Sunday, December 17, 2006

குரு பெருமை

குரு பெருமையை பேசாத ஆன்மீக வழிகாட்டிகளே இல்லை. கபீரின் குரு ராமானந்தர். வளர்ப்பால் கபீர் இஸ்லாத்தை கடைபிடித்த ஒரு எளிய நெசவு குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது வாழ்க்கையின் பெரும் பகுதி வாராணசி எனப்படும் காசியிலியே கழிந்தது. இயல்பிலேயே அவரது மனம் இறைவன் மதங்களுக்கு அப்பாற்பட்டவன் என்ற உண்மையை உணர்ந்திருந்தது. அவருக்கு குருவின் அவசியமும் புரிந்திருந்தது. ராமானந்தரின் முற்போக்கான கருத்துகளும், மனத்தூய்மையையும் கண்ட அவர் அவரையே மனத்தால் குருவாக வரித்து விட்டார். அவரிடம் மந்திர உபதேசம் பெறுவது எப்படி ? அவரோ ஆழ்ந்த இந்து. இவரோ முற்றிலும் வேறு சமய நம்பிக்கை உடைய சமுதாயத்தைச் சேர்ந்தவர். . அவரை அணுகி எவ்வாறு கேட்பது ?

கபீர் ஒரு தீர்மானத்திற்கு வந்தார். உத்தமர்கள் வாயில் எப்போதும் இறைநாமமே இருக்கும் ஆதலால் அவர்கள் எதிர்பாராது நிகழும் போது கூட அதுவே வெளிப்படும். (காந்திஜி சுடப்பட்ட நிலயிலும் அவர் சொன்னது "ஹே ராம்" ). இதை உணர்ந்த கபீர் ஒரு நாள் ராமானந்தர் கங்கையில் அதிகாலையில் நீராடி வரும் பொழுது படித்துறையின் ஒரு படியில் குறுக்கே படுத்து விட்டார். இருள் விலகாத நிலையில் தெரியாமல் கபீரை மிதித்து விட்டார் ராமானந்தர். அனிச்சையாக "ராம் ராம்" என்று சொல்லிக் கொண்டே அவர் காலை பின் வாங்கிக்கொண்டார். உடனே கபீர் எழுந்து அவரை வணங்கி அவரது திருவடி தன் மீது பட்டு சொல்லப்பட்ட ராம நாமத்தையே தன் உபதேச மந்திரமாகக் கொள்ள ஆசி வேண்டினார்.

"தாள் தந்து அளிக்கும் தலைவனே சற்குரு" என்பார் திருமூலர் (2049).
"குரு பரிசித்த குவலயமெல்லாம் திரிமலம் தீர்ந்து சிவகதியாமே" (2054)

என்றும் உரைப்பார். கபீருக்கு இவைகள் அவரது ஆழ்ந்த பக்தியின் காரணமாக இயல்பாகக் கூடியது. அதை புரிந்து கொண்ட ராமானந்தரும் அவரை தம் சீடராக ஏற்றுக் கொண்டார்.
வினோதமான சீடன். வினோத முறையில் உபதேசம். பிற்காலத்தில் ராமானந்தரின் தலையாய சீடராகக் கபீர் போற்றப்பட்டார்.

குருபெருமையைக் கூறும் கபீரின் தோஹாக்கள் ஏராளம்.

1. गुरु गॊविन्द दॊऊ खडॆ़ काकॆ लागूं पांय
बलिहारी गुरु आपनॆ गॊविन्द दियॊ बताय


குரு கோவிந்த் தோஹூ கடே காகே லாகூம் பாய்
பலிஹாரீ குரு ஆப்னே கோவிந்த் தியோ பதாய்


குருவும் கோவிந்தனும் சேரவரின் பற்றும் சேவடி எவரதுவே
குருவின் கழலை வரித்திடு கோவிந்தன் வரவும் அவனருளே

கடவுளிடம் மனிதனை அழைத்துச் செல்வதே குருவின் திருவருள் தான். அதை எக்காலத்தும் மறக்கக்கூடாது என்பதை வேடிக்கையாகவும் நாசூக்காகவும் குறிப்பிடுகிறார் கபீர். கோவிந்தன் வடிவமாக கடவுளை உருவகித்து கபீர் சொல்வது என்னவெனில் கடவுளே நேரிலே வந்து விட்டாலும் குருவின் திருவடிகளை ஒருவன் மறக்கக் கூடாது என்பதே.

2. गुरु धॊबी सिख कपडा़ साबू सिरजन हार
सुरति सिला पर धॊइयॆ निकसॆ ज्यॊति अपार

குரு தோபீ ஸிக் கப்டா ஸாபூ ஸிரஜன் ஹார்
ஸுரதி ஸிலா பர் தோயியே நிக்ஸே ஜ்யோதி அபார்

துவைப்பவன் ஆசான் துணிசீடன் திட்பமே கல்லாம்
துவைப்பின் மந்திர உறைக்கூட்டி ஒளிரும் சிவமேயாம்
( திட்பம் = மன உறுதி : உறை = அழுக்கு அகற்றும் உவர் நீர், மந்திர உறை என்பது மன மாசை அகற்றும் செபமந்திரம் )

3. गुरु बिन ज्ञान न उपजै, गुरुबिन मिलै न मॊष
गुरु बिन लखै न सत्य कॊ, गुरु बिन मिटै न दॊष


குருபின் ஞான் ந உபஜை, குருபின் மிலை ந மோஷ்
குருபின் லகை ந ஸத்ய்கோ, குருபின் மிடை ந தோஷ்

குருவன்றி ஞானமும் உண்டோ குருவன்றி வருமோ மோக்கம்
குருவன்றி சத்தியம் புரியுமோ குருவன்றி மாயுமோ மும்மலம்
(மோக்கம் = மோட்சம்)

ஆணவம், கன்மம், மாயை என்னும் மூன்று மலங்களும் மனிதன் தாண்டிச் செல்லவேண்டிய முப்பெரும் தடைகள். இவைகளால் சேர்ந்துள்ள மனமாசை துவைத்து சுத்தம் செய்யும் வல்லமை குரு ஒருவருக்கே உண்டு. துணியை கல்லின் மேல் அடித்து துவைக்க வேண்டும். குரு வைக்கும் ஒவ்வொரு சோதனையும் சீடனுடைய மனவுறுதி என்ற கல்லில் அடிப்பதற்கு ஒப்பாகும். அப்போது அவனுடைய துணைக்கு நிற்பது குரு உபதேசித்த செபமந்திரமே. அதை உறுதியாகப் பிடித்து கொண்டால் மன அழுக்குகள் கரைந்து சத்தியம் அசத்தியம் என்பவனெல்லாம் புரிய ஆரம்பிக்கிறது. ஆகவே குருவை விட வேறு யார் ஒரு சாதகனை கரையேற்ற வல்லார் ? சத்தியம் இல்லாதவனுக்கு ஞானம் எங்கிருந்து வரும் ? ஞானமும் குரு அருளும் இல்லாமல் மோட்சம் எப்படி வரும்? இப்படியாக ஒவ்வொரு நிலையிலும் வழிகாட்டுதல் என்பது இல்லாமல் முடியாது என்பதை அழுத்தமாக சுட்டிக்காட்டுகிறார். 'ஸ்வாமி ராமா'வின் "Life with Himalayan Masters" என்ற புத்தகத்தை வாய்ப்பு கிடைப்பவர்கள் அவசியம் படியுங்கள். குரு கொடுக்கும் சோதனைகள் புரியும்.

4. कॊटिन चन्दा उगहीं सूरज कॊटि हजार
तीमिर तॊ नाशॆं नहीं बिन गुरु वीर अंधार

கோடின் சந்தா உக்ஹீ, ஸூரஜ் கோடி ஹஜார்
தீமிர் தோ நாஷேன் நஹி, பின் குருவீர் அந்தார்


இந்து கோடி உகுக்கினும் கோடி விண்மணி கூடினும்
அந்தகாரம் அழிவதில்லை ஆசானில்லா அந்தனுக்கே


(இந்து = சந்திரன் ; விண்மணி =சூரியன் ; அந்தகாரம்= இருள் ; அந்தன்= அந்தகன், குருடன்)

(தீமிர் என்ற ஹிந்தி சொல்லும் தமிழில் திமிரம் என்ற சொல்லும் இருள் என்பதை குறிக்கும் !)

பல கோடி ஜென்மமெடுத்து சந்திர சூரியர்களின் ஆதிக்கத்தில் இந்த பூமியில் வந்து போனாலும் நல்ல குரு வாய்க்காதவனுக்கு ஞானமென்பது கிடையாது. அவனென்றென்றும் அஞ்ஞான இருளில் உழலும் குருடனாகவே இருந்திடுவான். இது மேலெழுந்தவாரியான விளக்கம். வேறொரு வகையிலும் பொருள் கொள்ள வழியிருக்கிறது. நாம் மூச்சு விடும் பாங்கில் இடது பக்கம் சந்திர கலை என்றும் வலது பக்கம் சூரிய கலை என்றும் இவையிரண்டும் சேருமிடத்து சுஷும்னை அல்லது சுழுமுனை என்றும் கூறுவர். முறையாக செபத்தின் மூலம் மூச்சைக் கூட்டி சுஷும்னயில் எழுப்புவதை (அக்னி கலை) கற்றறியும் போது சிந்தை தெளிந்து சிவமாவர் என்பதை திருமூலரும் பல இடங்களில் கூறுகிறார்.

ஞாயிறு திங்கள் நவின்றெழு காலத்தில்
ஆயுறு மந்திர மாரு மறிகிலர்
சேயுறு கண்ணி திருவெழுத் தஞ்சையும்
வாயுற வோதி வழுத்தலுமே (2703)


சந்திர கலையும் சூரிய கலையும் "சிவாய நம" என்ற ஐந்தெழுத்து மந்திரத்தால் கூட்டப் படுதலை உணார்த்துகிறார். இன்னுமொரு பாடலில்

சந்திரன் சூரியன்தான் வரின் பூசனை
முந்திய பானுவில் இந்து வந்து ஏய்முறை
அந்த இரண்டும் உபய நிலத்தில்
சிந்தை தெளிந்தார் சிவம் ஆயினாரே (1989)


உபய நிலம் என்பது சகசிரதளத்தை குறிப்பதாகிறது. இப்பெரும் தத்துவத்தை கபீரும் முழுமையாக உணர்ந்திருந்தார் என்பதும் செபம் மற்றும் குருவின் அவசியம் பற்றி அவர் எளிமையாக போதித்தார் என்பதையும் நாம் காண்கிறோம்.

5. बिना सांच सुमिरन नहिं, बिन भेदी भक्ति न सॊय
पारस में परदा रहा, कस लॊटा कंचन हॊय


பினா சாஞ்ச் சுமிரன் நஹி, பின் பேதி பக்தி ந ஸோய்
பாரஸ் மே பர்தா ரஹா, கஸ் லோடா கஞ்சன் ஹோய்


சத்திய மில்லாஸ் மரணையும் கூடா சத்குரு வில்லா பக்தியும் சமையா
நித்தியத் திரையும் நிற்றலு மிடையே பாரதம் செய்யும் கஞ்சனம் வாரா

( ஸ்மரணை = இறை சிந்தனை ; சமையா= பக்குவப் படாதது ; பாரதம் = பாதரசம்; கஞ்சனம் = பொன், தங்கம் )

ரச வாதம் என்பது பல விதமான உலோகங்களை பாதரசத்தின் தொடர்பினால் பொன்னாக மாற்றும் கலை. தாயுமானவர் இதை ஓரிடத்தில் குறிப்பிடுகிறார். எப்படி ? " அளகேசன் நிகராக அம்பொன் மிக வைத்த பேரும் நேசித்து ரசவாத வித்தைக்கு அலைந்திடுவர்". அதாவது
குபேரனுக்கு சமமாக செல்வம் உள்ளவரும் செப்பையும் இரும்பையும் பொன்னாக மாற்றும் கலைக்காக அலைந்திடுவர் என்றார். இந்த ரசாயன மாற்றத்திற்கு தேவையான பாதரசத்தின் தொடர்பை ஒரு மெல்லிய துணியால் பிரித்து விட்டால் பின் இரும்பு இரும்பாகவே இருக்கும். செப்பு செப்பாகவே இருக்கும். விரும்பும் கிரியா மாற்றம் அங்கே நிகழாது என்கிறார் கபீர்.
ஆன்மீக முன்னேற்றத்தில் அசத்தியம் ஒரு திரை. அவநம்பிக்கை ஒரு திரை. சத்தியத்தைக் கடைபிடிக்காமல் என்னதான் பிரார்த்தனைகளும் பூசைகளும் ஒருவன் செய்யினும் அவை என்றும் கைக்கூடாது. அசத்தியம் குறுக்கே வருகிறது. அது போலவே குரு என்பவரிடம் வைக்கப்படும் நம்பிக்கையும் பரிபூரணமாக இருக்க வேண்டும். அதை unconditional என்று சொல்லலாம். அது சற்றே ஆட்டம் கண்டாலும் பக்தி என்பதானது பக்குவப்படாமலே நின்று விடுகிறது. குருவருளும் சத்தியமும் பாதரசம் போன்று விந்தை புரியக்கூடியவை. கீழ் நிலைக்கு ஒப்பான சாதாரண இரும்பைப் போன்ற சாதகனை பொன்னுக்கு நிகரான ஆன்மீக சக்தியுள்ளவராக மாற்றும் வல்லமை அவைகளுக்கு உண்டு. இவைகள் இல்லாமல் ஆணவ மலத்தால் பாதிக்கப்பட்ட யாரும் தமக்கும் இறைவனுக்கும் இடையே ஒரு திரையிட்டுக்கொண்டவர்கள் ஆவார்கள். அதை வெற்றி கொள்ள வேண்டுமானால் மானுட உருவத்தில் உலவும் குரு ஒருவரில் அசையாத நம்பிக்கை வைத்து அவரையே கடவுளாகப் பாவித்து சாதனையில் ஈடுபட வேண்டும். இன்னொன்றையும் நினவில் கொள்ள வேண்டும். உண்மையான ஞானப் பசி உள்ளவனுக்கு இறைவனே ஒரு குருவை அனுப்பி தடுத்தாட் கொள்கிறான் என்று பெரியவர்கள் கூறுவார்கள். ஆகையால் நமது முதல் கடமை ஆன்மீகத்தில் முழுமையான நாட்ட முடையவராய் மாறுவது தான்.

Sunday, October 29, 2006

திரியும் மனது

மனதைப் பற்றிப் பேசாத ஆன்மீகமே இருக்க முடியாது. எல்லாம் அங்கிருந்தே தொடங்கி அங்கேயே முடிவடைகிறது. சிலர் குரங்கு என்பர். வேறு சிலர் 'பாதரசம்' என்பர். இன்னும் சிலர் அதை பேயாய் வருணிப்பர். மனம் அறுத்தலே ஆன்மீகத்தின் முதலும் முடிவுமாகும். வழிபாடுகளின் நோக்கமே புலனடக்கம் தான். மனமடங்க இது முதற்படி. இதை புரிந்து கொள்ளாமல் செய்யும் எந்த ஒரு வழிபாடும் முழுமையானது ஆகாது.

விடாமல் பலவாறான பூஜைகளையும் விரதங்களையும் கடைப்பிடிக்கும் ஒருவன் இறைப்பற்று உள்ளவனா? கபீர் சிரிக்கிறார்.

माला तॊ कर मॆ फिरॆ, जीभ फिरॆ मुख माहिं
मनुआ तो चहुं दिशा फिरॆ, यह तॊ सिमिरन नाहिं


மாலா தோ கர் மே ஃபிரே, ஜீப் ஃபிரே முக் மாஹின்
மனுவா தோ சஹு திஷா ஃபிரே, யஹ் தோ ஸிமிரன் நாஹின்


விரலில் உருளுமே மணி அக்கு, நாவில் புரளுமே செம்மந்திரம்
வீணில் திரியுமே மனம் அங்கு, நவில்வரே இதனை செபமென்று
(அக்குமணி = ஜெபமாலை ; செம்மந்திரம் = ஜெபத்திற்க்கென உபதேசமான மந்திரம்)
( இது செபமாகாது என்னும் வகையில் கபீர் தோஹாவை நிறைவு செய்திருப்பினும் கேலியை சற்று தூக்கலாக்க வேண்டி நவில்வரே என்ற இகழ்ச்சி ஏ காரம் கையாளப்பட்டுள்ளது)


{ இதை சரியல்ல என்று நினப்பவர்களுக்கு, மாற்று :
விரலில் உருளுமே மணியக்கு, நாவில் புரளுமே செம்மந்திரம்
வீணில் திரியுமே மனமங்கு, இவர் செய்வதும் இங்கே செபமன்று
}
இது நமது தினசரி அனுபவம். பத்து நிமிடமாவது ஒருமுக சிந்தையில் கடவுளை துதிக்க முடியாமல், நமக்களித்துள்ள நல்லவிஷயங்களுக்கு நன்றி கூறாமல் செபமென்ற பெயரிலமர்ந்து கொண்டு இல்லாத பொருட்களுக்கு மனக்கோட்டைக் கட்டிக்கொண்டிருப்போம். வெளிப் பார்வைக்கு, பிறருக்கு, நாம் வேண்டுமானால் பக்திமான்களாக காட்சியளிக்கலாம். ஆனால் மஹான்கள் நமது மனதை படம் பிடித்து விடுகின்றனர்.

நாமதேவர் ஒரு பெரிய மனிதரின் வீட்டிற்கு விஜயம் செய்தார். அவரோ பூஜையில் மும்முரமாய் இருந்தார். இவரை கண்டுக்கொள்ளவே இல்லை. வெகு நேரம் கழித்து வந்த அவர் உபசாரமாக "வந்து வெகு நேரமாகி விட்டதா?" என்று விசாரித்து வைத்தார். அவருடைய மனதுள் தாம் செய்த விஸ்தாரமான பூஜையை நாமதேவர் பாராட்டுவார் என்று எதிர்பார்த்தாரோ என்னவோ! அதற்கு அவர், "ஓ வண்ணான் வந்த போதே வந்து விட்டேன்" என்று பதிலளித்தார். நெடுஞ்சாண்கிடையாக அம்மகானின் காலில் விழுந்தார் அந்த பெரிய மனிதர். மாட்டாரா பின்னே ! பூஜை முழுவதும், வராமல் போய் விட்ட வண்ணானைப் பற்றியும் மாற்று ஏற்பாடுகள் பற்றியுமே அவர் சிந்தனை திரிந்தது. அதை சர்வ சாதாரணமாக வெளிக்கொணர்ந்தார் நாமதேவர். இத்தகையவர் அன்றும் இன்றும் என்றும் உண்டு. பின் கபீரும் சிரிக்காமல் என்ன செய்வார்?

இன்னும் சிலர் நோன்புகள் நேர்ந்து, பாத யாத்திரை செய்து, முடி களைந்து நேர்த்திக் கடன் செலுத்துவதிலேயே கடவுளை திருப்தி செய்ய முயலுவர். இவர்களைக் கண்டு கபீருக்கு அலுப்புத் தட்டுகிறது.

कॆसॊं कहा बिगाडिया जॊ मूंडॆ सौ बार
मन कॊ काहॆ न मूंडिए, जामैं विषै विकार


கேஸோன் கஹா பிகாடியா, ஜோ மூண்டே ஸௌ பார்
மன் கோ காஹே ந மூண்டியே, ஜாமை விஷய் விகார்


சிகைசெய்த பாவ மென்ன, மழிப்ப ரதை நூ றுமுறை
சிறுமை தனைம ழியாரோ, மனக்கண் வளரும் நூறுவகை
(சிகை = தலைமுடி)

मूडं मुडावत दिन गए, अजहूं न मिलिया राम
राम नाम कहु क्या करै, जॊ मन कॆ और काम

மூண்ட் முடாவத் தின் கயே, அஜ்ஹூ ந மிலியா ராம்
ராம் நாம் கஹூ க்யா கரை, ஜோ மன் கே அவுர் காம்

முண்டனம் செய்தே தினங்கள் கழிந்தன காணுவா ரில்லை இராமனை
இராம நாமம் சொல்லியும் என்ன, மனதில் கிளைக்குதே வேறுவினை

(முண்டனம் = தலை சிரைத்தல்)

இதைப் படித்த உடனே நம் நினைவுக்கு வருவது திருக்குறளில் " மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்தது ஒழித்து விடின்" என்ற குறள் தான். உலகம் என்பதை 'ஊர் வாய்' என்று கொள்ள முடியுமா ? கற்புக்கரசியான சீதையினுள்ளும் குற்றம் கண்டது 'ஊர் வாய்'. உலகம் என்பது, ஆகையால், சான்றோர் சொன்ன வழி என்றே பொருள் கொள்ள வேண்டும். அதனினும் சிறப்பு தன் எண்ணங்களை தானே பரிசோதித்துக் கொள்ளுவது.
நம் மனதில் ஒவ்வொரு கணமும் தோன்றிக்கொண்டே இருக்கும் எண்ணங்கள் பெரும்பாலும் நம்மைச் சுற்றியே- நமக்கு உண்டாகும் இலாப நஷ்ட கணக்குகளாகவே- இருக்கும். சுயநல எண்ணங்களே எல்லா வகையான சிறுமைகளுக்கும் மூல காரணமாகிறது. இவைகளை கவனித்து களைந்தாலே மனம் தூய்மையடைந்து இறைவனிடம், அதாவது முக்தி நிலைக்கு, அழைத்துச் சென்று விடும். "சித்த ஷோதகம் முக்தி சாதகம்" என்று மகான் ரமணர் தமது 'உபதேச சார'த்தில் இரத்தின சுருக்கமாக உரைக்கிறார். வள்ளுவரும் இரமணரும் சொன்னதை சற்றே கிண்டல் முறையில் 'தலைமுடிக்கென' பரிந்து கூறுவது போல் கபீரும் கூறுகிறார்.

கபீர் உபதேசம் பெற்ற மந்திரம் ராம நாமம். ஆனால் அவர் நிர்குண உபாசகராகவே இருந்தார். அதாவது கடவுளின் எல்லையற்ற தன்மையினால் அவன் அருவானவன் என்ற கோட்பாட்டைக் கொண்டவர். அதை மனதில் வைத்து (அதாவது ராமனை உருவக் கடவுளாகக் காணாது) அவரது ஈரடியை அருவ கோட்பாட்டிற்கேற்ப மொழிபெயர்க்க வேண்டினால் கீழ்கண்ட முறையில் மொழி பெயர்க்கலாம்.

முண்டனம் செய்தே நாட்கள் கழிந்தன, முட்டினா ரில்லை மூவா முதல்வனை
முணங்கும் மந்திரந் தானென் செய்யும், முடக்கவு மில்லை மறுகும் மனந்தனை


(முட்டுதல் =பற்றிக்கொள்ளுதல் ; மூவா முதல்வன் = கடவுள் ; மறுகுதல் = உலாவுதல், சுழலுதல் ; முடக்கு = செயலிழக்கச் செய்தல்)

அப்படியானால் கபீர் பூஜை விரதங்கள் செபம் எல்லாவற்றையும் தேவையற்றவை என்கிறாரா? கண்டிப்பாக இல்லை. அவைகள் மனதை ஒரு கட்டுக்கள் கொண்டு வரும் பயனைத் தராத போது அர்த்தமற்றவை ஆகின்றன என்றே சுட்டிக் காட்டுகிறார். ஈடுபட்டுள்ள செயலின் உண்மையானப் பொருளுணர்ந்து செய்யவே வற்புறுத்துகிறார்.

Saturday, October 21, 2006

இயற்கையின் சூசனைகள்

அவதூத கீதை என்பது ஆன்மீக இலக்கியத்தில் ஒரு முக்கியமான அங்கமாகும். அதில் அன்றாடம் நாம் காணும் சிறு நிகழ்சிகளையும் ஆன்மீகக் கண்ணோட்டத்தினோடேயே விளக்கப்பட்டிருக்கிறது. கபீர் அவதூதர் வகையில் சேராதவராயினும் இயற்கையின் எல்லா காட்சிகளிலும் பாடம் கற்கும் நோக்குடையவராயிருந்தார். ஒரு குயவனாகட்டும், தோட்டக்காரனாகட்டும் அல்லது மாவரைக்கும் பெண்களாகட்டும் ஏன் சர்வ சாதாரணமான இலையுதிர் மரமாகட்டும் அவர் உலகோருக்கு நிலையாமையை சுட்டிக்காட்ட ஒரு உதாரணமாக எடுத்துக்கொள்கிறார். கீழ் காணும் தோஹாக்கள் ஹிந்தி பேசும் மக்களிடையே மிகப் பிரபலமானவை.

1. माटी कहे कुम्बार सॆ तू क्या रौंदे मॊही
एक दिन ऎसा आयॆगा मै रौदूगी तॊही


மாடி கஹே கும்பார் ஸே, தூ க்யா ரோந்தே மோஹீ
ஏக் தின் ஐஸா ஆயேகா, மேய்ன் ரோந்தூகீ தோஹீ

குயவன் கைமண் கூறும்
பிசைமின் பிசைமின் இன்று
கூப்பிடு நாளில் உம்மை பிசைவேன் பிசைவேன் என்று


கதைகளில் பறவைகள் பேசும். மிருகங்கள் பேசும். மரங்கள் பேசும். இங்கே "அசித்" ஆன மண் பேசுகிறது. இது கபீரின் மனம் எந்த அளவுக்கு இயற்கையோடு ஒன்றிவிட்டிருந்தது என்பதை எடுத்துக்காட்டுகிறது.
"you cannot digest a bacteria but the bacteria can digest you" என்பது உயிரியல் அறிந்தவர்களுடைய கூற்று. தன்னைச் சுற்றி எங்கும் "சித்" சக்தியை கண்ட கபீருக்கு- மண் மனிதனை ஜீரணத்துக்கொள்ளும் சக்தி, ஒரு அப்பட்டமான நினைவிலிருந்து அகற்றமுடியாத உண்மை- குயவனைக் கண்டதும் பீறிட்டுக் கொண்டு வருகிறது. மண்ணுக்குள் இருக்கும் உயிரணுக்கள் தான் அதன் ஜீரணிப்பிற்கு பின்னால் ஒளிந்திருக்கும் இரகசியம் என்பதை விஞ்ஞானிகள் சொல்லி நமக்குப் புரிகிறது. ஆனால் அங்கே தான் மனித மனம் ஆன்மிகத்தை மறந்து வழி தவற ஆரம்பிக்கிறது. தனக்கு எல்லாம் புரிந்து விட்டது போல் பேச தொடங்கி விடுகிறது. கபீருக்கு அந்த கவலை இல்லை. இறைவனிடம் தன்னை முழுமையாக ஒப்படைத்துக் கொண்டு விட்டவர். அதனாலேயே 'அசித்'துள்ளும் 'சித்'தைக் கண்ட அவருடைய வாசகங்கள் பல நூற்றாண்டுகளாக ஜீவித்து நிற்கின்றன.

கபீர் தம் வழக்கம்போல் தறியில் துணி நெய்து கொண்டிருந்தார். உள்ளம் ராம நாம ஜெபத்தில் ஈடுபட்டிருந்தது. அதை கலைக்கும் வகையில் வீட்டிற்குள்ளிருந்து வம்பும் வேடிக்கைப் பேச்சுமாக கல் திருகையில் மாவரைத்துக் கொண்டிருந்த பெண்களின் பேச்சுச் சத்தம் வந்து கொண்டிருந்தது. இறைவன் கொடுத்திருக்கும் பொன்னான பிறவியை புரியாது வீணடிக்கிறார்களே என்ற ஏக்கம் கபீருள் ஒரு ஈரடியாக வெளிப்படுகிறது. அதுவும் அவர்கள் ஈடுபட்டிருந்த செயலைக் கண்டே வடிக்கிறார்.

2. चल्ती चक्की दॆख कर दिया कबीरा रॊए
दुई पाटन के बीच में साबूत बचा न कोए


சல்தி சக்கி தேக்-கர் தியா கபீரா ரோயே
துயீ பாடன் கே பீச் மேன் ஸாபூத் பசா ந கோயீ

திருகும் அரவை எந்திரம் கண்டு, கலங்கும் கபீரின் அந்தரம்
இருபெரும் கற்களுக்கிடையே, தப்பிய தினைகள் இலையே


இரு பெரும் கற்கள் என்பது பாவம் புண்ணியம் என இருவினைகளை குறிப்பனவாகக் கொள்ளலாம். பகல் இரவு என்பதாகவும் கருதலாம். வேறு சிலர் இதை ஆகாயம் மற்றும் பூமியாகவும் கொள்வர். எப்படியோ உலகோரெல்லாம் இந்த அரவையில் சிக்கி மடிகின்றனர். இதிலிருந்து தப்பியவர் எவரும் இல்லை.

இன்னுமொரு எளிய தோஹா தோட்டக்காரனை வைத்து ;

3. माली आता देखकर, कलियाँ करॆं पुकार
फूल फूल चुन लियॆ, कल हमारी बार


மாலீ ஆதா தேக்-கர் கலியா கரேன் புகார்
பூல் பூல் சுன் லியே கல் ஹமாரி பார்

அண்டிடும் ஆரங்காரன் கண்டு, அயர்வனவே அரும்புகள்
ஆய்வனே இன்றலர் பூக்களை, நாளைய முறையும் நமதே


ஆரம் என்பது நந்தவனம். தோட்டக்காரனை ஆரங்காரன் என்று வைத்துக்கொள்ளலாம். அவனை இங்கே எமனுக்கு இணையாகச் சித்தரிக்கிறார் கபீர். பூமியில் வந்திருப்பவரின் காரண காரியங்கள் முடிவதைத் தெரிந்து அவர்களை கொண்டு செல்ல வந்து விடுகிறான் அவன். இங்கே எவரும் நிரந்தரம் இல்லை. இதை அரும்புகள் பேசிக் கொள்வதைப் போல் நம் முன் நிறுத்துகிறார் கபீர். ( 'கலியா'- மொக்கு ;'பூல்' -மலர்ந்த பூ ; சுன்-லியா- தேர்ந்தெடுத்தல்)
வேறொரு தோஹாவில் இளம் தளிருக்கு மரம் உபதேசிக்கிறது :
4 वृक्ष बॊला पात सॆ सुन पत्तॆ मॆरी बात
इस घ्रर के यह रीति है एक आवत एक जात

விருக்ஷ் போலா பாத் ஸே ஸுன் பத்தே மேரி பாத்
இஸ் கர் கே யஹ் ரீதி ஹை, ஏக் ஆவத் ஏக் ஜாத்


தருவுரைத்ததுத் தளிரிடம் என்சொல் கேளாய் பிள்ளாய்
வருமொன்று போமொன்று அறிநீ இம்மனை முறையாய்


இங்கே மரம் என்பது பூமிக்கு உவமையாக்கப் பட்டுள்ளது. ஜனன மரணமென்பது அன்றாட நிகழ்ச்சி இங்கே. இதனை புதிதாய் முளைவிடும் தளிருக்கு மரம் கூறும் அறிவுரையாய் எளிமையாய் சுட்டிகாட்டுகிறார் கபீர்.
ஒரு சலவைத் தொழிலாளியைக் கண்டும் கபீருக்கு அருமையான பாடம் கிட்டியது. அது நிலையாமையைப் பற்றி அல்லவாததால் அதை மற்றோர் சமயம் காண்போம்.

Sunday, October 01, 2006

Introduction- நல்வரவு

Welcome to my blog dedicated to the Great saint of North India Kabirdas. Here is a humble attempt to translate his Dohas which inspire millions across the world for its simplicity and depth of philosophical content. For those who are famliar with tamil literature often he very much reminds the words of Tirumoolar, Ouvaiyaar, Valluvar, Pattinathu Adigal etc. This only goes to show how great saints spoke the Truth in a universal sense irrespective of their time, place of birth(region) or language.

Translation is an area not many would like to dare. While the challenge is to bringout the greatness of the original author, the limitations of language, vocabulary and understanding of the translator many a time leaves a big gap in what was said and what is being understood!

Will it be possible for any one to translate the Kural "பற்றுக பற்றற்றான் பற்றினை" in to any other language with the kind of use of பற்று in three different meanings ?
Yet I venture in to this difficult and risky task of translation and hope all readers (and Saint Kabirdas too) will bear with me for my limitations and ignorance.
I humbly request all knowledgeable Tamil scholars to guide and correct the compositions so that greatness of the saint spreads in its true glory.

Some of the self imposed restrictions for the translations are:

1. It is the core meaning and spirit of expression that is more important than the literal meaning of words.
2. The usage of "Kabir" whenever occurs (this is known as mudra) is not only maintained but also should appear as many times as he used in any particular doha.

As I am ignorant of yappilakkanam I wish to get guided by you all in this matter.

MAY KABIR BLESS ALL
_______________________________________________
சில மாதிரி மொழிபெயர்ப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
இவற்றை வரும் நாட்களில் விவரமாக காண்போம்

துயரில் துய்வர் அவன் நாமம் உயர்வில் உன்ன மறந்தனர்
உயர்விலும் உன்னுவராயின் துயரின் சாயலும் தொலையுமே
மாயா மாயை மரியா மனம் உழன்று ஓய்ந்ததே தேகம்
ஓயாதுரைப்பான் கபீர் ஒழியாதே அவாவெனும் தாகம்
குயவன் கைமண் கூறும் பிசைமின் பிசைமின் இன்று
கூப்பிடு நாளில் உம்மை பிசைவேன் பிசைவேன் என்று
ஓங்கி உயர்ந்து விட்டாலென்னே ஈச்சந்தரு போலே
ஒதுங்க இல்லை நிழலே எட்டாதே இச்சைதரு பழமே
தீயவன் ஒருவன் எங்கே தேடிக் கண்டிலேன் இங்கே -
தேடிக்கொண்டேன் என்னுளே என்னிலும் தீயவன் இலையே
பொறு மனமே பொறு காலத்தேதான் நிகழும் யாவும் -
நூறு குடம் நீரே இறைப்பினும் பருவத்தே தான் பழுக்கும் பழம்
திருகும் அரவை எந்திரம் கண்டு கலங்கும் கபீரின் அந்தரம்
இருபெரும் கற்களுக்கிடையே தப்பிய தினைகள் இலையே
நவில்வீர் நயமுடனே, தானடங்கி தனுவடக்கி,
தம்மன் பர்தம் உள்ளங் குளிரும் உரைகளே
துவைப்பவன் ஆசான், துணி சீடன், திட்பமே கல்லாம்
துவைப்பின் மந்திர உறை கூட்டி ஒளிரும் சிவமேயாம்
அளப்பிலா நூல் பல தெரிந்து ஆன பண்டிதர் எவரும் இல்லை
அன்பின் அருமை தெளிந்தார் அன்றே பண்டிதர் ஆனாரே
நானிருந்த போது அரி இல்லை, அரி வந்தபின்னே நானில்லை
நாடகம் முடிந்தது, ஒளி வந்த பின்னே இருளங்கு இல்லை
சிகை செய்த பாவமென், மழிப்பரதை நூறு முறை
சிறுமைதனை மழியாரோ, மனக்கண் வளரும் நூறு வகை
நாளையென்பதை இன்றே செய்மின், இன்றென்பதை இப்பொழுதே
நொடியில் வருமே ஊழி, செய்வது பின் நீ எப்பொழுது
விரலில் உருளுமே மணி அக்கு, நாவில் புரளுமே செம்மந்திரம்
வீணில் திரியுதே மனம் அங்கு, நவில்வரே இதனை செபமென்று
தான் செய்து நடப்பன இல்லை, கபீர் செய்யாமலே நடந்தன வன்றோ
தான் செய்து நடப்பன போல் காண்பீர், செய்விப்பவன் அவன் யாரோ
ஒன்றே எனில் சரியன்று, இரெண்டென்று உரைப்பின் தவறேயாம்
சொல்லற்று மொழிவான் கபீர், அது என்றும் எதுவோ அதுவேயாம்
செருக்கு வீணில் எதற்கு கபீரா, வானளாவும் மாடம் என்று
எருக்கு விளைய காண்பரா , காலன் கிடத்தும் இடம் கண்டு
சிந்தையைத் தின்னும் கவலைப் பேய், மரந் தின்னும் சிதல் அன்னே
எந்தையே தீர்வேயிலாப் பிணியிது, பேதை மருத்துவன் செய்வது மென்னே
எள்ளுள் உறைவது தைலம் சிக்கிமுக்கியுள் வெந் தழலே
உள்ளுள் உறைவான் ஈசன், விழிப்பரோ உணர்வில் இவரே
கபீர் மனது நிர்மலம் ஆனது தூய கங்கை நீர் போலே- கபீர்
கபீரெனக் குழைந்தே அரி, திரிவான் இவன் பின்னே பின்னே
எமக்கு இத்தனை அருள்வாய் ஈசா, எமை சார்ந்த குடி நலம் கா
யாமும் பசித்திராமலும் அடியார் பசித்துச் செல்லாதிருக்கவுந் தா

Saturday, September 23, 2006

அன்பே சிவம்

தம் வாழ்நாள் முழுவதும் இறை இன்பத்தில் முற்றும் மூழ்கியவராய் இருந்தார் கபீர். அவரது தோஹாக்களில் காணப்படும் எளிமை பெரிதும் திருமூலரின் திருமந்திரத்தை ஒத்துள்ளது. படிப்பறிவில்லா பாமரனும் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் அவர் சொல்லிய ஈரடி ஒன்று இதோ:

अखत कहानी प्रॆम की कुछ कही न जाय
गूंगे कॆरी सरकरा बैटे मुस्काय

அகத் கஹானி ப்ரேம் கீ குச் கஹி ந ஜாய்
கூங்கே கேரி ஸர்கரா பைடே முஸ்காய்

எப்படி சருக்கரையை தின்ற ஊமையால் அதன் சுவையை விவரிக்க இயலாதோ அதைப் போன்றே இறைவனின் சிந்தனையில் ஒன்றிவிட்டவருக்கு அதன் இன்பத்தை எடுத்து இயம்ப முடியாது என்னும் உண்மையை சுலபமான உவமை மூலம் புரிய வைத்து விட்டார் கபீர்.
ஞானிகளின் மொழிகள் எல்லாக் காலத்தும் எல்லா தேசத்தும் ஒன்றேயாகும். மேற்கண்ட உண்மையை திருமூலரும் அழகாக சொல்லுகிறார்.

உரையற்ற தொன்றை உரைசெய்யும் ஊமர்காள்
கரையற்ற தொன்றை கரை காணலாகுமோ
திரையற்ற நீர் போல் சிந்தை தெளிவார்க்கு
புரையற் றிருந்தான் புரிசடையோனே


இறையின்பம் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது என்னும் அனுபவத்தை அகத் கஹானி என்று கபீரும் உரையற்றதொன்று என்று திருமூலரும் சிலாகிக்கின்றனர்.

கபீர் கையாண்டிருக்கும் ஊமையின் உதாரணத்தை பத்திரகிரியாரும் கையாளுகிறார்.

ஊமை கனாக்கண்டு உரைக்கறியா இன்பமதை
நாமறிந்து கொள்வதற்கு நாள்வருவது எக்காலம் ?

இனி கபீரின் ஈரடியை தமிழில் முயற்சிப்போம்.

அன்பெனும் பேரமுதை உரை செய்வார் யாரே
கன்னலின் தித்திப்பில் முறுவலித்தான் ஊமையே
(கன்னல்; கரும்பு)

மாற்று :

அன்பெனும் பேரமுதை உரை செய்வார் யாரே
அக்காரத் தித்திப்பில் முறுவலிப்பான் ஊமையே

(அக்காரம் :சருக்கரை, வெல்லம்)

உலகமே ஒரு சந்தை

உலகமே ஒரு சந்தை

தான் நெய்த துணிகளை சந்தையில் விற்பனை செய்தல் கபீருக்கு வாழ்க்கையின் ஓர் நிர்பந்தம். அப்படி செய்யும் பொழுது புத்திசாலியான வியாபாரி என்ன செய்ய வேண்டும் என்று உணர்த்துகிறார் இந்த வரிகளில்.

कबीरा खडा बजार मॆं मांगॆ सबकी खैर
न काहूं सॆ दोस्ती न काहूं सॆ वैर

கபீரா கடா பாஜார்மே மாங்கே சப் கா கெய்ர்
ந காஹ்உ சே தோஸ்தி ந காஹ்உ சே வைர்


சண்டை குணமுள்ள வியாபாரியிடம் யாரும் ஒதுங்கி செல்லுவர். அதி தோழமையுடன் பழகினாலோ அளவுக்கு அதிகமான சலுகை கோறுவர். இது இன்னொரு வகை இடையூறு. இதை கபீர் ஒரு வியாபாரி என்ற முறையில் பொருள் கொண்டால் மேற்பார்வைக்கு தெரியும் உண்மை.

இதையே அவரது உயர்ந்த ஆன்மீக நிலையை மனதில் வைத்துப் பார்த்தால் ஆழமான இன்னோர் உண்மையும் புலனாகும். இந்த உலகமே ஒரு சந்தைக் கடை. இங்கு வரும் நாம் ஒவ்வொருவரும் பெற விரும்பும் ஆன்மீக முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பது அளவிற்கு அதிகமான பாசமும் அல்லது வெறுப்புணர்ச்சியும் தான் காரணம். இதை ஒதுக்கி வாழத்தெரிந்தாலே எல்லோருக்கும் அமைதிகிட்டும் என்ற உண்மையை உணர்த்துகிறார் கபீர்.
சந்தையில் நின்றான் கபீர் சந்ததம் வாழ்த்தி இவ்வையம்
சந்ததம் நாடிலன் நட்பு, சந்ததம் விலக்குவான் வயிரம்
(வயிரம் : பகை)