இந்தியாவை ஞானத்தின் கருவூலம் என்று கேள்விப்பட்டிருந்த அலெக்ஸாண்டர் பஞ்சாபில் புகழ் பெற்ற சாது ஒருவரைத் தேடிச் சென்றான்.
தனக்கு பெரும் வரவேற்பும் மரியாதையும் இருக்கும் என்று எதிர்பார்த்து சென்ற அவனை அந்த சாது ’உன் வழியே நீ போ’ என்று சர்வ சாதாரணமாகக் கூறியதைக் கேட்டதும் கோபத்துடன் வாளை உறுவி அவரை கொல்ல எத்தனித்தான். அவரோ எவ்வித சலனமும் இல்லாமல் “எனக்கு மரணம் இல்லை.நான் ஆத்மாவில் உறைபவன்” என்று பதிலுரைத்தார். அவரது தன்னம்பிக்கையும் பயமற்ற நிலையும் மாவீரனுடைய கோபத்தையும் பணிய வைத்தது.
தக்ஷசீலத்தின் மன்னன் போரஸ்-ஸுடன் நடந்த போரில் வெற்றி பெற்றிருந்தாலும் அலெக்ஸாண்டரின் படைபலம் வெகுவாக குன்றி விட்டிருந்தது. மாஸிடோனியாவிலிருந்த கிளம்பிய படையில் கால் பாகமே எஞ்சியிருந்தது. அவனுக்கு மிகவும் அத்யந்தமாக இருந்த குதிரையும் இறந்து விட்டது. தன் உயிர் நண்பன் ஒருவனை இழந்தது போல் துக்கம் அவனை வாட்டியது. எல்லோருடைய வற்புறுத்தலின் பேரில் படைகளை திருப்பினான் அலெக்ஸாண்டர்.
வழியில் பெர்ஷிய மன்னன் சமாதியிருந்த நினைவு மண்டபத்தைக் கடக்க நேர்ந்தது. அதிலிருந்த வாசகம்;
“நான் தான் சைரஸ்.இந்த பெரும் பெர்ஷிய ராஜ்ஜியத்தை தோற்றுவித்தவன். நீங்கள் யாராயிருப்பினும்,எங்கிருந்து வந்திருந்தாலும் உங்களுக்கு ஒரு வேண்டுகோள்.இதோ,என்னை மூடியிருக்கும் இந்த மண்ணை மட்டுமாவது எனக்காக விட்டு வையுங்கள் “
அரசும் புகழும் எவ்வளவு நிலையற்றது என்பதை அறிந்த அலெக்ஸாண்டர் மனம் மிகவும் கலங்கியது.
அந்த தினங்களில் இந்தியாவிலிருந்து அலெக்ஸாந்தரின் வேண்டுகோளுக்கு இணங்கி பல அறிஞர்களும் அவனுடன் பயணம் செய்தனர். அவர்களில் ஒருவர் (அவர் பெயரை Calnus-என்கிறது ஆங்கில குறிப்பு) தன் இறுதி தினம் வந்ததைப் புரிந்து கொண்டு ஒரு சிதையை மூட்டச் சொன்னார். தனக்குரிய இறுதி சடங்குகளை தானே செய்து தன் கிரேக்க நண்பர்களிடம் விடைபெற்றுக் கொண்டார். “மன்னனிடம் சொல்லுங்கள்.விரைவிலேயே பாபிலோனில் சந்திப்போம்” என்று அவர்களிடம் சொல்லி அமைதியாக சிதையில் அமர்ந்து நெருப்போடு கலந்து போனார்.
பலமாதங்கள் தொடர்ந்த பயணத்தில் மேன்மேலும் துர்சகுனங்கள் காணப்பட்டன. முன் கோபத்தால் அலெக்ஸாண்டர் தன் நெருங்கிய நண்பனையே மதியிழந்து கொன்றுவிட்டான். அதை நினைத்து வருந்தி நாளெல்லாம் உணவும் நீரும் இன்றி அழுது கொண்டிருந்தான்.
எப்போதுமே வெற்றிகளுக்கு நாயகனாக இருப்பினும் அலெக்ஸாண்டர் மனம் துன்பத்தால் வாடியது. அளவுக்கு அதிகமாகக் குடித்தான். பாபிலோனை அடைந்தபோது அவனுக்கு தீராத காய்ச்சல் ஏற்பட்டது. பன்னிரண்டு நாட்களுக்குப் பிறகு வைத்தியங்கள் பலனளிக்காமல் கி.மு 326 ஜூன் 10ஆம் தேதி அவன் மரணமடைந்தான்.
பஞ்சாப்-சாதுவின் தீர்க்கமும், சைரஸ்ஸின் வாசகமும், சிதை புகுந்த அறிஞனின் அமைதியான மரண வரவேற்பும், நண்பனைக் கொன்றதும் அவனுள் பல மாற்றங்களை ஏற்படுத்தி இருக்க வேண்டும். தன்னுடைய சவ அடக்கத்தின் போது சவப்பெட்டிக்கு வெளியே கைகள் இரண்டும் ஆகாயத்தை பார்த்தவாறு வெளியே தெரியட்டும் என்றும் “இந்த மாவீரன் கடைசியில் கொண்டு சென்றது எதுவும் இல்லை என்பதை யாவரும் அறிந்து கொள்ளட்டும்” என்றும் சொல்லியிருந்தானாம் அலெக்ஸாண்டர்.
சைரஸ்ஸைப் போலவும் அலெக்ஸாண்டரைப் போலவும் வந்து சென்றவர்கள் எத்தனையோ பேர். மரண தேவனின் பிடியிலிருந்து தப்பியவர் எவருமில்லை.
மனிதப்பிறவி தரப்பட்டிருகும் நோக்கத்தை மறந்து வாழ்நாளில் அவர்கள் போடுகின்ற ஆட்டம் ஞானிகளுக்கு வேடிக்கையாக இருக்கிறது. கபீரின் வரிகளிலே சொல்வதானால்,
चहूँ दिस ठाढ़े सूरमा,हाथ लिये तलवार ।
सबही यह तन देखता, काल ले गया मार ॥
நாற்புரம் காத்தனர் வீரர், கையில் ஏந்திய வாளொடு
பார்த்து நின்றனர் பாரோர்,பிராணன் போனது நமனொடு
மரண பயம் என்பது சிருஷ்டியின் நியதி.
“தேகம் நீங்கும் என எண்ணிலோ நெஞ்சம் துடித்து அயருவேன்” என்பார் தாயுமானவர்.
எல்லா உயிர்களுக்கும் தத்தம் இனத்தை பாதுகாத்துக் கொள்ள இயற்கை கொடுத்திருக்கும் ஒரு அடிப்படை உணர்வு அது.
மனிதப்பிறவிக்கு மட்டுமே அதை கடந்து செல்லும் சக்தி கொடுக்கப்பட்டிருப்பதால் மரணத்தை வெல்வது என்பது அவன் கடமையாகிறது. மரணத்தை வெல்வது என்பது பிறப்பு இறப்பு என்னும் சுழலில் இருந்து விடுபடுவதையே குறிக்கும்.
உடலுக்கு மரணம் உண்டு. ஆனால் நாம் உடலையும் கடந்த பேருணர்வை பற்றியிருக்க வேண்டியவர்கள் அன்றோ. அதைக் குறித்து சிந்திப்பதை விட்டு எண்பது கோடி ஆசைகளை வளர்த்துக்கொண்டு ஔவை சொல்வதை போல சாகும் வரை சஞ்சலத்திலே உழல்வதின் பயனென்ன !
உண்பது நாழி உடுப்பது நான்கு முழம்
எண்பது கோடி நினைந்து எண்ணுவன-கண் புதைந்த
மாந்தர் குடி வாழ்க்கை மண்ணின் கலம் போலச்
சாந்துணையும் சஞ்சலமேதான் (நல்வழி -28)
மனிதனுடைய தேவையோ நிதம் ஒரு உழக்கு அன்னம்,சுற்றிக்கொள்ள ஒரு துண்டு. அதை விட்டு மற்றவையெல்லாம் தேவையற்ற சுமையே. மேலும் சொல்கிறார் ஔவையார்.
சிவாய நம என்று சிந்தித்திருப்போர்க்கு
அபாயம் ஒருநாளுமில்லை- உபாயம்
இதுவே மதியாகும்,அல்லாத எல்லாம்
விதியே மதியாய் விடும். (நல்வழி -15)
உபாயம் இதுவே மதியாகும்! எதுவே? சிவாய என்று சிந்தித்திருப்பதே அறிவுள்ள செயலாகும். விதியை மாற்ற நினைக்கும் எந்த முயற்சியிலும் ’விதியே மதியாகிவிடும்’. அதாவது விதியினுடைய வழியே ஓங்கி நிற்கும். இதை விளக்கும் ஒரு சுஃபி கதை.
காலிஃப் பூங்காவில் உலவிக்கொண்டிருக்கும் போது மரணதேவனின் தூதன் நின்றிருந்தான். “உனக்கு என்ன வேலை ?”என்று வினவினான் காலிஃப். ”இன்றைய பொழுதே உன் நண்பனுக்கு கடைசி தினம்”என்று பதில் வந்தது. கவலை கொண்ட காலிஃப் அரண்மனைக்குத் திரும்பி நண்பனை அழைத்து தன்னுடைய சிறந்த குதிரையை அளித்து ’மாலைக்குள் பாக்தாத் போய்விடு’ என்று விரட்டினான். மீண்டும் பூங்காவிற்கு வந்த போது தூதன் அங்கேயே நின்று கொண்டிருந்தான்.”மாலை வரை காத்திருக்க வேண்டுமா ?”என்றான் காலிஃப். “அவனுக்கு மரணம் பாக்தாத்தில் அல்லவோ! அவனுக்காக பாக்தாத்தில் இன்னொரு தூதன் காத்திருக்கிறான். அவன் இன்னமும் இங்கேயே உள்ளானே என்று ஆச்சரியப்பட்டு கொண்டிருந்தேன்” என்று சொல்லி மறைந்தான் தூதன். விதி காலிஃபாவின் மதியுள் புகுந்து வென்றுவிட்டது. விதியே மதியாகிவிட்டது !
ஆனால் கடவுளையே நம்பினவர்க்கு இந்த கவலை இல்லை. தன்னையே எக்காலும் சிந்தித்திருந்த மார்க்கண்டேயனுக்காக கூற்றுவனையும் எட்டி உதைத்த சிவனை போற்றி தாயுமானவரும் மரணபயம் பக்தனுக்கேது என்று பாடுகிறார்.
மார்க்கண்டர்க்காக மறலி பட்ட பாட்டை உன்னிப்
பார்க்கின் அன்பெர்க்கென்ன பயங்காண் பராபரமே
(மறலி=எமன்) - பராபரக்கண்ணி 128
பரமனை சிந்தித்திருப்பதே சிறந்த வழி என்று ஔவை சொன்னதும் அதனாலேயே. கபீரின் கருத்தும் அதுவே
वैध्य मुआ रोगी मुआ, मुआ सकल संसार ।
एक कबीरा ना मुआ, चेहि के राम आधार ॥
பிணியாள் போனான், தீர்த்தவன் போனான், போவரே யாவரும் ஒருநாள்
தனையாள் இராம மந்திரம் செபிக்கும் கபீரனுக் கில்லை இறுநாள்
(தீர்த்தவன்= பிணி தீர்த்தவன் ; இறுநாள்= மரண நாள்)
அப்படி இடைவிடாது சிந்தித்து இருக்கும்போது மரணமற்ற நிலை தானே வந்தெய்துகிறது. எப்படி நன்கு பழுத்த வெள்ளரிப்பழம் எவ்வித சிரமும் இல்லாமல் கொடியிலிருந்து தானே பிரிந்து விடுமோ அதுபோல் இறைப் பற்றில் பழுத்த ஜீவனும் உலகப்பற்றை விட்டு பரமனடி சேர்கிறது. எல்லோராலும் அறியப்பட்ட மிருத்யுஞ்ஜெய மந்திரத்தின் சாரமும் அதுவே.
மிருத்யுஞ்செயன் என்றால் மரணத்தை வென்றவன் என்று பொருள். ஆர்வமுள்ளவர்களுக்காக மந்திரம் கீழே தரப்பட்டுள்ளது.
ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्द्धनम्
उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्षीय मामृतात्
ஓம் த்ரயம்பகம் யஜாமஹே சுகந்திம் புஷ்டி வர்த்தனம்
ஊர்வாருகமிவ பந்தநான் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத்
ஊர்வாருகம் +இவ என்பது ’வெள்ளரிப்பழத்தைப் போல’ என்று ஒரு பொருள் வரும். ஊர்வ +ஆரூகம் என்று பிரித்துக் கொண்டால் பெரும் வியாதி என்று இன்னொரு பொருள் கிடைக்கும். இந்த காரணத்தினால்தான் கடுமையாக நோய்வாய் பட்டுள்ளவர்களுக்காக பிறர் மிருத்யுஞ்ஜெய மந்திரம் ஜெபிக்கும் வழக்கம் ஏற்பட்டுள்ளது.
ஊர்வ ஆரூகம் இவ பந்தனான் (பெரும் வியாதி போன்றத் தளை) என்பது பிறவிப் பிணியை குறிப்பதாகக் கொள்ளலாம். அப்போது அமிர்தம் அளித்து மோக்ஷத்தை அளி என்ற கோரிக்கை வியாதியஸ்தர்கள் மட்டுமல்லாமல் பொதுவாக யாவருக்கும் பொருந்தும்.
//ம்ருத்யோர் மோக்ஷிய மாம்ருதாத்//
ReplyDelete"ம்ருத்யோர் முக்ஷீர் யமாம் ருதாத்"
அப்படினு வந்திருக்கணுமோ???
"யாமார்க்கும் குடியல்லோம், நமனை அஞ்சோம், ஏமாப்போம், பிணியறியோம்" என்றும் இருந்திருக்கின்றனரே. அவரையும் தேடினேன். :))))) என்றாலும் பொருத்தமான பாடல்களுக்கு நன்றி.
ReplyDeleteஹி ஹி மேடம்
ReplyDeleteதட்டச்சுப் பண்ண கொஞ்சம் சோம்பேறிதனம்.
வெட்டி ஒட்டல் -ல கொஞ்சம் அசந்து விட்டேன். இப்ப சரி பண்ணியாச்சு.
சுட்டிக்காட்டியதுக்கு நன்றி
//நமனை அஞ்சோம், ஏமாப்போம், பிணியறியோம்" என்றும் இருந்திருக்கின்றனரே. அவரையும் தேடினேன்...//
ReplyDeleteஇதை ஏற்கனவே ஒரு தடவை சொல்லியாச்சு. கூடியமட்டும் ரிபீட்டீஷன் இல்லாம பார்த்துக்கணும் இல்லையா ! :)
எப்போதும் போல கலக்கிட்டீங்க. :-)
ReplyDeleteவிபூதி தாரணம் செய்கையில் இந்த த்ரயம்பக மந்திரத்தைச் சொல்லுறது சில இல்லங்களில் வழக்கம்...பற்றினைத் துறக்க நித்தமும் நினைவுருத்தும் மந்திரம்.
நன்றி மதுரையம்பதி,
ReplyDelete// விபூதி தாரணம் செய்கையில் இந்த த்ரயம்பக மந்திரத்தைச் சொல்லுறது //
மனம் தொடர்ந்து இறை சிந்தனையில் இருக்க வேண்டும் என்பதற்காக பல நல்ல வழக்கங்களை செய்து காட்டியுள்ளனர் பெரியவர்கள்.
சிறுவயதில் எனது தாத்தா குளிக்க ஆரம்பிப்பதிலிருந்து பூஜைக்கு அமரும் வரை தொடர்ந்து பல நல்ல தோத்திரங்களை சொல்லிவந்ததை கண்டிருக்கிறேன். அப்போது அதன் முக்கியத்துவம் புரியவில்லை. இப்போது மனம் ஒத்துழைப்பதில்லை.:(
தேகம் அநித்தியம், மரணம் நிச்சயம், சிவனை மறவாதிரு மனமே, என்பது வாக்கு.
ReplyDeleteஇவ்வுண்மைதனை அறிவோருக்கும் தெளிந்தோருக்கும் கூட மரண காலம் ஒரு மனக்கலக்கத்தைக் கொடுக்கும் என்பதில் ஐயமில்லை. மரண பயமே மனித தேகத்தினை விரைந்து கொல்லும் வலிமை
உடையது எனின் மிகையாகாது. "சாதலின் இன்னாதது இல்லை" எனச் சொல்லும் வள்ளுவர் இறப்பினால் ஏற்படும் மனத்துயரத்தினையோ ஏக்கத்தினையோ மனக்கிலேசத்தினையோ அல்லது பயத்தினையோ குறிப்பிடுகிறாரே தவிர மரணத்தை வெல்லமுடியாது என்பதை யாவரும் அறிவர். " நில்லாதவற்றை நிலையின என்றுணரும் புல்லறிவாண்மை கடை" என்றும் சொல்லி , அழியும் பொருட்களை அழியாது என நினைப்பதே இழிவு எனவும் சொல்கிறார்.
இவ்வாறு இருக்கையில் ருத்ரத்தில் வரும் மஹா ம்ருத்யஞ்ஜய ஜபமான 'த்ரயம்பகம் யஜாமஹே ' எதைச் சொல்கிறது?இனி பிழைக்கமாட்டார் எனப்புலப்படும் நேரத்தில் இ ந்த ஜபத்தினை செய்யுங்கள் எனச் சொல்வது எதனால்? மரணத்தை வெல்லவா ? அல்ல. மரணத்தை எவரேனும் வெல்ல இயலுமோ ? வென்றதும் உண்டோ? இல்லை அல்லவா ! ஆகவே, ம்ருத்யஞ்ஜய ஜபம் மரண காலம் நெருங்குகிற நேரத்தில் மனதில் ஏற்படும் கிலேசம், பயம்,நம்மை நாடியுள்ளோர் இனி நாம் இல்லாவிடின் என்ன செய்வாரோ என்ற அச்சம் எல்லாவற்றினையும் அகற்ற ஓர் உபாயம். ம்ருத்யஞ்ஜய ஜபம் மரணத்தை வெல்ல அல்ல. மரண பயத்தை வெல்லவே.
உருவாரகம் என்பது வெள்ளரிக்காய் ஓடு மட்டுமன்றி விளாம்பழ ஓட்டிற்கும் பொருந்துமாம். விளாம்பழம் நன்றாக முதிர்ச்சி அடைகையிலே எப்படி கூடு முற்றிலுமாக சிறிது பிசிரு கூட இல்லாது பழத்திலிருந்து
விடுபடுகின்றதோ, அது போல, என் உயிர் உடலை விட்டுப் பிரிகையில் சட்டெனப் பிரியவேண்டும், எனப்பிரார்த்திப்பதே ம்ருத்யஞ்ஜய ஜபம் என எனக்குத் தோன்றுகிறது. மஹா பெரியவர்கள் இது போலத்தான் இம்மந்திரத்திற்கு வ்யாக்யானம் சொல்லியுள்ளார்கள்.
நிற்க. //விபூதி தாரணம் செய்கையில் இந்த த்ரயம்பக மந்திரத்தைச் சொல்லுறது சில இல்லங்களில் வழக்கம்...பற்றினைத் துறக்க நித்தமும் நினைவுருத்தும் மந்திரம்.// என மதுரையம்பதி சொல்வது முற்றிலும் சரி. "மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தரமாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திரமாவது நீறு சமயத்திலுள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திரு ஆலவாயான் திருநீறே" எனும் சம்பந்தத் தேவாரம் காணவும்.
நிற்க. எனக்கென்னவோ இதெல்லாமே எதற்கு ? கபீரன்பரின் வலைப்பதிவினை தினமும் படித்துக்கொண்டிரு ந்தாலே போதும் எனத்தோன்றுகிறது.
சுப்பு ரத்தினம்.
சென்னை.
இயன்றால் வரவும்
http://vazhvuneri.blogspot.com
//பற்றினைத் துறக்க நித்தமும் நினைவுருத்தும் மந்திரம்.//
ReplyDeleteஉண்மை, தினமும் நான் சொல்லுவதுண்டு இந்த மந்திரத்தை, நேரம் கிடைக்கும்போதெல்லாம். சின்ன வயசிலே இருந்து பழக்கினாங்க! :))))))
//இதை ஏற்கனவே ஒரு தடவை சொல்லியாச்சு. கூடியமட்டும் ரிபீட்டீஷன் இல்லாம பார்த்துக்கணும் //
படிச்சிருக்கேன் என்றாலும் பின்னூட்டம் போடும்போது நினைவில் வரலை! :)))))
நன்றி சுப்புரத்தினம் ஐயா,
ReplyDelete//உருவாரகம் என்பது வெள்ளரிக்காய் ஓடு மட்டுமன்றி விளாம்பழ ஓட்டிற்கும் பொருந்துமாம் //
ஒரு நல்ல புதிய விஷயம் தெரிந்து கொண்டேன்.
//ம்ருத்யஞ்ஜய ஜபம் மரணத்தை வெல்ல அல்ல. மரண பயத்தை வெல்லவே. //
பொருத்தமாக சொன்னீர்கள். விளக்கமான பின்னூட்டத்ஹிற்கும் பாராட்டுதல்களுக்கும் மிக்க நன்றி.
அருமை!
ReplyDeleteஎனக்கென்னவோ அலெக்ஸாண்டர்தான் அசோகராய் பிறந்திருப்போரோ என்றொரு எண்ணம்! :-)
பிற்காலத்தில் அசோகரின் கல்வெட்டு ஒன்று குறிப்பிடுகிறது:
"தர்மப்போர், இங்கு மட்டுமல்லாமல், 600 யோஜனைக்கு அப்பால் கிரேக்கத்தினையும், தெற்கில், சோழர்களையும், பாண்டியர்களையும், இலங்கையையும் வென்றுள்ளது" என்று.
வாங்க ஜீவா
ReplyDelete//எனக்கென்னவோ அலெக்ஸாண்டர்தான் அசோகராய் பிறந்திருப்போரோ என்றொரு எண்ணம்! //
அலெக்ஸாண்டர் மிக இளம் வயதிலேயே (33) மரணம் அடைந்தான்.சரியாக 19 வருடங்களுக்கு பின்னர் அசோகனின் பிறப்பு.அகால மரணம் அடைந்தவர்களது ஆன்மா அவர்களது பூர்த்தியாகாத இச்சைகளை பின்தொடரும் என்பது நம் நாட்டில் தொன்று தொட்டு இருந்துவரும் நம்பிக்கை.
அவனுக்கு தரணி ஆளும் வினைப்பயன் இன்னும் மிச்சம் இருந்து இந்திய மண்ணில் ஒரு விருப்பு இருந்திருந்தால் உங்கள் ஊகம் உண்மையாக இருக்க வாய்ப்பு உண்டு.
ஆனால் இதைப்பற்றி முடிவாகச் சொல்லக்கூடியவர்கள் முக்காலத்தையும் அறிந்த ஞானிகளே.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
தெரிந்த செய்தியாயினும், அதை நீங்கள் விவரிக்கும் அழகே, அழகு! சிறுவயதில், ஆறாவது-ஏழாவது வகுப்பு படிக்கையில், எனக்கு அலெக்ஸாண்டரை ரொம்பவும் பிடிக்கும். மாவீரர் அலெக்ஸாண்டர் என்று தான் பாடப்புத்தகக்களில் குறிப்பிடுவார்கள். உலகம் பூராவும் வெல்ல, தன் வாளைச் சுழற்றிக் கொண்டு கிளம்பிய வீராதிவீரனாக மனசில் உருவாகியிருந்தார் அலெக்ஸாண்டர். அலெக்ஸாண்டரைப் பிடிக்கும் அளவுக்கு அவரது அந்த கிரேக்க கவசத் தொப்பி மிகவும் பிடிக்கும்.
ReplyDeleteபிற்பாடு பள்ளி இறுதி வகுப்பில், பண்டித நேரு அவர்கள் தனது மகள் இந்திராவுக்கு எழுதிய 'உலக சரித்திரக் கடிதங்களை' துணைப்பாட
நூலாக வைத்திருந்தார்கள். ஜவாஹர்லால் நேரு அவர்கள், அலெக்ஸாண்டரைக் குறிப்பிட்டு தன் மகளுக்கு எழுதிய அந்தக் கடிதத்தின்
ஆரம்ப வரியே, "நான் அலெக்ஸாண்டரை ஒரு மாபெரும் வீரனாக ஒப்புக்கொள்ள மாட்டேன்" என்று ஆரம்பிக்கும். அதற்கு அவர் சொல்லும் காரணங்களைப் படிக்கையில், அலெக்ஸாண்டரைப் பற்றிய மனதில் இருந்த பிம்பம் லேசாக அழுக்கானது உண்மை.
அலெக்ஸாண்டர், செலுக்கஸ் நிகேடார், சந்திரகுப்தன், அந்த சரித்திரப் பிரசித்தி பெற்ற திருமணம்--யாருமே, எதுவுமே மறக்கக் கூடியது அல்ல.
திரு.ஜீவாவின் பின்னூட்டத்தைப் பார்த்து திகைத்தேன். அலெக்ஸாண்டரின் மறுபிறவியே அசோகர் எனில், கற்பனை வெகு சுகமாக இருக்கிறது. அசோகராய் அவதரித்து, ஜீவகாருண்யராக மாறி.. பிராயச்சித்தம் தேடி...ஏன் இருக்கக் கூடாதென்று தான் நினைக்கத் தோன்றுகிறது..
இறைவன் போட்ட கணக்கை யார் தான் அறிவார்?...
உங்கள் பதிவின் சிறப்பும், அதற்கு ஜீவா பதிந்த பின்னூட்டமும்,
எக்ஸ்லண்ட்!
நல்வரவு ஜீவி,
ReplyDelete//சிறுவயதில், ஆறாவது-ஏழாவது வகுப்பு படிக்கையில், எனக்கு அலெக்ஸாண்டரை ரொம்பவும் பிடிக்கும். //
எனக்கு அலெக்ஸாண்டரின் அறிமுகம் எங்கள் பள்ளி நாடகம் மூன்றாம் வகுப்பு படிக்கும் பொழுது. முதன் முதலாக முழு மேக்கப்போடு வண்ண விளக்குகளின் அடியில் மேடையில் கண்டது. பெரிய வகுப்பு மாணவர்கள் நடித்துக் கொண்டிருந்தாலும் வசனம் யாவும் எங்களுக்கு அத்துபடி. புருஷோத்தமன் (போரஸ்) தோற்றுப் போனது மட்டும் பிடிக்கவில்லை.
முடிவு நம் கையிலா இருக்கிறது?
இன்றும் (வாழ்க்கையிலும்) அதே நிலைமை !!
அனுபவித்து கருத்து சொல்லியிருக்கிறீர்கள். மிக்க நன்றி
சுப்பு ரத்னம் ஐயா சொல்வதுபோல் உங்கள் பதிவுகளை
ReplyDeleteமனமொன்றிப் படித்துகொண்டிருந்தால் போதும்.
மனத்தைப் பிணைத்துள்ள தளைகள்தானே மரண பயத்தைத்
தருகின்றன!
தேவ்
"வெள்ளரிப் பழம் எப்படிச் சுலபமாக செடியினின்றும் பிரிந்து வருகிறதோ அதே போல என்னையும் என் பிறவியினின்றும் விடுதலை அடையச் செய்வாயாக" என்பதே மிருத்யுஞ்ஜெய மந்திரத்தின் சாரம் என ஒரு பெரியவர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
ReplyDeleteவழக்கம் போல, உங்களுடைய இந்தப் பதிவும் கருத்துச் செறிவு மிக்கதாகவும் சிந்தனையைத் தூண்டுவதாகவும் இருக்கிறது. மிக்க நன்றி.
நல்வரவு தேவராஜன் ஐயா,
ReplyDeleteபாராட்டுரைகளுக்கு நன்றி.
மனத்தைப் பிணைத்துள்ள தளைகள்தானே மரண பயத்தைத்
தருகின்றன!
மனதை நிறுத்தும் பயிற்சி செய்யாத வரையில் தளைகளும் தொடரத்தான் செய்யும் என்று தோன்றுகிறது. :(
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
நன்றி கவிநயா,
ReplyDelete..என்னையும் என் பிறவியினின்றும் விடுதலை அடையச் செய்வாயாக"..
மனம் பக்தியில் பழுத்தால் தானாகவே இற்றுப் போகும் பற்று. மீராவும் சூர்தாசும் நந்தனாரும் ஆண்டாளுமே சாட்சி
பாராட்டுகளுக்கு நன்றி