கொண்டாராம்.

குறைந்த வேகத்தில் ஓட வேண்டிய எந்திரத்திற்கு அதிவேக மோட்டர் இணைப்பைக் கொடுத்தால் எந்திரத்தின் உட்பாகங்கள் சிதைந்து போகக்கூடும். கிட்டத்தட்ட அந்த நிலைமைதான் சாரதாநந்தர் அடைந்தது. அதனால்தான் ராமகிருஷ்ணரும் தமது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

சாரதநந்தருக்கு மீண்டும் ராமகிருஷ்ணர் பலவேறு முறைக‌ளில் பயிற்சியளித்து வெகுநாட்களுக்குப் பின்பே தன் இயல்பு நிலையை அடைந்தார் என்று படித்ததுண்டு. அதாவது ராமகிருஷ்ணர் என்கிற மெக்கானிக் சிதைந்த பகுதிகளை சரி பார்த்து மீண்டும் எந்திரத்தை ஓடச் செய்தார் ! :))
(சாரதாநந்தரின் பெயர் நினைவிலிருந்து எழுதப்பட்டது. ஒரு வேளை வேறு ஒரு சக சாதகராகவும் இருந்திருக்கலாம்)

ஆகவே Sauce for the goose is Sauce for the gander என்னும் வழக்கு ஆன்மீகத்தில் சரியாகாது. ஒருவருக்கான பயிற்சி முறைகளும் முன்னேற்றப் பாதையும் இன்னொருவருக்கு முற்றிலும் எதிர்மறையாக அமையக்கூடும்.

கபீர்தாஸ் மிக எளிமையாக இந்த வேற்றுமையை தினசரி நிகழ்விலிருந்து படம் பிடித்துக் காட்டுகிறார்.

मांगन को भल बोलनो, चोरन को भल चूप ।
माली को भल बरसनो धोबी को भल धूप ॥


இரப்பவன் கூவிப் பிழைக்கணும், கள்வனோ மவுனம் காக்கணும்
உழவன் மழையைக் கேட்கணும், வண்ணான் வெங்கதிர் பார்க்கணும்


மாற்று :
பிச்சைக்கு உரத்தக் குரல் நன்று, திருட்டுக்கு மவுனமே நன்று
உழுகைக்கு மழையே நன்று, வண்ணாரத் திற்குவெயில் நன்று.


அடிப்படையில் கபீர் குறிப்பிடும் நால்வரது நோக்கமும் வயிற்றுப்பாட்டை பூர்த்தி செய்து கொள்வதுதான். ஆனால் அவர்களின் தேவைகளில்தான் எவ்வளவு வித்தியாசம்.

இதன் உட்பொருள் எல்லா சாதகர்களின் நோக்கமும் இறைவனை அடைவது தான் என்றாலும் அவர்களுக்குரிய காலமும் வழிமுறைகளும் வெவ்வேறாக இருக்கும் என்பது தான்.

தவசிகள் அனைவருமே ஒரு வகையில் இல்லறத்தாரை சார்ந்திருக்கும் பிச்சைக்காரர்கள்தாம். வால்மீகி முனிவன் ஒரு வழிப்பறித் திருடன், மணிதாஸ் ஒரு தோட்டக்காரன், திருக்குறிப்பு தொண்ட நாயனாரோ ஒரு சலவைத்தொழிலாளி.

இவர்கள் யாவரையுமே அவர்களுக்கு உரிய காலத்தில் உரிய விதத்தில் தடுத்தாட்கொண்டு முக்தி அளித்து பெருமை படுத்த தவறவில்லை இறைவன்.

அவரவருக்கான சூழ்நிலைக்கேற்ப கடமைகள் வெவ்வேறானவை. சிறப்பாக கடமை செய்வதிலே கருத்து இருந்தால் ஞானமும் காலாகால‌த்திலே வரும். அவன் இறைச்சி விற்கும் வியாதனாக இருப்பினும் சரி அவனிடத்து செல்ல வேண்டி வழிகாட்டும் இல்லத்தரசியாக இருப்பினும் சரி ஞானவான்களாக திகழ்வார்கள்.

(ரம்யா அவர்கள் ஏற்கனவே இந்த கதையை சுவையாகக் கூறி விட்டிருப்பதால் மீண்டும் இங்கே எழுதுவது அவசியம் இல்லை)

இவ்வாறு பல உதாரணங்களின் மூலம் நாம் தெரிந்து கொள்ளும் உண்மையை நம்மாழ்வர் தொகுத்து ஒரே பாடலில் சொல்லி விடுகிறார்.

அவரவர் தமதமது அறிவு அறி வகைவகை
அவரவர் இறை அவர் என அடி அடைவர்கள்
அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்
அவரவர் விதிவழி அடைய நின்றனரே.


ஒவ்வொருவரும் படைப்பிலே மாறுபட்டு இருப்பதையும் அவர்களுக்கான மார்க்கங்கள் வெவ்வேறு என்பதை தமதமது அறிவு அறி வகைவகை என்று அழகாக அடுக்குத் தொடர் இட்டு உரைக்கிறார் ஆழ்வார் பெருமான்.

அறிவு அறி வகைவகை என்பது ஒரே குறிக்கோளுக்கு பல வகை வழிகள் இருப்பதும் ஏற்பு உடையதே என்பதையும் உணர்த்துகிறது.

அவரவர் இறையவர் குறைவிலர்’ என்பதை அதிகம் அறியப்படாத ஒரு தோட்டக்காரன் கதை மூலம் பார்போம்.

ஒரிஸ்ஸாவின் புரீ ஜகன்னாதனிடம் அளவற்ற அன்பு பூண்டவன் மணிதாஸ். படிப்பறிவு இல்லாவிட்டாலும் ஒழுக்கத்தில் மேலானவன்.யாவரிடமும் இனிமையாக பேசுபவன் உண்மை தவறாதவன். தன் தோட்டத்தில் விளைந்த மலர்களை தொடுத்து அன்புடன் ஜகன்னாதனுக்கு சாற்றி மகிழ்ந்தவன்.

அருளாசையின் விளைவாகப் பணத்தாசை துறந்தவனானதால் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருந்தான். அதனால் பாட்டு சுலபமாக வந்தது. எப்போதும் இறைவன் பெருமைகளை பாடிக்கொண்டிருப்பான். பாடுவது மட்டுமல்ல தன்னை மறந்து ஆடவும் செய்வான். அப்போது அருகே இருப்பவர் யார் என்ன சொல்கிறார் என்பதெல்லாம் அவனுக்கு தெரியவே தெரியாது.

ஒரு முறை ஜகன்னாதரின் சந்நிதி முன் நடைபெற்றுக் கொண்டிருந்த ஒரு பெரும் பண்டிதரின் சொற்பொழிவைப் பற்றி கவலையின்றி பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டும் கண்ணன் தரிசனத்தில் மெய்மறந்தான். பண்டிதருக்கு எரிச்சல் உண்டாயிற்று. அவரை அப்பால் போகச் சொல்லியும் பலன் இல்லாமல் போயிற்று. ஆரம்பத்தில் அவனை அறிந்தவர்கள் ஓரளவு முயற்சி செய்து பார்த்தும் அவனுடைய பரமார்த்திக நிலையிலிருந்து விடுபடவில்லை. ஆட்டத்தையும் பாட்டத்தையும் நிறுத்தவில்லை. கடைசியில் கூட்டம் கூடி அவனை அடித்து விரட்டினர்.

சுயநினைவுக்கு வந்த மணிதாஸுக்கு கூட்டத்தினர் மீது கோபம் வரவில்லை. ஜகன்னாதன் மேல் வந்தது. தன்னுடைய பாடல் ஜனங்களுக்குப் பிடிக்கவில்லை போகட்டும், தான் யார் நினைவாக பாடுகின்றனோ அவனுக்கும் கூட பிடிக்கவில்லை போலும்;இல்லாவிட்டால் அவர்களின் நடத்தையை தடை செய்திருப்பானல்லவா? அவர்களை விட்டு அடித்து துரத்தி விட்டதன் மூலம் அவனுக்கும் பிடிக்கவில்லை என்றே ஆயிற்று; இப்படி எல்லாம் நினைத்து கோபம் அதிகமாகி கோவிலை விட்டு வெளியேறி ஒரு மடத்தில் போய் உட்கார்ந்து கொண்டான். எதுவும் சாப்பிடவில்லை.

புரீ மன்னனுக்கு இரவில் ஜகன்னாதர் கனவில் வந்து “வேந்தனே இன்றைய சாயங்காலப் பூஜை எனக்கு நிறைவளிக்கவில்லை. என் அன்பன் மணிதாஸின் பாடலைக் கேட்கவிடாமல் உன் பிரஜைகள் அவனை அடித்து துரத்திவிட்டனர். அவன் மனவலியால் உணவும் அருந்தாது கோவிலுக்கு வெளியே அமர்ந்திருக்கிறான். நீ உடனடியாக அவனை அழைத்து வா. இனிவரும் உபன்யாசங்கள் லட்சுமி மந்திரில் நடத்தப் படட்டும். என் அடியார்கள் என் தரிசனத்திலேயே சந்தோஷப்படட்டும்” என்று சொல்லி மறைந்தான். அரசனுக்கு கனவை வெறும் கனவென்று ஒதுக்க முடியவில்லை. உடனே ஆட்களை அனுப்பி மணிதாஸை கண்டு அழைத்து வரும்படி பணித்தான்.

அதே நேரத்தில் மணிதாஸின் கனவில் வந்த பெருமான் அன்புடன் தலையை வருடிக் கொடுத்து “நீ ஏன் சாப்பிடவில்லை? உனக்குத் தெரியுமா, நான் கூட இன்று சாப்பிடவில்லை. நீ பசித்திருக்கும் போது என்னால் எப்படி சாப்பிட முடியும் ? “ என்று சொல்லி மறைந்தான். கண் விழித்த மணிதாஸின் முன்னால் பிரசாதத் தட்டு நிறைய உணவு இருந்தது. மணிதாஸனும் பசியாறினான்.

அரண்மனையிலிருந்து வந்த பரிவாரம் முழுமரியாதையோடு அவனை அழைத்துச் சென்று ஜகன்னாதன் சந்நிதி முன்னே நிறுத்தி அவனுடைய பாட்டைக் கேட்டு மகிழ்ந்தது. அன்றிலிருந்து மணிதாஸின் பாடல்களுக்கு எந்த தடையும் இருக்கவில்லை. சொற்பொழிவுக்கான அரங்கமும் ஜகன்னாதர் சந்நிதியிலிருந்து லெட்சுமி தேவி கோவிலுக்கு மாற்றப்பட்டது.

இது தோட்டக்காரனுடைய தோட்டத்தில் (அருள் )மழை பெய்த கதை.

அவனே ஒரு பெரும் தோட்டக்காரன். வண்ண வண்ண உலகை நிர்மாணித்து காலாகாலத்தில் மழையும் வெயிலும் தந்து, மவுனமாய் பக்தர்களின் உள்ளத்தைக் கவரும் கள்வனாகி, அவர்கள் ஆடியும் அரற்றியும் உரத்து அருளுக்காக கூவுவதை வேடிக்கைப் பார்ப்பவன் !!

இவையும் அவையும் உவையும்
இவரும் அவரும் உவரும்
எவையும் எவரும் தன்னுளே
ஆகியும் ஆக்கியும் காக்கும்
அவையுள் தனிமுதல் எம்மான்
கண்ண பிரான் என் அமுதம்
சுவையன் திருவின் மணாளன்
என்னுடைச் சூழல் உளானே


வரும் தீபாவளி நன்னாளில் யாவருக்கும் அந்த கண்ணனின் அருள் பெருகுவதாக.

அனைவருக்கும் தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்.

Saturday, September 26, 2009

அந்தகன் முன்னே ஆடற்கலை

எப்போதும் யாவர்க்கும் திறந்து இருக்கும் ரமணாஸ்ரமத்தி்ற்கு ஒரு அன்பர் விஜயம் செய்தார். மகரிஷியின் சமீபமாக அமர்ந்து கொண்டு கேள்வி கேட்கத் தொடங்கினார்.

“பகவான்! ஜனனக் கட்டுப்பாடு (birth control) பற்றிய தங்கள் கருத்து என்ன ?”

பதிலேதும் வராமல் போகவே கேள்வியின் முக்கியத்துவத்தைப் பற்றி விரிவாக விளக்கினார். பின்னரும் ஏதும் பதில் வரவில்லை. ஒரு வேளை தான் சரியாகச் சொல்லவில்லையோ என்று மேலும் சிறிது நேரம் பேசி விட்டு ஓய்ந்து போனார். அந்த அறையில் மீண்டும் அமைதி நிலவியது.

இப்போது ரமணரின் குரலில் ஒரு கேள்வி தெளிவாக எழுந்தது.

”உமக்கு மரணக் கட்டுப்பாடு ( death control) பற்றித் தெரியுமா ?”

[இரமணருடைய எதிர் கேள்வி ஆழமானது. மரணத்தை ஒழித்தால் பிறப்பும் கூட ஒழிந்து விடுமன்றோ !

‘கருப்படுத்தி என்னை எமன் கைப்பிடித்துக் கொள்ளாமுன்
உருப்படுத்தி ஆள உடன்படுவது எக்காலம்?


‘என்னை ஒரு கருப்பைக்குள் வைத்து பிறப்பு தந்து பின்னர் எமன் பிடித்துச் செல்லும் முன் நின் வடிவாய் உருசெய்து பிறப்பு இறப்பற்ற வீட்டுலகை பெற திருவருள் வருவது எப்போதோ’ என்று ஜனன மரணத்தை ஒழிக்கும் வகை வேண்டுகிறது பத்திரகிரியாரின் அருட்புலம்பல்]


மரணத்தை வெல்வது தானே ஆன்மீகத்தின் நோக்கம். இப்படி தனக்குள்ள பிரச்சனையை சிந்திப்பதை விட்டு உலகத்தைத் திருத்தும் கவலைகள் அர்த்தமற்றவை என்பதை பகவான் குறிப்பால் உணர்த்தினார்.

அன்பரிடமிருந்து பதில் வரவில்லை.

இப்படி யாரிடம் என்ன கேள்வி கேட்பது என்று புரியாமல் பல சமயங்களில் தடுமாற்றம் மனிதர்களுக்கு ஏற்படுவது உண்டு. அப்போது தம்முடைய கேள்விகளாலேயே தம் அறியாமையை வெளிப்படுத்திக் கொண்டு விடுகிறார்கள்.

தாம் அறிந்து வைத்திருக்கும் விஷய ஞானத்தின் மேல் உள்ள அபார பற்றுதலும் பெருமையுமே இதற்கு முக்கிய காரணம். கபீர்தாஸருடைய காலத்திலும் அப்படிப் பட்டவர்கள் இருந்திருப்பார்கள் போலும் !

ज्ञानी से कहिये काह, कहत कबीर लजाये ।
अंधे आगे नाचते, कला अकारथ जाय ॥

ஞானிக்கு உரைப்பது மென்னே, கபீரும் நாணம் கொள்வனே
நாட்டியமோ அந்தகன் முன்னே, அதனால் ஆவதும் என்னே


மாற்று:

பண்டிதர் பாடம் கேட்டார், நாணம் கொண்டான் கபீரும்
அந்தகர் முன்னே ஆடற்கலை, வீணாய் போச்சுது பாரும்


ஞானி என்பதற்கு பொதுவாக முற்றும் அறிந்தவர் என்று பொருள் கொள்வோம். ஆனால் இங்கே சாஸ்திரங்களைக் கற்றறிந்தவர் என்ற பொருளில் வருகிறது. அடக்கமற்றவர்களாயின் அவர்களுக்கு எதை எடுத்துரைத்தாலும் எடுபடாது.

பிறவிக் குருடனுக்கு சித்திரக்கலையோ ஆடற்கலையைப் பற்றியோ சொல்லினால் எப்படி விளங்காதோ அது போல அஞ்ஞானிகளுக்கு ஞானிகளின் சமீபம் கிட்டினாலும் பயன் இருக்காது. இதை மாற்றுவதும் முடியாது.

சிவாய நம என சிந்தித்திருப்போர்க்கு அபாயம் இல்லை என்பது ஔவையாரின் வாக்கு. சிந்திப்பதை விட்டு அறிஞர்கள் ஆராய்ச்சியில் இறங்கினால் என்னவாகும். பட்டினத்தார் சொல்கிறார்:-

கார காரம் என்பார் நடுவே சிகாரம் என்பார்
கார காரம் என்பார் வகையறியார் பூரணமே


இறைவனின் திருநாமத்தில் உள்ள ஒவ்வொரு எழுத்திற்கும் ஒவ்வொரு இயல்புகளைச் சொல்லி அவற்றின் மேன்மையை பல்வகையாய் விளக்குவார்கள் ஆனால் அதன் மூலம் உன்னை அடையும் வழியை மட்டும் அறியமாட்டார்களே என்று விசனப்படுகிறார் பட்டினத்து அடிகள்.

மாந்தோப்பில் நுழைந்து மரங்களின் உயரம், காய்களின் எண்ணிக்கை, இலைகளின் அளவு இப்படி பலப்பல கணிப்பில் ஈடுபட்டவர்களை விட ஒரு பழத்தைப் பறித்து சுவைப்பவன் புத்திசாலி என்று பரமஹம்ஸர் கூறுவாராம்

கபீர்தாஸர் குறிப்பிடும் அறிவுக் குருடர்கள் இவர்கள். இதற்கான தீர்வை ஏற்கனவே கபீர் சொல்லியிருக்கிறார்

செபித்து செயங்கொள் மனமே, மெய்ஞான ரகசியமிதுவே
படித்தனை கிரந்தம் தினமே, அவை நூறு படிப்பதும் வீணே

இன்று சரசுவதி பூஜை. கிரந்தம் படிப்பது வீணே என்று சொல்ல என்னமோ போலிருக்கிறது. கபீர் சொல்ல வருவதும் பொருளறியாமல் செய்யப்படும் செயல்களைத்தான் வீண் என்கிறார்.

இதற்கு கவியரசர் கம்பனும் உடன்படுகிறார். அவளை அண்டினால் எது செய்ய வேண்டினும் அது சித்தியாகும், முக்தி உள்பட !

சேதிக்கலாம் தர்க்க மார்க்கங்கள், எவ்வெவர் சிந்தனையும்
சோதிக்கலா முறப் போதிக்கலாம், சொன்னதே துணிந்து
சாதிக்கலாம் மிக பேதிக்கலாம் முத்திதான் எய்தலாம்
ஆதிக் கலாமயில் வல்லி பொன் தாளை அடைந்தவரே


யாவருக்கும் அன்னை சரசுவதியின் அருள் சித்திக்கட்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்கிறேன். நவராத்திரி நல்வாழ்த்துகள்.

-----------------------------------------------
பலரும் விரும்பிய கட்டுரைத் தொகுப்பு -முதல் பாகம் -கபீரின் நிழலில்... என்ற பெயரில் வலையேற்றப்பட்டுள்ளது.

வேண்டுபவர் அதை Scribd வலைப்பக்கத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Kabirin_nizhalil

(இங்கேயே படிக்க விரும்புவர்கள் வலது பக்க மேல் மூலையில் Toggle Full screen மெனுக் குறியை பயன்படுத்தி படிக்கலாம். கூகிள் ரீடரில் இந்த விட்ஜெட் காண்பிக்கப்படுவதில்லை )

கீழே உள்ள இணப்பின் மூலமும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்
கபீரின் நிழலில்...
கபீரின் நிழலில்......
Hosted by eSnips

Friday, September 04, 2009

தேடுகின்றலை தெருவுதோறலறிலை

   குப்பை மேட்டிலே நாயொன்று தொங்கிய காதுகளுடன் யோகியை போல அரைக்கண் மூடி முன்னம் கால்களுக்கு இடையே தலையை வைத்து படுத்துக் கிடந்தது. எவ்வளவு நேரமாகவோ தெரியாது.

     விருட்டென்று அதன் காதுகள் குத்திட்டு நின்றன. தலையைத் தூக்கி ஒரு பார்வையில் நிலவரத்தைப் புரிந்து கொண்டு சத்தமாய் குரைக்கத் தொடங்கியது. கூடவே இன்னும் சில தெரு நாய்களும் சேர்ந்து கொண்டன. யாரோ ஒருவர் தன் வளர்ப்பு நாயை பிடித்துக் கொண்டு போய்க் கொண்டிருந்தார். அவ்வளவுதான். அவர்கள் அந்த தெருவை விட்டு செல்லும் வரையிலும் எட்டி நின்று குரைத்து தீர்த்து தன் கடமை முடிந்ததென்று மீண்டும் வந்து படுத்துக் கொண்டது. 

   சிறிது நேரம் கழித்து அதன் மூக்கு எதையோ மோப்பம் பிடிக்க, எழுந்து சைக்கிளில் போய் கொண்டிருந்த தின்பண்டம் விற்பவன் பின்னேயே சென்றது. அவன் எங்கெல்லாம் நின்றானோ அங்கெல்லாம் ஏதோ எதிர்பார்ப்புடன் அவனையே பார்த்தவாறு நின்றது. அவன் தெருமுனை தாண்டியதும் தன் எல்லையை மீற முடியாமல் திரும்பவும் வந்து படுத்துக் கொண்டது. 

    இது நாம் யாவரும் அன்றாடம் காணும் காட்சி. ஞானிகளின் பார்வையில் இந்த நாயின் வாழ்க்கைக்கும் நம்முடைய வாழ்க்கைக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. பிறந்ததிலிருந்து ஏதேதோ ஆசைகளை வளர்த்துக் கொள்கிறோம். எதையெதையோ பின் தொடர்கிறோம். விதியால் வரையறுக்கப்பட்ட நம் எல்லைக்குள் சில கிட்டுகின்றன. பல நிராசையாய் முடிகின்றன. 

மனிதப் பிறவி அளிக்கப்பட்டதன் நோக்கத்தை மறந்து மனது வேண்டாதவற்றைப் பற்றிக் கொண்டு சதா திரிகிறது. இதை கவனிக்கும் ஞானிகளுக்கு மக்களை நல்வழி படுத்த வேண்டிய நல்லெண்ணம் ஏற்படுகிறது.

“நீ அப்படியிருக்க வேண்டும்; இப்படி இருக்க வேண்டும் “ என்றெல்லாம் உபதேசம் சொன்னால் ‘இவன் யார் சொல்வதற்கு’ என்ற எண்ணம் மேலோங்கும். அதற்கு பதிலாக “என்னால் நல்லவிதமாக நடந்து கொள்ள முடியவில்லையே ! நல்லவிதமாக பேசத் தெரியவில்லையே” என்று யாராவது சொல்லிக் கொண்டால் சொல்லப்படுவது என்ன என்பதையாவது கவனிப்பார்கள். அப்படி மாணிக்கவாசகர் சொல்லிய பாடல் ஒன்று. 

  ஆடுகின்றிலை கூத்துடையான் கழற்கு அன்பிலை என்புருகி 
 பாடுகின்றிலை பதைப்பதும் செய்கிலை பணிகிலை பாதமலர் 
  சூடுகிறதுமிலை சூட்டுகின்றதுமிலை துணையிலி பிண நெஞ்சே   தேடுகின்றிலை தெருவுதோறலறிலை செய்வதொன் றறியேனே 

 இவரைப் போலவே கந்தர் அலங்காரத்தில் அருணகிரிநாதரும் புத்தி உரைக்கிறார். 

சிந்திக்கிலேன் நின்று சேவிக்கிலேன் தண்டைச் சிற்றடியை
வந்திக்கிலேன் ஒன்றும் வாழ்த்துகிலேன் மயில் வாகனனைச் 
சந்திக்கிலேன் பொய்யை நிந்திக்கிலேன் உண்மை சாதிக்கிலேன் 
 புந்திக் கிலேசமும் காயக்கிலேசமும் போக்குதற்கே 

(புந்தி கிலேசம்= அறிவில் ஏற்படும் மயக்கம் ; காயக்கிலேசம்= உடலைப் பற்றிய ஈடுபாடு)

ஒருவருடைய பிறவி கடைத்தேற என்னென்னத் தேவையோ அவற்றில் ஈடுபாடு இன்றி காலத்தைக் கழிக்கிறார்களே என்ற கழிவிரக்கம் இவர்களைப் போலவே கபீர்தாஸருடைய பல பாடல்களிலும் காணப்படுகிறது. 

  राम नाम जाना नहीँ, लागी मोटी खोर । 
 काया हांडी काठ की, ना वह चढै बहोर ॥

இராம நாமம் அறியலையே, நாடா பேதமை புரியலையே 
காட்டம் போல் காயமிதே, உலைக்குள் போனால் மீளாதே 
(நாடா பேதமை = இறைவனை நாடாத அறிவின்மை; காட்டம்= காஷ்டம், விறகு;
 காயம்=உடல்; உலை= அடுப்பு ) 

 கபீர், மனித உடலை விறகுக்கு ஒப்பிடுகிறார் . 

சிலவகை மரங்கள் வெறும் அடுப்பெரிக்க மட்டுமே பயன்படும். அவைகளின் காயோ பழமோ பயன்படுவதில்லை. அவைகளில் பறவைகளும் கூடுகட்டி வாழ்வதில்லை. முள் நிறைந்த அம்மரங்களை வெட்டி வந்து விறகாய் எரிப்பது ஒன்றே அவைகளால் கிடைக்கும் பயன். 

 உலகத்தில் பெரும்பாலோர்க்கு இறைவழியில் நாட்டமின்றி குப்பை மேட்டு நாய் போல வாழ்நாள் போய்விடுகிறது. ”அடுத்து என்ன பிறவி வாய்க்குமோ? ஐயோ நாட்டமில்லாமல் தினங்கள் போய்கொண்டிருக்கின்றனவே” என்ற கவலையோ ஏக்கமோ தோன்றுவதுமில்லை. கடைசியில் அவர்களுடைய பிறவி விறகின் கதையாக முடிகிறது.

 மாயையை உண்மை என்று நம்பி இறையருளை இழந்து, இங்கும் இல்லாமல் அங்கும் இல்லாமல் தவிக்கும்நிலையைப் பற்றி கபீர் மேலும் சொல்கிறார். 

  रामनाम  कडआ लगै, मीठा लागै दाम । 
  दुविधा में दोऊ गये, माया मिली न राम॥ 

  இராம நாமம் கசக்குதே, இகமாய லோகமும் இனிக்குதே
  இராமனோ மாயையோ அத்தே! இரண்டு மின்றிப் போகுதே 

(அத்தன்=கடவுள் : அத்தே =கடவுளே -நிராசையின் வெளிப்பாடு) 

 மனதுக்கு இனிக்கின்ற விஷயங்களையும் கசக்கின்ற விஷயங்களையும் அருணகிரியார் பட்டியலிட்டு கபீரைப் போலவே முக்திக்கான தஞ்சத்தை தேடுகிறார்.

  பால் என்பது மொழி; பஞ்சு என்பது பதம்; பாவையர் கண் 
 சேல் என்பதாகத் திரிகின்ற நீ செந்திலோன் திருக்கை 
 வேல் என்கிலை கொற்ற மயூரம் என்கிலை வெட்சித்தண்டைக்
 கால் என்கிலை மனமே எங்ஙனே முத்தி காண்பதுவே. 

  படிக்கின் றிலை பழநித் திருநாமம் படிப்பவர் தாள் 
 முடிக்கின்றிலை முருகா என்கிலை முசியாமலிட்டு 
  மிடிக்கின்றிலை பரமாநந்த மேற்கொள விம்மிவிம்மி 
  நடிக்கின்றிலை நெஞ்சமே தஞ்சம் ஏது நமக்கினியே.

       மனிதன் வாழ்நாள் வீணாவதைப் பற்றி கபீர்தாஸருடைய மிகப் புகழ்பெற்ற பாடல் - இசைக் கலைஞர்கள் பலரும் விரும்பிப் பாடும் பாடல் “பீத் கயே தின் பஜன் பினா” என்பதாகும். . பாடலை தொடர்வதற்கான வரிவடிவமும் அதற்கான பொருளும் தரப்பட்டுள்ளன. 

 बीत गये दिन भजन बिना रे . பீத் கயே தின் பஜன் பினா ரே 
भजन बिना रे, भजन बिना रे .. பீத் கயே தின் பஜன் பினா ரே
(தினங்கள் போகின்றனவே அவனைத் துதியாமலே, ;ரே என்பது விளித்தல்)

 बाल अवस्था खेल गवांयो . பால் அவஸ்தா கேல் கவாயோ 

जब यौवन तब मान घना रे .. ஜப் யௌவன் தப் மான் கனா ரே 
(வேடிக்கையும் விளையாட்டும் குழந்தை பருவத்தை கவர்ந்தது இளமை பருவம் கர்வத்தி்ல் கழிந்தது)

लाहे कारण मूल गवाँयो . லாஹே காரண் மூல் கவாய்
अजहुं न गयी मन की तृष्णा रे .. அஜ்ஹு ந கயீ மன் கீ த்ருஷ்ணா
(பேராசை என்பது மூலத்தை கவர்ந்து சென்றது ஆயினும் வேட்கையின் தாகம் விடவில்லை) (மூலம் என்று குறிப்பிடப்படுவது இறைவனுடனான பிணைப்பு ) 

 कहत कबीर सुनो भई साधो . கஹத் கபீர் ஸுனோ பாயி ஸாதோ 
पार उतर गये संत जना रे பார் உதர் கயே ஸந்த் ஜனா ரே 
(அன்பர்களே கபீர் சொல்வதை கேளுங்கள். வேட்கை விட்டவரே இறை அன்பர் ஆயினர்) 

கீழுள்ள இணைப்பில் ‘பாரத் ரத்னா’ பண்டிட் பீம்ஸேன் ஜோஷி அவர்கள் பாடியிருக்கும் இந்த பாடலை கபீர்தாஸரின் வாழ்க்கை சித்திரங்களுடன் காணலாம்.


பஜ கோவிந்தத்தில் ஆதிசங்கரரும் இதே கருத்தை தானே வலியுறுத்துகிறார். 

  பாலஸ்தாவத் க்ரீடாஸக்தா; தருணஸ்தாவத் தருணீஸக்த: 
  வ்ருத்தஸ்தாவத் சிந்தாஸக்த: பரே ப்ருஹ்மணி கோ அபி ந ஸக்த: 

 பாலபருவத்தில் விளையாட்டில் கவனம். தருண வயதில் பெண்ணின் மோகம்; முதுமையோ கவலையில் போகுது. ஆனால் பரபிரம்மத்திற்காக ஆசைப்படுவோர் இல்லை. 

 ஞானிகள் யாவரும் ஒன்றையே மொழிகின்றனர். கேட்பதற்கு தான் நமக்கு மனம் வேண்டும்.
 ____________________________________________ 

  இந்த பதிவுடன் கபீரின் கனிமொழிகள் வலைப்பூ மூன்றாம் ஆண்டை நிறைவு செய்கிறது. கபீர்தாஸரின் விருப்பமும் வாசக அன்பர்கள் தருகின்ற உற்சாகமுமே இதை நடத்தி வருகிறது என்றால் மிகையாகாது. அன்பர்கள் அனைவருக்கும் உளம் கனிந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். இதில் காணும் இடுகைகளை சிறப்பிக்கும் வகையில் பல ஒலி ஒளி கோப்புகளை வலையேற்றிருக்கும் வலைப்பக்க- முகம் தெரியாத- நண்பர்களுக்கும் கோடானு கோடி நன்றி.

Thursday, August 20, 2009

நல்லோர் நாடும் மோனநிலை

கிராமத்திலே உறவினர் குடும்பத்தில் ஒரு விசேஷம். அழைப்பை ஏற்று பரிவார சமேதராகி யாவரும் போனோம். திறந்த மனதுடன் அங்குள்ளவர் சிலர் வீடுகளிலேயே தங்குவதற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.(அங்கே லாட்ஜ்-க்கு எங்கே போவது) இரண்டு நாட்களும் ஊரே திரண்டு தம் வீட்டு விழாவைப் போலவே எல்லா வேலைகளிலும் ஈடுபடுத்திக் கொண்டது மகிழ்ச்சியை தந்தது. இந்த கூட்டு முயற்சியில் மிகப் பெரும் பங்கு விருந்து தயாரிப்பதிலும், பரிமாறுதலு தான். கடைசியில் எல்லாமே வயிற்றைப் பற்றிய கவலைதானே !

ஊர் பெண்மணிகள் ஒன்றாய் திரண்டு கறிகாய் நறுக்குதல், தேங்காய் துருவுதல், அண்டை எதிர் வீடுகளில் இலை போட்டு, இலை எடுப்பது போன்ற காரியங்களை கவனித்துக் கொண்டனர். ஆண்கள் சமைப்பதற்கும் பரிமாறுதலுக்கும் பொறுப்பெடுத்துக் கொண்டனர். கறிகாய் நறுக்கும் காலத்தில் பல பக்தி பாடல்கள் பாடுவதும், பல சமையற்கலை நுணுக்கங்களை விவாதிப்பதும் கலகலப்பாயிருந்தது. ஆனால்உள்ளே சமயலறையில் ஓரிருவரே நின்று அடுப்பைக் கவனித்துக் கொள்வதும், தயாராகும் உணவின் பக்குவத்தைக் கண்காணிப்பதுமாக அமைதியாக வேலை நடந்து கொண்டிருந்தது.

விழா முடிந்து விடைபெறுகையில் ’சாப்பாடு ரொம்ப பிரமாதம்’ என்று யாவரும் தனித்தனி்யேப் பாராட்டினர்.

பிரமாதம் என்று பாராட்டும் பொழுது அது தனிமனிதன் அனுபவத்திலிருந்து வருகிறது. ஆனால் அதில்தான் எத்தனை பேர்களுடைய பங்களிப்பு இருக்கிறது ! இது நடைமுறையில் நமது அனுபவம்.

ஞானமார்க்கத்திற்கும் இது வெகுவாகவே பொருந்தும். சத்சங்கங்களில் பல வழிகளைப் பற்றிய தர்க்கமுண்டு, ஞானிகளின் அனுபவங்கள் பற்றி சர்ச்சை யுண்டு. இவை கறிகாய் நறுக்குதல், தேங்காய் துருவுதல் போன்ற ஆரம்ப நிலை முனைப்புகள். பின்னர் குருவை அடைந்து அவரிடம் பெறும் வழிகாட்டுதல் உபதேசம் சமையலறைப் போல ஓரிருவருக்கே உரிய இடம் ஆகும். சமைத்த பொருளின் கடைசியாக ருசித்த அனுபவம் தனி ஒருவனுடையதாகவே இருக்கிறது. அந்த அனுபவம் ஆழ்ந்த மோனத்தில் பெறுவது.

இந்த வெவ்வேறு நிலைகளை கபீர்தாஸரும் உறுதி செய்கிறார்.

चर्चा करु तब चौहटे, ज्ञान करो तब दोय ।
ध्यान धरो तब एकिला, और न दूजा कोय ॥


பலர்கூடின் தருக்கம் செய்மின், இருவரானால் ஞானத்தில் தேர்மின்
தனிமையில் தியானம் செய்மின், வேறெவரும் வேண்டா தெளிமின்

(சௌஹட் என்றால் நாற்சந்தி. பலரும் கூடும் இடம் என்று கொள்ளலாம்)

மாற்று :

தருக்கத்திற் குத்தேவை நால்வர், தேடுகின்ற ஞானத்திற் கிருவர்
பரமோ னத்திற்கு ஏகாந்தமே, தேவையு மில்லை இன்னொருவர்


சத்சங்கம் கூடி பலநல்வழிகளை விவாதித்து பரிசீலிப்பது ஆரம்ப முனைப்புகள்.
பிறகு குருவும் சீடனுமாகி இருவரே பகிர்ந்து கொள்ளும் ஞானத்தேடல். அதன் அடுத்த கட்டமாக ’பேசுவதால் பயனில்லை அனுபவத்தால் அறி’ என்பதைக் காட்டும் தியான மார்க்கம். இங்கே முன்னேற்றம் என்பது அவரவர் முயற்சியைப் பொறுத்தே அமையும். ஒருவருக்காக இன்னொருவர் எப்படி உண்ண இயலாதோ அப்படி குரு காட்டிய வழியில் தனியனாகவே பயணத்தை நடத்த வேண்டும் என்று கபீர் உணர்த்துகிறார்.

அறிந்ததை -அல்லது கற்றதை -உள்வாங்கி உண்மையை அறியும் அந்த பயிற்சி தனிமையிலே தியானத்திலே செய்ய வேண்டியது. பாரதியாரும் குள்ளச்சாமி தனக்கு தரும் உபதேசமாக அதைக் குறிப்பிடுகிறார்.

பக்கத்து வீடிடிந்து சுவர்கள் வீழ்ந்த
பாழ்மனையொன் றிருந்ததங்கே; பரமயோகி
ஒக்கத்தன் அருள்விழியால் என்னை நோக்கி
ஒரு குட்டிச் சுவர் காட்டிப் பரிதி காட்டி
அக்கணமே கிணற்றுள் தன் விம்பங்காட்டி,
”அறிகொலோ!” எனக்கேட்டான். அறிந்தேன் என்றேன்
மிக்கமகிழ் கொண்டவனும் சென்றான், யானும்
வேதாந்த மரத்திலொரு வேரைக் கண்டேன்.

தேசிகன் கை காட்டி எனக்குரைத்த செய்தி
செந்தமிழில் உலகத்தார்க் குணர்த்து கின்றேன்’
“வாசியை நீ கும்பகத்தால் வலியக் கட்டி,
மண்போலே சுவர் போலே வாழ்தல் வேண்டும்;
தேசுடைய பரிதியுருக் கிணற்றினுள்ளே
தெரிவது போல் உனக்குள்ளே சிவனைக் காண்பாய்;
பேசுவதில் பயனில்லை.அனுபவத்தால்
பேரின்பம் எய்துவதே ஞானம்” என்றான்
.

பேசுவதில் பயனில்லை என்பதை தாயுமானசுவாமிகளும் உணர்த்துகிறார்.

நேராயம் மௌன நிலை நில்லாமல் வாய்பேசி
ஆராய் அலைந்தீர்நீர் ஆகெடுவீர் தேரீர்
திரையுந் திரையுநதிச் சென்னியனை நாவால்
கரையுங் கரையும் மனக்கல்


(நாவால் கரையும் = இறைவன் புகழை செபித்தல்; திரையுந் திரையுநதி சென்னியனை = அலைபொங்கும் கங்கையை தன்னுள் அடக்கியவன்)

கல்போன்ற மனதை கரைக்க வல்லது இறைவன் நாமம். அதற்குத் தேவை முழு சரணாகதி பக்குவம். அதனையே ”தேடுகின்ற ஞானத்திற் கிருவர்” என்று குருவின் அவசியத்தை கபீர் உரைக்கிறார். குரு கிருபை இருந்துமே பரமோனம் சுயமுயற்சி இல்லாமல் கைகூடாது என்பதையும் தாயுமானவர் பாடுகிறார்

எல்லாமே மோன நிறை எய்துதலால் எவ்விடத்தும்
நல்லோர்கள் மோன நிலை நாடினார் -பொல்லாத
’நான்’ என இங்கொன்றை முளைக்க விட்டு இங்கு
ஏன் அலைந்தேன் மோன குருவே.


‘நான் என ஏன் அலைந்தேன்’ என்னும் பிரச்சனைக்கு முடிவு ’மௌனமே’ ஆகும். பேசினால் தர்க்கம் வருகிறது. தர்க்கத்தில் ’நான்’ தலையெடுக்கிறது. அதன்பின்னும் அது மனதை விட்டு அகலாமல் களைச் செடி போல உறுத்திக் கொண்டே இருக்கிறது. களையெடுத்தல் தியான நிலையில் மட்டுமே சாத்தியம்.

ஆரம்பத்தில் தியான முயற்சிகள் சுய பரிசோதனைக் களமாக இருப்பினும் நாளாவட்டத்தில் களைகள் போன பரிசுத்த நிலையில் இறைவன் பால் அன்பு மிகுத்து ’காதலாகி கசிந்து கண்ணீர் மல்க’ வைக்கும்.

மோனத்திலேதான் உண்மையான பக்தியும் ஞானமும் மலர்கின்றன. அது கைகூடாதவரை சாதகனின் முயற்சிகள் எல்லாம் விசாரமாகத்தான் இருக்குமே ஒழிய் அனுபவமாக இருக்காது. அதை சுட்டிக்காட்டத்தான் பராபரக்கண்ணியிலும் தாயுமானவர் தன் விண்ணப்பத்தை முன் வைக்கிறார்

மோனந்தரு ஞானமூட்டி எனக்கு வட்டா
ஆனந்த வாழ்க்கை அருளாய் பராபரமே


தியானத்தை தனிமையில் செய் என்ற கபீரின் உபதேசத்தை கடைபிடித்த சிறுவனின் கதையைக் காண்போம்.

நன்றி : தினமலர் (28/12/2008) - வைரம் ராஜகோபால்

பகவானை வழிபட தபஸ் செய்வதற்காக காட்டுக்குச் சென்றான் துருவன். அவனை சந்தித்தார் நாரதர். "எங்கே போகிறாய்? எதற்காகப் போகிறாய்?' என்று கேட்டு விட்டு, "தபஸ் ரொம்ப சிரமமாயிற்றே! நீ சிறுவனாயிற்றே. இதெல்லாம் உன்னால் முடியாது; வீட்டுக்குப் போ...' என்று சொல்லிப் பார்த்தார். ஆனால், "தவம் செய்து பகவானை தரிசிக்கப் போகிறேன்!' என்று பிடிவாதமாகச் சொன்னான் துருவன்.

துருவன் தனிமையில் அமர்ந்து, புலன்களை அடக்கி, நாராயணனின் மூல மந்திரத்தை ஜெபித்துக் கொண்டே இருக்க வேண்டுமென்று சொல்லி, மூல மந்திரத்தையும் அவனுக்கு உபதேசம் செய்தார் நாரதர். "இனி, நீ தவம் செய்ய ஆரம்பிக்கலாமே...' என்றார் நாரதர்.

"அது, சரி... நான் ஆரம்பிக்கிறேன். அதற்கு முன் நீங்கள் இந்த இடத்தை விட்டுப் போங்கள்!' என்றான் துருவன்.

"ஏன், நான் இருந்தால் என்ன?' என்று கேட்டார் நாரதர்.

"தவத்தை தனிமையில் செய்ய வேண்டும். மனதை ஒருமுகப்படுத்தி செய்ய வேண்டும் என்று நீங்கள் தானே உபதேசித்தீர்கள். நீங்கள் இங்கு இருந்தால் எனக்குத் தனிமை எப்படி ஏற்படும். என் மனமும், நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை கவனிப்பதில் தானே இருக்கும். ஆகவே, தயவு செய்து தாங்கள் இந்த இடத்தை விட்டு நகருங்கள்!' என்றான் துருவன்.

நாரதருக்கு ஆச்சர்யமாக இருந்தது. சிறுவனாக இருந்தாலும் விஷயத்தை நன்றாக புரிந்து கொண்டிருக்கிறான் என்று மகிழ்ந்து அவனை ஆசீர்வதித்து விட்டுச் சென்றார்.

Friday, August 07, 2009

அரியவனோ எளியவனோ இறைவன் ?

அந்த காவியுடை சாது காட்டிலே அமர்ந்து கடுந்தவத்தில் ஈடுபட்டிருந்தார். தினமும் காலையும் மாலையும் நிலை கொள்ளாமல் தவிப்பதும் ஏதோ ஒரு வகைத் தேடலிலும் ஈடுபட்டிருந்ததை கவனித்த வேடன் ஒருவனுக்கு அவர் மேல் இரக்கம் பிறந்தது.

அவரை நெருங்கி “ஐயா தாங்கள் தேடுவது என்னவென்று சொன்னால் என்னால் முடிந்த உதவி செய்கிறேன்” என்றான்.

அவருக்கோ சிரிப்பு வந்தது. மந்திர சித்தியைப் பற்றி அந்த வேடனுக்கு எப்படிச் சொல்லி புரிய வைப்பது?

”உன்னால் முடியாதப்பா” என்று சுருக்கமாக பதில் உரைத்தார்.

முடியாது என்று அவர் சொன்னதை அவன் மனம் ஏற்றுக் கொள்ளவில்லை.

“எனக்கு இந்த காட்டில் தெரியாத மரமோ செடியோ பிராணியோ கிடையாது. நீங்கள் தேடும் பொருளை அடையாளம் சொல்லுங்கள். மருந்துக்கான பூவா, இலையா அல்லது ஏதேனும் அரிய பொருளா சொல்லுங்கள். நான் எப்பாடுபட்டாவது உங்களுக்கு கொண்டுவந்து சேர்க்கிறேன்.” என்று விடாமல் சொன்னான். அவன் அன்புத் தொல்லை தாங்க முடியவில்லை.

”நான் தேடுவது ஒரு விசித்திரமான மிருகம். அதற்கு சிங்கத்தின் தலை, மனிதனின் உடல், கூரிய நகங்கள். அடர்ந்த பிடரி. முடிந்தால் தேடிப் பிடித்து வா” என்று அனுப்பினார்.

“அட இப்படி ஒரு மிருகத்தை நான் கண்டதே இல்லையே ! அப்படி ஒன்று இருந்தால் அது இல்லாமல் திரும்பமாட்டேன்” என்று சொல்லி விசித்திரமான அந்த மிருகத்தைத் தேட ஆரம்பித்தான். அன்றைய பொழுதும் சாய்ந்தது. அடுத்த நாள் விடியும் பொழுது அந்த மிருகம் இன்று கிடைக்காவிட்டால் உயிரை விட்டுவிடுவது என்ற முடிவோடு தேட ஆரம்பித்தான். நீரும் உணவும் இன்றி தேடி அலுத்து நிராசையின் விளிம்பில் இருந்தவனுக்கு திடீரென்று ஒரு சிங்கத்தின் கர்ஜனை கேட்டது.

அந்த திசையில் சென்றதுமே அந்த விசித்திர மிருகம் கண் முன்னே நின்று கொண்டிருந்தது. ”ஓ நீதானா அது” என்றபடியே சந்தோஷத்துடன் அருகேயிருந்த கொடிகளை அறுத்து அதைக் கட்டி தர தர வென்று இழுத்து வந்து முனிவர் முன் நிறுத்தினான். அந்த விசித்திர மிருகம் ஒரு நாயைப் போல இவன் இழுத்த இழுப்புக்கெல்லாம் வந்தது.

“ சாமி இதோ நீங்க தேடுற பிராணி” என்று மகிழ்ச்சியுடன் கூவினான்.

சாதுவுக்கோ ஒன்றும் புரியவில்லை. அவர் கண்களுக்கு எதுவும் தெரியவில்லை. அவருக்கு தெரியவில்லை என்பது வேடனுக்கு புரியவில்லை. “இதோ ..இதோ” என்று மீண்டும் மீண்டும் அது நிற்கும் இடத்தைக் காட்டினான்.

அவன் தன்னம்பிக்கையோடு காட்டும் போது குழம்பிய மனதினராய் அவ்வேடனை பரிதாபமாகப் பார்த்தார். தன் கண்களை நம்புவதா அல்லது அந்த வேடனை நம்புவதா என்று புரியாமல் திகைத்தார். அப்போது சிங்கத்தின் கர்ச்சனை மட்டும் மிக அருகிலிருந்து கேட்டது. அந்த தபஸ்விக்கு உண்மை பளிச்செனப் புரிந்தது.

“பிரபோ இந்த எளியவனுக்கு காட்சி தரும் தாங்கள் என்னை கை விட்டுவிட்டீரே !” என்று கதறினார்.

“அப்பனே காலம் கனியும் போது உன்னிலும் என்னைக் காண்பாய்” என்று அசரீரியாய் பதில் வந்தது.

(மீதிக் கதையைப் பின்னர் பார்ப்போம்)

நமக்கு ஒரு குழப்பம். அங்கே இறைத் தாகத்தில் தவிப்பவனுடைய கண்களுக்கு அரியவனாகி நிற்கிறான். ஏதுமறியா அப்பாவிக்கு வேடனுக்கு எளியவனாகி நிற்கிறான். என்ன ஒரு விந்தை ?

இவன் யார் பிடியில் அகப்படுவான் யார் பிடியில் சிக்கமாட்டான் என்பதைத் தீர்மானிக்க யாராலும் இயலாது. எனவே அவனுடைய நிலைப்பாடு இந்நேரத்தில் இப்படித்தான் இருக்கும் என்று எவரும் அறுதியிட்டு கூற முடிவதில்லை.

அதே குழப்பம் கபீருக்கும் ஏற்படுகிறது.

भारी कहौं तो बहु डरौं, हलका कहूं तौ झूठ ।
मैं का जाणौं राम कूं, नैनूं कबहूँ न दीठ ॥


அரியவன் என்னலும் தயக்கம்,எளியவன் என்பதும் பொய்யே
அறியேன் யானும் இராமனை, விழிகள் கண்டது மில்லையே


(’டரௌ’ என்று கபீர் பயன்படுத்தியுள்ள சொல் ‘பயத்தைக்’ குறிப்பதாகும். அது ’உண்மையற்றதாகி விடும்’ என்ற பயமே தவிர இறைவனைக் குறித்த பயம் அல்ல. தமிழாக்கத்திற்கு தயக்கம் என்ற சொல் பொருத்தமாகத் தோன்றுகிறது )

அலகிலா விளையாட்டு உடையான் அவனடி சரணாவதைத் தவிர இறைவன் போக்கை ஆராய்ச்சிக்கு உட்படுத்த முடியாது.

சாதுவிற்கு அவன் எளியவன் அல்லன். ஆனால் வேடனின் பார்வையில் அவன் அரியனும் அல்லன்.

ஆகையால்தான் ” அவனைப் பற்றி என்ன சொல்ல முடியும்? இராமனை நான் பார்த்ததும் இல்லை”என்று அவன் மகிமையை உணர்த்த இயலாதவராய் அடக்கத்தோடு உரைக்கிறார் கபீர்.

யாருக்கு எது நன்மை செய்யும் அதை எப்போது தரவேண்டும் என்னும் இறைவன் சித்தத்தை யாராலும் அறிய முடியாது என்பதை திருமூலரும் கூறுகிறார்.

அகன்றார் வழிமுதல் ஆதி பிரானும்
இவன்தான் என நின்ற எளியனும் அல்லன்
சிவன்தாள் பலப்பல சீவனும் ஆகும்
நயன்தான் வரும் வழி நாம் அறியோமே


( அகன்றார் = முனிவர்கள்; நயன்தான் வரும் வழி= நன்மைகள் வருகின்ற விதம்)


இப்போது ’காலம் கனியும் போது உன்னில் என்னை காண்பாய்’ என்று சொன்னக் கதைக்கு வருவோம்.

(பட உதவி madhumurali.org :நன்றி)

எங்கோ மோனத்தில் ஆழ்ந்திருந்த பத்மபாதரின் மனக்கண் முன்னே காபாலிகன் சங்கரரை பலி கொடுப்பதற்கு நெருங்கி வரும் காட்சி விரிந்தது. அவர் உபாசித்த நரசிம்ம மந்திரம் அவரை முழுவதுமாக ஆட்கொண்டது. தன் குருவை காப்பாற்ற வேண்டி பெரும் கர்ஜனையுடன் ஆகாயத்திலே எழும்பி புயல் போல் காபாலிகனின் குகையுள் புகுந்தார்.

முன்னொரு நாளில் இரண்ய கசிபுவை எப்படி கையால் தூக்கி அவன் குடலை நரசிம்மம் உருவியதோ அதே கதியை காபாலிகனுக்குக் கொடுத்தார்.

மற்றவர்கள் ஓடிவந்து சமாதியிலிருந்த சங்கரரை எழுப்பினர். இரத்தத்தில் தோய்ந்த சீடனின் உக்கிர வடிவில் நரசிம்மனை கண்ட சங்கரர் உடனே பிரஹ்லாதனைப் போல உக்கிரத்தை தணிக்க நரசிம்மத் தோத்திரம் இயற்றினார்.

சங்கரரை சிவனின் அவதாரமாகவே சொல்வதுண்டு.

சிவனிடமிருந்து வரம் பெறுவதற்காகவே காபாலிகன் சங்கரரை அணுகி அவரது முழு சம்மதத்தின் பேரிலேயே பலியிடுவதற்கு முற்பட்டான். அவருடைய சங்கல்பமில்லாமல் பத்மபாதருக்கு அந்த உத்வேகம் வந்திருக்காது. எல்லாம் அறிந்த சங்கரர் அவனுக்கு அப்படி ஒரு முடிவை கொடுத்தது ஏன் ?

அங்கே தந்திர மார்க்கத்தின் வழி வந்த காபாலிகனுக்கு முக்தியும் தரவேண்டியிருந்தது. இங்கே பத்மபாதருடைய மந்திரசித்திக்கும் ஒரு பூரணத்துவம் கொடுக்க வேண்டியிருந்தது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.

’நன்மைகள் வரும் வழி நாம் அறியோமே’ என்று திருமந்திரம் சொல்வதும் ”அறியேன் யானும் இராமனை” என்று கபீர் கூறுவதிலும் உள்ள உண்மை ஒன்றுதான்.

Strange are the ways of God !

Saturday, July 18, 2009

அஞ்சுக்கும் அஞ்செழுத்து அங்குசம்

கல்லூரிகள் திறக்கும் நேரம் இது. பெரும்பாலான புது மாணவர்களுக்கு உற்சாகத்தை விட கவலை அதிகம். அதுவும் விடுதியில் தங்கிப் படிக்க வேண்டியவர்கள் கவலையெல்லாம் சந்திக்கப் போகும் ராகிங் பற்றியதே என்றால் மிகையாகாது. குருக்ஷேத்ராவில் பொறியியல் படிப்பிற்காக சேர்ந்த மாணவொருவன் ஒரே வாரத்தில் கல்லூரியை விட்டே ஓடி வந்து விட்டான். மீண்டும் அங்கு போவதற்கு மறுத்து விட்டான். பல நாட்கள் அவன் பட்ட துன்பமும் தாய் தந்தையருக்கு ஏற்பட்ட துன்பமும் சொல்லி முடியாது.

ஒருவனைச் சுற்றி பலபேர் கூடி பாட்டுப் பாடச் சொல்வது ஆடச் சொல்வது எல்லாம் ராகிங்-ல் சர்வசாதாரணம். அதில் தரக்குறைவான நடத்தைகளும் பேச்சுகளும் புது மாணவனை புண்படுத்தும் வகையிலேயே இருப்பதை மறுக்க முடியாது. ஆனால் நிஜ வாழ்க்கையில் திரைப்படம் போலே அடித்து வீழ்த்தி தப்பிக்க முடியாது போகின்றதே :(

நம் ஒவ்வொருவரை சுற்றியும் தினமும் ஐந்து பேர். தூங்கும் நேரம் தவிர எந்நேரமும் நம்மை ஆட்டிவைக்கிறார்கள் அவர்கள் கையில் சிக்கிக் கொண்டு தவிக்கும் போது புது மாணவனைப் போலவே எப்போதடா விடுதலை என்று ஏங்கிப் போகிறது மனது. கபீர் இந்நிலையைப் பற்றி சொல்வதைக் காண்போம்.

कबीर बैरी सबल है, एक जीव रिपु पांच ।
अपने-अपने स्वाद को, बहुत नचावै नाच ॥


வைரியின் பலமதிகம் கபீரா, ஒன்றுக் கெதி்ராய் அஞ்சுமே
தத்தம் போக்கில்ஆட்டுமே, அரங்கில் பல்வகைக் கூத்துமே


(வைரி=எதிரி ; ஒன்று= ஒரு சீவன்; அஞ்சுமே= ஐந்து புலன்களுமே; அரங்கு என்பது உலகத்தை குறிக்கவந்தது)

ஐம்புலன்கள் என்ற எதிரிகள் தத்தம் விருப்பத்திற்கேற்ப மனிதனை ஆட்டிப் படைக்கின்ற நிலையை இந்த ஈரடியில் சித்தரித்திருக்கிறார் கபீர்தாஸ்.

புத்திக்கு நல்லன எவை என்பது தெரிந்தும் அவற்றைப் பற்றிக் கொள்ள முடியாமல் புலன்வழியே அல்லாதனவற்றில் விருப்பு கொண்டு தினங்கள் கழியும் போது குற்ற உணர்ச்சி பலமாக பிடித்தாட்டுகிறது. அதனாலேயே பல நேரங்களில் மன அழுத்தம் அதிகமாகிவிடுகிறது. கண்ணதாசன் போலொரு கவிஞனுக்கு பழி உணர்ச்சியும் அதிகமாகி படைத்தவனை தண்டிக்கவும் சொல்கிறது.
............
”அவனை அழைத்து வந்து
ஆசையில் மிதக்கவிட்டு
ஆடடா ஆடு என்று
ஆடவிட்டுப் பார்த்திருப்பேன்.
படுவான், துடித்திடுவான்
பட்டதே போதுமென்பான்
.......”

கடவுளே ஆனாலும் புலனின்பங்களின் இழுப்பிலிருந்து தப்புவது எளிதல்ல என்னும் கற்பனை சராசரி மனிதனுக்கு ஆறுதல் தந்தாலும் பிரச்சனைக்கு விடையாவதில்லை. அதற்கு ஞானிகளின் வழியையே சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது

ஞானிகளும் புலன்களின் சக்தியை குறைத்து மதிப்பிடவில்லை. அவைகளின் பலத்தை யானைகளின் பலத்திற்கு ஒப்பிடுகின்றனர். மாணிக்க வாசக பெருமான் சொல்வது

ஆனை வெம்போரில் குறுந்தூறு எனப்புல
னால் அலைப்பு உண்
டேனை எந்தாய் விட்டிடுதி கண்டாய் வினை
யேன் மனத்துத்
தேனையும் பாலையும் கன்னலையும் அமு
தத்தையும் ஒத்
தூனையும் என்பினையும் உருக்கா நின்ற
ஒண்மையனே


யானை நடந்தாலே அடியில் புற்களும் புதர்களும் நசுங்கும். அவைகளிடையே போர் ஏற்பட்டால் சிறிய புதரின் கதி எப்படியிருக்கும்? அப்படி ஒரு புதர் சிக்குண்டு அவதிப் படுவது போலே புலன்களுக்கு நடுவில் சிக்கித்தவிக்கும் என்னை விட்டு விடுவாயோ என்று கலங்குகிறார் மணிவாசகர்.

யானைகள் கூட்டம் கூட்டமாக நடமாடும். அப்பொழுது ஏற்படும் அபாயத்தைக் காட்டிலும் மதம் பிடித்த -கூட்டத்தை விட்டு ஒதுங்கிய -ஒற்றை யானை மிகவும் அபாயகரமானது என்பர். அதனாலோ என்னவோ கபீர் ஒற்றை யானையாக புலன்கள் வசப்பட்ட மனதை இன்னுமொரு ஈரடியில் சித்தரிக்கிறார்.

कबीर मनहि गयंद है, आंकुस दे दे राखु ।
विष की बेली परिहरो , अमृत का फल चाखु ॥


கரியதன் பலமுண்டு மனதிற்கு, கைகொள் கபீரா ஒரு தோத்திரம்
கரியதை ஒழிக்க வழியுண்டு, கைகொள் அமிழ்தமாம் தோத்திரம்


[கரியதன் பலம் =யானையின் பலம்; தோத்திரம் = 1)அங்குசம் :2) வழுத்துதல் ,போற்றுதல்; கரி்யதை =நஞ்சுடைய மனதை]

தோத்திரம் என்பதற்கு அங்குசம் என்று இன்னொரு பொருளும் உண்டு. வழிக்கு கொண்டு வரத் தேவைப்படுவது யானைக்கும் ஒரு தோத்திரம் மனதுக்கும் ஒரு தோத்திரம் !

அங்குசத்தால் மீண்டும் மீண்டும் குத்தப்பட்டு யானைக்கு சுதந்திர மனப்பான்மை போய் அடிமை மனப்பான்மை வந்து விடுகிறது. நம்முடைய மனமும் இறைவன் நாமத்தால் மீண்டும் மீண்டும் குத்தப்படும் பொழுது சரணாகதி அடைந்து அமைதி படுகிறது. அதை “அங்குஸ் தே தே ராகு” என்கிறார் கபீர். அவர் மட்டுமல்ல திருமந்திரமும் அதையே உபதேசிக்கிறது.

அஞ்சு உள ஆனை அடவியுள் வாழ்வன
அஞ்சுக்கும் அஞ்செழுத்து அங்குசம் ஆவன
அஞ்சையும் கூடத்து அடக்கவல்லார்கட்கே
அஞ்சு ஆதி ஆதி அகம்புகல் ஆமே.
(977)

உடல் என்ற காட்டுக்குள் ஐம்பொறிகளாகிய ஐந்து யானைகள் வாழ்கின்றன. அஞ்சு எழுத்தாகிய ’நமசிவாய’ வை அங்குசம் ஆக்கி ஐம்புலன்களையும் ஒரு சேர அடக்க வல்லவர்களுக்கு அந்த ஐந்திற்கும் ஆதியாகி நிற்கும் ஆதிமுதல்வன் வீடு சேரலாம்.

நெஞ்சு நிறைந்து அங்கு இருந்த நெடுஞ்சுடர்
நஞ்செம் பிரான்என்று நாதனை நாள்தோறும்
துஞ்சும் அளவும் தொழுமின்; தொழாவிடில்
அஞ்சற்று விட்டதோர் ஆனையும் ஆமே
( )

[நஞ்செம்பிரான் =நம்+செம்மை+பிரான் ; அஞ்சற்று விட்டது = சங்கிலி அறுபட்டொழிந்த]

அணையா விளக்காய் எல்லா உள்ளங்களிலும் நிறைந்து ஒளிவிடும் செம்பிரானை உணர்ந்து நாள்தோறும் உறங்கச் செல்லும் வரை வழிபடுங்கள். அவனை அவ்வாறு வழிபடாது புறக்கணித்தால் ஐம்பொறிகளும் கட்டிய சங்கிலி அறுபட்டொழிந்த யானை போன்று கட்டுக்கடங்காமல் போய்விடும்.

துஞ்சுமளவும் தொழுமின் என்பதை இறக்கும் வரையிலும் என்ற பொருளிலும் கொள்ளலாம். அப்போது வாழ்நாள் முழுதும் இடைவிடாமல் சிந்தித்தலின் அவசியத்தை வலியுறுத்துகிறது.
(picture courtesy : Indian Holidy dot com)

சென்ற இடுகையின் பின்னூட்டத்தில் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் குறிப்பிட்ட மாதிரி அமைதியான யானை அடங்கிய மனதுக்கு அழகான உதாரணம். தன்னைச் சுற்றி எவ்வளவு தாரை தம்பட்டைகள், அடித்து கொண்டாட்டங்கள் நடத்தினாலும் அமைதி குலையாது மணிக்கணக்காக கோவில் உற்சவங்களில் பங்கு கொள்ளும் பக்குவத்தை காண்கையில் பெரும் ஆச்சரியம் ஏற்படும். பலமுறை ஞானிகளின் மனமும் இப்படித்தான் இருக்குமோ என்று நினைத்ததுண்டு. தங்களைச் சுற்றி எது நடந்தாலும் அதில் அவர்கள் சம்பந்தப்படாதவர்களாகவே இருப்பார்கள்.

அமெரிக்காவிலிருந்து வந்திருந்த இளைஞர் பகவான் ரமணரை அண்ணாமலையார் கோவில் யானையுடன் சேர்த்து எடுத்திருந்த ஒரு புகைப்படத்தை தபால் மூலம் அனுப்பி வைத்தார். அதன் பின் பக்கத்தில் “சரீரத்தை அறியாத பெரிய ஆத்மாவும் ஆத்மாவை அறியாத பெரிய சரீரமும் ஒரே இடத்தில்” என்பதாக குறிப்பும் எழுதியிருந்தார்.

அதற்கு என்ன அர்த்தம் என்று நாகம்மாள் கேட்டதற்கு பகவான் சொன்ன பதில்:

“எவ்வளவு ஆகாரம் கொடுத்தாலும் போதாது என்று பிளிறிக் கொண்டே இருப்பதாலோ என்னவோ அதை ஆத்மாவை அறியாத பெரிய சரீரமென்று குறிப்பிட்டிருக்கிறார். நான் எப்போதும் ஆடி அசைந்து மெதுவாக நடந்து எப்படி எப்படியோ நிற்கிறேன் இல்லையா! அதனாலோ என்னவோ நான் சரீரத்தை அறியாத ஆத்மாவாம். அதுதான் அவர் அபிப்பிராயமாக இருக்கலாம்”
.

பூரண ஞானிக்கு தேகபாவனை இருப்பதில்லை என்பதை உயர்த்தி இளைஞர் குறிப்பு எழுதிய போதும் அதை வெகு நயமாக வேடிக்கையாக திசை திருப்பியது ரமணரின் நகைச்சுவைக்கு எடுத்துக்காட்டு.

இன்னொரு முறை குஞ்சு சுவாமிகள் பகவானின் தேக நடுக்கத்தையும் கோலூன்றும் அவசியமும் நடுவயதிலேயே வந்து விட்டது குறிப்பிட்டு காரணம் வினவிய போது, ”பெரிய யானையை சின்ன குடிசைக்குள் கட்டி வைத்தால் குடிசையின் கதி என்னவாகும்? இதுவும் அவ்வளவுதான் !” என்று பதில் கூறினாராம்.

மனித உடல் என்னும் சிறு கூட்டிலே அடைப்பட்டிருக்கும் நிலையை விஸ்வத்தை தன்னுள் உணர்ந்த மகான் எவ்வளவு எளிமையாக விளக்கி விட்டார் !!

ஆன்மீகத்திலிருந்து யானையை பிரிக்கமுடியாது. ஆனைமுகத்தான் முதற்கடவுள். ஆன்மீக இலக்கியத்திலும் யானைக்கு என்றும் ஒரு தனி இடம் உண்டு.

இரண்டாவது ஈரடிக்கு மாற்று:
குஞ்சரம் போலாச்சு மனசு, கபீரா அங்குசம் வீசு
நஞ்ச துவும்போ யாச்சு, நாமா மிர்தம் வந்தாச்சு

Wednesday, July 08, 2009

ஆப்பதனை அசைத்து விட்ட குரங்கு

தலைப்பைப் படித்ததுமே இடுகை எதைப்பற்றியது என்று பலரும் ஊகித்து விட்டிருப்பார்கள் :))

கள் குடித்த ஒரு குரங்கை கற்பனை செய்து கொள்ளுங்கள். அதன் போக்கு எப்படி இருக்கும் என்று சொல்ல முடியாது. அடுத்து அதனுள் ஒரு பிசாசு புகுந்து கொண்டதாக நினைத்துக் கொள்ளுங்கள். இது இன்னும் அதிகப்படியான குழப்பம். அது போதாது என்று அதனை ஒரு தேளும் கொட்டி விட்டால் அந்த குரங்கின் நிலைமை எப்படி இருக்கும் ? இப்படித்தான் உலகத்தில் பெரும்பாலோரது போக்கும் காணப்படுகிறது என்று சுவாமி விவேகானந்தர் சொல்கிறார்.

மனிதனின் மனம் ஆசையென்னும் கள் குடித்து அறிவிழந்து தள்ளாடுகிறது. அந்த நேரத்தில் அகங்காரம் என்னும் பிசாசும் உள்ளே குடி புகுந்து கொள்கிறது. அந்நிலையில் அவனை பொறாமை என்னும் தேள் கடித்து வலியில் கண்மண் தெரியாமல் குதிக்க வைக்கிறது. அந்த நேரத்தில் என்ன நடக்கும் ?
.......
கவர் பிளந்த மரத்துளையில் கால்நுழைத்துக் கொண்டே
ஆப்பதனை அசைத்து விட்ட குரங்கதனை போல
அகப்பட்டீர்,
கிடந்து உழல அகப்பட்டீரே
!

என்று பட்டினத்து அடிகள் கிண்டல் செய்வது போல மாயை விரித்த பலவிதமான ஆசை வலைகளில் நமக்கு நாமே துன்பத்தைத் தேடி அகப்பட்டுத் தவிக்கிறோம்.


கட்டுப்படுத்தப்படாத மனம் நம்மை மீண்டும் மீண்டும் மாயையில் கிடந்து உழல வைக்கிறது.

கபீர்தாஸரும் குரங்கு உதாரணத்தையே எடுத்துக் கொள்கிறார். அதை கட்டியாள வழியும் சொல்கிறார்.

कबीर मन मरकट भया, नेक न कहुं ठहराय ।
राम नाम बांधै बिना, जित भावै तित जाय ॥


வானரம் ஆனது மனது கபீரா, நில்லாது நிலைஒருக் கணமே
பிணைக்கும் ராம நாம மன்றி, தன்வழித் திரிந்து அலையுமே


ஒரு இடத்தில் கட்டி வைத்து முறையான பயிற்சி கொடுத்தால் குரங்கு வழிக்கு வந்துவிடும். மனமும் வழிக்கு வரும் என்பதை குறிக்கவே ராமநாம செபத்தை பிணைக்கும் கயிறாக உபதேசிக்கிறார் கபீர். இறைவனுடைய நாமசெபத்தில் மனதை விடாமல் நிறுத்தினால் அதனுடைய பிற ஆட்டங்களெல்லாம் கட்டுக்குள் வந்துவிடும்.

ஒரு குட்டிக் குரங்கு வழி தவறி அரண்மனை காவலாளர்களிடம் சிக்கிக் கொண்டது. அவர்கள் அதைப் பிடித்துக் கட்டி வைத்தனர். அதைக் கண்ட அரசன் தினமும் தான் போய்வரும் வழியில் கட்டி வைக்கச் சொன்னான். அவ்வழியாக போகும் போது தினமும் ஒரு கோலை எடுத்து அதன் தலையில் ஒரு அடி அடித்து பின்னர் அதற்கு தின்பதற்கு ஏதேனும் கொடுத்து விட்டு செல்வதை வழக்கமாகக் கொண்டான். ஒரு நிலையில் கட்டி வைக்கப்பட்ட குரங்கு அரசனை தூரத்தில் கண்டதுமே அடிக்குப் பயந்து ஒளிய ஆரம்பித்தது. அதன் பரிதாபமான நிலையைக் கண்ட மந்திரி ஒருவர் ’காரணமின்றி ஜீவஹிம்சை செய்வது பாவம்’ என்று குரங்குக்காக பரிந்துரைத்தார்.

சரியென்று அதன் கட்டை அவிழ்த்து விட்டு அதற்கு சுதந்திரம் கொடுத்தான் அரசன்.

பழக்கத்தின் காரணமாகவும் தின்பதற்கு ஏதேனும் கிடைக்கும் என்பதாலும் அந்த குரங்கு (இப்போது குட்டி அல்ல) அரண்மனை வளாகத்திலே திரிந்தது. தினமும் அரசன் வரும் வழியிலே காத்திருந்து தனக்கு கொடுக்கப்பட்டதை தின்று வந்தது.

அதன் பயம் சிறிது சிறிதாக விலகி அவன் பின்னாலேயே தொடர்ந்து செல்ல ஆரம்பித்தது. பின்னர் அரசவை அரியணையிலும் ஏறி விளையாட ஆரம்பித்தது. அப்போதும் அரசன் அதை பற்றிக் கவலைப்படவில்லை. மற்றவர்களுக்கோ தர்ம சங்கடமாக இருந்தது. ஒரு நாள் அரசனின் மகுடத்தையே தள்ளிவிட்டு வேடிக்கைப் பார்த்தது. மந்திரி பொறுக்க முடியாமல் அதைப்பிடித்து கட்டிப்போட உத்தரவிடும்படி கேட்டுக் கொண்டார்.

அரசனும் சிரித்துக் கொண்டே அதைப் பிடித்துக் கொண்டு போகும்படி சொன்னான். ஆனால் அதைப் பிடிப்பது அவ்வளவு சுலபமா என்ன ! அங்கிருந்த அனைவருக்கும் வெகுநேரம் பெரும் விளையாட்டு காட்டியது அந்த குரங்கு.

“பார்த்தீரா மந்திரியாரே. பயம் போய் விட்டால் நம் மனமும் இப்படித்தான் நம்மை ஆட்டி வைக்கிறது. முன்னர் ஒவ்வொரு முறை குரங்கை அடிக்கும் போதும் என் மனதை அதனில் உருவகப் படுத்தி அதை கட்டுக்குள் வைப்பதாக எண்ணி செய்தேன். அதே சமயம் அந்த ஜீவன் மீது பரிதாபம் கொண்டு தின்பதற்கு ஏதாவது கொடுத்தேன். பின்னர் தங்கள் ஆலோசனை பேரில் அதை அவிழ்த்து விட்டேன். இப்போது அதன் விளைவை நீங்களே பார்க்கிறீர்கள்.”

மந்திரிக்கு இப்போது அரசனின் செய்கைக்கான உள்நோக்கம் புரிந்தது.

பயம் நீங்கிய நிலையில் உள்ளே புகுந்து கொள்வது தான் விவேகானந்தர் குறிப்பிடும் பிசாசு. அதாவது ஆணவப்பிசாசு அல்லது அகப்பேய். அது மனிதனை தன் வழியே எங்கெங்கோ இழுத்துச் சென்று விடும்.

அகப்பேய் சித்தர் மனதை பெண்பேயாக பாவனை செய்து அவருடைய பாடல்களில் வரிக்கு வரி ’அகப்பேய்’ என்று விளிக்கிறார்.

பிறவித் தீர வென்றால்... அகப்பேய், பேதகம் பண்ணாதே
துறவியானவர்கள்.... அகப்பேய், சும்மா இருப்பார்கள்

ஆரலைந்தாலும்.... அகப்பேய் , நீ அலையாதேடி
ஊரலைந்தாலும்....அகப்பேய், நீ ஒன்றையும் நாடாதே


மனதின் பேயாட்டத்தை அமைதி படுத்த ஒன்றையும் நாடாது இருக்குமாறு உபதேசிக்கிறார் சித்தர் பெருமான்.

தன்னை சரணாகதிக்கு தயார் செய்து கொள்ளாதவன் இந்த குரங்கின் பிடியிலிருந்து விடுபட முடியாது. அகப்பேய் ஆட்டுவிக்கும் அளவும் சரணாகதி ருசிக்காது. ஆனால் வாயளவில் எல்லாம் புரிந்த மாதிரி பேசிக்கொண்டே கானல் நீர் போன்ற உலக வேட்கைகளை துரத்திக் கொண்டே இருப்போம் என்கிறார் திருமூலர்.

பெருக்கப் பிதற்றில் என் ? பேய்த்தேர் நினைந்து என் ?
விரித்த பொருட்கெல்லாம் வித்து ஆவது உள்ளம்,
பெருக்கில் பெருக்கும்; சுருக்கில் சுருக்கும்;
அருத்தம் அத்தனை; ஆய்ந்து கொள்வார்க்கே (2036)


(பேய்த்தேர் =கானல்நீர் போன்ற ; விரித்த பொருள் = விரிந்த பிரபஞ்சம்)


உலகம் நிலையற்றது` என்பதைக் கூறும் நூல்களைப் பலவாக எடுத்துச் சொல்லி, அவற்றின் பொருளையும் பலவாறாக விளக்கிப் பேசினாலும், `உலகம் கானல் போல்வது` என்பதைக் கல்வியளவிலும் கேள்வியளவிலும் உணர்ந்தாலும் அவை யெல்லாம் இந்திரிய அடக்கத்திற்கு நேர்க்கருவியாவன அல்ல. ஏனெனில், நிலையாதவற்றின் மேல் அவாக்கொண்டு ஓடி அவற்றுள் முன்னர் ஒன்றைப் பற்றிக் கிடந்து, பின்பு அதனை விட்டு மற்றொன்றின் மேல் தாவி அதனைப் பற்றிக் கிடந்து இவ்வாறு முடிவின்றிச் செல்வது மனமே. அதனால் அஃது அவ்வாறு முடிவின்றி ஓட விட்டால், அது புலனுணர்வை முடிவின்றித் தோற்றுவித்துக் கொண்டேயிருக்கும். மனத்தை ஓட விடாது நிறுத்திவிட்டால், புலன் உணர்வின் தோற்றமும் இல்லையாய் விடும். ஆகையால் மனத்தை யடக்குதலே இந்திரிய அடக்கத்திற்கு நேர்க் கருவியாகும்.` இந்திரியங்களை அடக்குமாறு எவ்வாறு` என ஆராய்பவர்க்கு அறிய வேண்டிய பொருளாயிருப்பது அவ்வளவே.
(விளக்கம் நன்றி : thevaram.org)

மனம் சிவத்தைப் பற்றப் பற்ற உலகினைப் பற்றிய சிந்தனை சுருங்கி அது மெல்ல மெல்ல வழிக்கு வந்து விடும் என்பதையும் கபீரைப் போலவே சுட்டிக்காட்டுகிறார் திருமூலர்.

நடக்கின்ற நந்தியை நாடோறும் உன்னில்
படர்கின்ற சிந்தையைப் பைய ஒடுக்கிக்
குறிகொண்ட சிந்தை குறி வழி நோக்கில்
வடக்கொடு தெற்கு மனக் கோயிலாமே. (2039)


(நடக்கின்ற நந்தி =உயிர்களிலெல்லாம் பொருந்தி இயங்கும் சிவன்; நாடோறும்= நாள்தோறும் ;உன்னில்= தியானித்தால்; குறிவழி நோக்கல்= சிவனை எண்ணுதல் ; வடக்கொடு தெற்கு =வடதுருவத்தினின்று தென்துருவம் அடங்கிய நிலப்பகுதி அனைத்தும் வழிபாட்டிற்குரிய தலங்களே)

உயிர் செய்யும் செயல் யாவற்றிலும் தானும் உடனாய் நின்று செய்யும் சிவனை அறியாது அனைத்துச் செயல் களையும் தானே செய்வதாகக் கருதி மயங்குகின்ற உயிர் அம் மயக்கத்தினின்றும் நீங்கி அவனை இடைவிடாது உணர்ந்து நிற்பின், ஐம்புலன்களை நாடி ஓடுகின்ற மனம் மெல்ல மெல்ல அதனை விடுத்து அவனிடத்தே சென்று ஒடுங்கும். அங்ஙனம் ஒடுங்கிய நிலை ஒருவர்க்கு வாய்க்குமாயின், உலகில் உள்ள அனைத்துக் கோயில் களும் அவரது மனமாகிய அந்தக் கோயிலாகவே அமைந்துவிடும் (விளக்கம் நன்றி :thevaram.org)

இடைவிடாது உணர்ந்து நிற்பதற்கான சாதனமே நாம செபம். அதனால்தான் மகான் கபீர் நம்மை அதனைக் கொண்டு இறைவனுடன் பிணைத்துக் கொள்ள அறிவுறுத்துகிறார். இல்லாவிட்டால் குரங்கு மீண்டும் மீண்டும் ஆப்பை பிடுங்கி சிக்கிக் கொள்ளும் அபாயம் உண்டு.

(இன்று குரு பூர்ணிமை. யாவருக்கும் குரு அருள் பெருகட்டும்)